Tuesday 19 January 2021

என் பார்வையில் 2020ன் சிறந்த குறுங்கதைகள் மற்றும் அல்புனைவுகள்

 சரவணன் மாணிக்கவாசகம் முகநூலில்

என் பார்வையில் என்பதே தனிப்பட்ட ரசனையில் என்று ஆகிவிடுகிறது. சொல்லப்போனால் விமர்சனமே நீள்வாசிப்பு அனுபவத்தைத் தனிப்பட்ட ரசனை என்னும் குதிரை மீது ஏற்றுவது தான். இன்னொன்று நான் உபயோகிக்கும் Sorting method. 2020ல் வெளிவந்திருந்தாலும் புத்தகத்தில் 2019 என்று இருந்திருந்தால் இதில் இடம்பெறாது. உதாரணத்திற்கு திருமதி பெரேரோ சிறுகதைத் தொகுப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது, ஆனால் புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட வருடம் 2021. தமிழில் Physical books வாங்குவது இன்னும் கடினமாக இருக்கிறது. நான் மறந்துவிடக்கூடாது எனப் பதிப்பகத்தாரை மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்ததும் நடந்திருக்கிறது. பொறுத்துக்கொண்ட ஜீவகரிகாலன், Zero Degree காயத்ரி, எதிர் Anush, Arun Dir. வசந்தி கலா, காலச்சுவடு ஜெபா, சாகித்ய அகாதமி ராவ் ஆகியோருக்கு நன்றிகள்.
குறுங்கதைகள்:
உண்மையில் ஐந்நூறு வார்த்தைகளுக்குள் அடங்கும் கதைகளில் கூறியதுகூறலும் அலுப்பான தொனியும் வராமல் எழுதுவது வெகுசிரமம். அதற்கு ஒரு Collageஐப் போல் பயிற்சி தேவைப்படுவது. குறுங்கதைகள் வழக்கமான சிறுகதைகளுக்குள்ள ஆரம்பம், நடுப்பகுதி, முடிவு ஆகியவற்றைக்கொண்டிருப்பதில்லை. 20/20 விளையாட்டைப்போலவே Settle ஆக நேரம் இருப்பதில்லை. இந்த விதிகளின்படி பார்த்தால் ஒரே ஒரு தொகுப்பு மட்டுமே பொருந்துகிறது.
1. ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய் -பெருந்தேவி.
ஐம்பத்தோரு குறுங்கதைகளின் தொகுப்பு. பெரும்பான்மையான கதைகள் குறுங்கதை Formatக்குள் உள்வருபவை, உணர்ந்து எழுதியவை. ஒருபக்கக் கதைகள் அல்ல குறுங்கதைகள். மிகவும் தீவிரமான ஒரு விசயத்தை, அதிகபட்ச வார்த்தை சிக்கனத்தோடு, மொழியின் லாகவத்தோடு சொல்வதே குறுங்கதைகள். Lydia Davisன் நான்குவரிக்கதை ஒன்றில் as if saying to the child 'dont move' என்ற வரிகள் உடல் முழுதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தும். பெருந்தேவி குறுங்கதைகளிலும் Fantasy, அமானுஷ்யம், erotic romance என பல பரிசோதனைகள் செய்திருக்கிறார். முக்கியமாகச் சொல்ல வேண்டியது மொழிநடை.
அல்புனைவுகள்:
1. சினிமா எனும் பூதம் - R P ராஜநாயஹம்::
முழுக்க முழுக்க சினிமா பற்றிய, கூகுளில் தேடி கண்டடைய முடியாத தகவல்கள் கொண்ட நூலிது. எதிரிருந்து பேசுவது போன்ற மொழிநடை இதன் சுவாரசியத்தைக் கூட்டும். பல பிம்பங்கள் உடைகின்றன. சில உண்மைகள் வெளி வருகின்றன. சினிமா எனும் பூதம் அடுத்து என்ன என்ன என்று கேட்கிறது. நகுலன் கவிதை, அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள், தி.ஜா எழுத்து, Baudelaire போன்றவர்களின் Quotes, லா ச ராவின் பாற்கடல் என்று இலக்கியமும் நடுநடுவே இவரை விட்டு விலகாமல் வருகின்றது. ஷேக்ஸ்பியர் நாடகத்தில் கிளியோபாட்ரா சீசரை நினைத்து சொல்கிறாள் "When I was green in judgment, cold in blood.." அதை ஸ்ரீதேவியின் மரணத்துடன் கொண்டு வந்து பொருத்துவது இவரால் மட்டுமே முடியும்..
2. உப்புவேலி- ராய் மாக்ஸம்- தமிழில் சிறில் அலெக்ஸ்:
சிறில் அலெக்ஸின் மொழிபெயர்ப்பு இதமாக, படிப்பதற்கு தங்கு தடையின்றி செல்கிறது. இரண்டு காரணத்திற்காக இந்த நூலை அவசியம் படியுங்கள். ஒன்று மறக்கப்பட்ட நம் வரலாறு. உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்பட்டிருக்க வேண்டிய ஒரு வரலாற்று சான்று நம் அறியாமையால் அழிக்கப்பட்டு விட்டது. இரண்டாவது இதை எழுதியவர் ஆங்கில வரலாற்றாசிரியர், ஆங்கிலேய அரசின் கொடுமைகளை பட்டியலிட்டிருக்கிறார்.
3. மூவர் - கே என் செந்தில்:
அம்பை,வண்ணதாசன்,ந.முத்துசாமி இவர்கள் மூவருக்கும் இருக்கும் ஒற்றுமை நாவலின் பக்கம்கூட இவர்கள் போகவில்லை. சின்னு முதல்..... நீண்ட சிறுகதை. நாவலின் கூறுகள் அதில் இல்லை. இவரது பார்வையில் மூவர் குறித்த தெளிவான சித்திரத்தைத் தந்திருக்கிறார். கிட்டத்தட்ட மொத்தக் கதைகளைப் படித்து அவர்கள் எழுத்தைப்பற்றி எழுதும் கட்டுரைகள் அருகி வரும் காலத்தில் இந்த நூல் முக்கியமானது. செந்திலிடம் இருந்து தொடர்ந்து இது போல் நூல்கள் வர வேண்டும்.
4. பாண்டியாட்டம்- நம்பி கிருஷ்ணன்::
நம்பி கிருஷ்ணனின் இந்தப் புத்தகம், காயசண்டிகை போன்ற வாசிப்புப்பசி கொண்ட வாசகர்களுக்கு ஒரு நுழைவாயிலாக விளங்கக்கூடும். இவரது தமிழ் சரளமாக ஒரு ambiguityக்கு வழியில்லாத வகையில் தெளிவாக உள்ளது. இவர் தொடர்ந்து எழுத வேண்டும். இது போன்ற புத்தகங்கள் நிறைய வரவேண்டும். படித்து முடித்து விட்டோம் என்று பரணில் போட முடியாமல் ஏதோ ஒன்றைக் குறிப்பெடுக்க வேண்டும் என்பதற்காக கைக்கெட்டும் தூரத்தில் அலமாரியில் வைக்கும் புத்தகம்
5. மண்ணில் உப்பானவர்கள் - சித்ரா பாலசுப்பிரமணியன்:
பல ஆளுமைகளைப் பற்றி ரத்தின சுருக்கமாக மூன்றாம் பகுதியில் தந்திருக்கிறார். நூலின் நடுவில் இவர் ஓரிடத்தில் சொல்வது போல், காந்திக்கு வாய்ந்த தளபதிகள் போல் செயல்வாய்ந்தவர் உலகின் எந்தத் தலைவருக்கும் வாய்ந்ததில்லை. (ஹிட்லரின் தளபதிகள் நாசவேலைகளில் அதிதீவிரம் காட்டினர்) அதுவும் கூட அவரது கொள்கைகளின் வெற்றிக்கு ஒரு காரணம். சித்ரா பாலசுப்பிரமணியன், எளிய ஆனால் அழுத்தமான வார்த்தைகளைக் கொண்டு சுருக்கமான அத்தியாயங்களில் இந்த நூலை வடிவமைத்திருக்கிறார்
6. இரவு- எலி வீஸல்- பிரஞ்சிலிருந்து ஆங்கிலத்தில் மரியன்வீஸல்- தமிழாக்கம்- ரவி.தி. இளங்கோவன்;
Holocaust நூல்கள் புனைவோ, அபுனைவோ எல்லாமே பயங்கரமானவை. மனித வரலாற்றில் கறை என்று சொல்லப்படும் நிகழ்வுகளை நிகழ்த்தியோர் அதற்குண்டான தண்டனையை அடைந்ததாக வரலாறே இல்லை. எப்போதும் அவர்கள் சொல்வது அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. நாஜி SS அதிகாரிகள் பலர் பொதுமக்களுடன் கலந்து விட்டனர். நாஜிகளை விட்டுவிடுவோம். விசித்திரப் பிறவிகள். அரை ரொட்டிக்கு ஏராளமானோர் அடித்துக் கொண்டதை வேடிக்கை பார்க்கும் ஜெர்மன் தொழிலாளர்கள் எந்த ரகம். ஆடன் நகரில் தண்ணீரில் நாணயத்தை வீசி எறிந்து பழங்குடிகள் தண்ணீருக்குள் பாய்ந்து, அதைப் போராடிக் கைப்பற்றுவதைப் பார்த்து ரசிக்கும் சுற்றுலாப்பயணிகள் எந்த ரகம்?
7. நெஞ்சம் மறப்பதில்லை - சித்ரா லட்சுமணன்:
ஐம்பது அத்தியாயங்கள் கொண்ட இந்த நூலில், ஆரம்பத்திலிருந்து சுவாரசியம் குறையாது எழுதியிருக்கிறார் சித்ரா லட்சுமணன். பலகாலம் சினிமாவுடன் தொடர்பு கொண்ட இவருக்குச் சொல்வதற்கு ஏராளமான விசயங்கள் சினிமா குறித்து இருக்கும். Controversial ஆக சின்ன விசயம்கூட இல்லாமல் இந்தநூலை எழுதியிருக்கிறார்.
8. நற்திரு நாடே- கார்த்திக் புகழேந்தி:
பத்து ஆழமான கட்டுரைகள். ஒவ்வொன்றும் வித்தியாசமான தலைப்பில். இந்தக் கட்டுரைகளுக்கு அதிகமான நேரம், பயணம், வாசிப்பு தேவைப்பட்டிருக்கும் கார்த்திக் புகழேந்திக்கு. சங்க இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், நூல்கள், இதழ்கள் என்று பலவற்றை படித்துத் தொகுக்கப்பட்ட கட்டுரைகள். உதவிய நூல்கள் மட்டும் சிற்றெழுத்தில் மூன்று பக்கங்கள் வருகின்றன. இவர் நன்றி சொல்லிய வெவ்வேறு ஊரைச் சேர்ந்த நூலகர்கள் ஒரு பத்தி முழுக்க வருகிறார்கள்.
9. கழிவறை இருக்கை- லதா:
ஒரு ஆண் தான் கொண்ட பல உறவுகள் ( அதில் முக்கால்வாசி கற்பனைக் கதைகள்) பற்றி ஒரு இராணுவவீரன் மெடல்கள் பற்றிச் சொல்லும் பெருமையுடன் பேசுவது போல் இங்கே பெரும்பான்மையான பெண்கள் பேசுவதில்லை. சுயசரிதை சாயல் வரும் நூல்களில் பெண்கள் சர்வ ஜாக்கிரதையைக் கையாளுகிறார்கள். சுதந்திரமான, தைரியம் வாய்ந்த பெண்களும் குடும்பத்தினருக்கு சங்கடத்தைக் கொடுக்க விரும்பவில்லை என்று சொல்லி இருக்கிறார்கள். இந்த சூழலில் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்து, உள்ளடக்கங்களிலும் அதே தைரியத்தைக் கடைபிடித்திருக்கிறார். நிச்சயமாக புத்தகத்திற்கு நிறைய Homework செய்திருக்கவும் வேண்டும். எல்லாவற்றையும் தாண்டி நேர்மையான எழுத்து. நிறைய லதாக்கள் தங்கள் கடிவாளங்களைக் கழற்றி எறிந்து எழுத வரட்டும்.
10. மெச்சியுனை..... - உமா சங்கரி:
பல அரிய புகைப்படங்களுடன், நினைவுகூரக்கூடிய தகவல்களை இந்த நூலில் பகிர்ந்திருக்கிறார். புத்தகத்தின் வடிவமைப்பும், கறுப்புவெள்ளைப் புகைப்படங்களும், புதுப்புத்தக மணமும், பழைய சோவியத் யூனியன் பத்திரிகை போல் வழுவழுப் பக்கங்களுமாய், இது போல் புத்தகங்கள் வந்தால் கிண்டில் வாசிப்பு குறைந்து விடும் போல் தோன்றுகிறது.
11. அழ நாடு - அ.உமர் பாரூக்:
இந்த சிறிய நூலிலேயே கல்வெட்டுகள் சிதைந்தது, புதைந்தது, பாதி அழிந்தது என்று பலமுறைகள் வருகிறது. வந்தவர் எல்லாம் கோயிலை சிற்பங்களை அழித்தனர். எஞ்சியவையே நம் பண்பாட்டு எச்சங்கள். அதையும் Archaeological Survey of India முக்கியத்துவம் கொடுத்துச் செய்யும் என்று சொல்ல இயலாது. பாலியல் வல்லுறவு, விவசாயப்போராட்டம் என்று எதுவானாலும் வடக்கில் ஆரம்பித்தது என்றால் தான் நமக்கும் ஒரு மரியாதை.
12. தேனொடு மீன் - இசை:
கதைகளைப் படிப்பவர் எல்லோரும் கதைகளைப் புரிந்து கொள்வார்கள். வார்த்தைகள் தாண்டிய அர்த்தத்தை நோக்கி பயணம் செய்யும் வாசகர் குறைவு. அதனாலேயே தி.ஜா, அசோகமித்ரன் போன்றவர்கள் முழுமையாகப் படிக்கப்பட்டதில்லை. முத்துலிங்கம் கதை ஒன்றுக்கான இவரது கட்டுரை, எதைக் கவனிக்கத் தவறுகிறார்கள் என்பதைக்கூறும் வழிகாட்டி. எவ்வளவு வேகமாகப் படித்தாலும் சில வார்த்தைகள்/வரிகள் கண்ணைக் கொக்கிபோட்டு இழுப்பது ஒரு பயிற்சி.
13. தனுஜா - தனுஜா சிங்கம்::
உங்கள் ஆன்மாவால் படிப்பீர்கள் என் கதையை என்று முடிக்கிறார் இந்த சுயசரிதையை. இதைவிட நேர்மையான ஒரு எழுத்தை நீங்கள் இதற்கு முன் படித்திருக்க வாய்ப்பில்லை. சக்திவாய்ந்த கதைக்கு அலங்கார மொழிகூடத் தேவையில்லை என்பது மறுபடியும் நிரூபணமாகி இருக்கிறது. நிறைய இடங்களில் பேச்சு வழக்கிலோ இல்லை எதிர் இருப்பவரிடம் சொல்லும் தொனியிலோ இருக்கும் மொழிநடை அதன் உள்ளட.கத்தால் அத்தனை உணர்வுகளையும், வலியையும் வாசகருக்குக் கடத்துகிறது.
14. நாத்திக குரு - இரா.முருகவேள்:
இருபது கட்டுரைகள் கொண்ட தொகுப்பு. சேரமான் மெக்கா போனாரா, ஸ்டாலின் காலத்தில் நடந்ததென்ன, ரஷ்ய இலக்கியங்கள், பெண்களின் சொத்துரிமை இவற்றோடு American Sniper, அசுரன் போன்ற படங்கள் குறித்த கட்டுரைகளும் உள்ளன. ஏற்கனவே கூறியது போல திரில்லர் நாவல்களில் ஏற்படுத்தும் பரபரப்பு மொழிநடையை பல கட்டுரைகளில் கையாண்டிருக்கிறார். வெறுமனே பரபரப்பு இல்லாமல் ஒவ்வொரு கட்டுரைக்கும் ஆழ்ந்த தகவல்களைத் தேடிக்கொண்டே கட்டுரை எழுத ஆரம்பித்திருக்கிறார். இணையத்தில் கிடைத்த சின்னத்தகவலைக் கொண்டு பேனைப் பெருமாளாக்குவது போன்ற கட்டுரைகள் இல்லை இவை.
நேற்றைய பதிவில் விடுபட்ட சிறுகதைத் தொகுப்பு:
எவ்வளவு கவனமாகப் பார்த்தாலும் Excel என்னை ஏமாற்றுகிறது. பாவெல் சக்தியின் சிறுகதைத் தொகுப்பு நேற்றைய பதிவில் விடுபட்டுள்ளது. I am really sorry பாவெல் சக்தி.
நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள் - பாவெல் சக்தி:
எட்டு நெடுங்கதைகள் கொண்ட தொகுப்பு. 374 பக்கங்களுக்கு எட்டு கதைகள் என்றால் சராசரி அளவை விடக்கூடியவை. வழக்கறிஞராகப் பணி புரிபவர் இவர். எட்டு கதைகளிலும் வழக்கும், நீதிமன்றமும்
கதை நகர்த்தும் காரணியாய் இருக்கின்றன. நீதிமன்றத்தின் அன்றாட விவரங்கள், வழக்கு எப்படிப் போகும், குறுக்குக் கேள்விகள் எப்படிக் கேட்கப்படும், பணம் பிடுங்கி வக்கீல்கள் எல்லாவற்றிற்கும் தயாராக இருப்பது என்று அனுதினம் இவர் பார்க்கும் காட்சிகள் கதையோடு கதையாய் விவரிக்கப்பட்டுள்ளன.

Saturday 16 January 2021

என் பார்வையில் 2020ன் சிறந்த புனைவுகள்

 சரவணன் மாணிக்கவாசகம் முகநூலில் எழுதிய பதிவு

2020 தமிழ் இலக்கியஉலகைப் பொறுத்தவரை சிறுகதைகளின் வருடம் என்றே கூறவேண்டும். கொரோனா இல்லாதிருந்தால், சென்னையின் பிரமாண்டமான புத்தகக்கண்காட்சி வழமை போல் இருந்திருந்தால், நாவல்களின் எண்ணிக்கை கணிசமாக கூடியிருந்திருக்கும்.
இந்தப்பட்டியலில் நான் வாசித்த 2020ல் வெளியாகி புத்தகத்திலும் 2020 என்ற ஆண்டைத் தாங்கிய நூல்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. எண்கள், ஏறுவரிசையிவோ, இறங்கு வரிசையிலோ, தரவரிசையைக் குறிக்கவில்லை.
நாவல்கள்:
1. தீம்புனல் – ஜி.கார்ல்மார்க்ஸ்
வித்தியாசமான ஆனால் உயிர்துடிப்புள்ள மனிதர்கள் வந்து போகிறார்கள். எத்தனையோ பேர் இருக்கிறார்கள் இந்தக் கதையில் ஆனால் காரணம் தெரியாமல் என் மனம் விசாலாச்சியை சுற்றியே வருகிறது. எல்லா கதாபாத்திரங்களுமே புகைமூட்டத்தின் ஊடாகத் தெரியும் உருவம் போல் மங்காமல் செதுக்கி வைத்ததைப் போல் இருக்கிறார்கள. இவரது மொழியின், கதை சொல்லலின் முதிர்ச்சி, இது இவரது முதல் நாவல் என்பதை சிரமப்பட்டு நம்பும் படி செய்கிறது. மொழிநடை அங்கங்கே வசனகவிதையாதலும் நிகழ்கிறது.
2. கழுதைப்பாதை- எஸ். செந்தில்குமார்
கழுதைப்பாதை குடும்பத்தைப் பிரிந்து சொற்ப வருமானத்திற்கு கால்கள் தேய அலையும் கூலிகள் பற்றிய கதை. முகட்டிலிருந்து போடி அடிவாரம், இருபத்திரண்டு மைல்கள், அதன் பின் அடிவாரத்திலிருந்து ஊருக்கு,, ஐம்பது கழுதைகளை காப்பித்தளர் பொதியுடன் மலைப்பாதையில் உருண்டு விடாமல், நரி, செந்நாய்க்கு காவு கொடுத்து விடாமல் முதலாளியிடம் சேர்ப்பிக்க வேண்டும். கொல்லத்திலிருந்து தஞ்சாவூருக்கும், வேதாரண்யத்திற்கும் நூறு மாடுகளில் உப்புமூட்டைகள் ஏற்றிக்கொண்டு நடை பயணம். புளியமரத்தின் கதை தாமோதரன் ஆசான் போல் இந்த நாவலில் மூவண்ணா வருகிறார். மூவண்ணா குடும்பத்தில் யாருக்கும் தெரியாத ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறது.
3. இடபம் - பா.கண்மணி:
இரண்டு காரணங்களுக்காக இந்த நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. முழுக்க முழுக்க பங்குசந்தையை மையமாக வைத்து எழுதப்படுவதுமன்றி இதில் கூறப்பட்ட எந்தத் தகவல்களும் பிழையில்லை.(factual errors) எனில் பங்குசந்தையை நன்கு அறிந்த ஒருவரால் எழுதப்பட்டது. நான் அடிக்கடி சொல்வது போல் பல்துறை வல்லுந‌ர் தமிழில் எழுத வரவேண்டும். இரண்டாவது அறுபதுகளில் பிறந்தவர்களுக்கேயான தயக்கங்கள் எல்லாவற்றையும் தொலைத்த Boldஆன எழுத்து.
4. நீர்வழிப் படுஊம்- தேவிபாரதி
நம் மண்ணின் கதை இது. வசவுகள், ஏச்சுப்பேச்சு, சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் நம்மால் மட்டுமே முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியும். படிக்கப்படிக்க அலைந்து, திரிந்து புழங்கிய பகுதிகள் நினைவுக்கு வருகின்றது. போய் நின்ற உடன், ஒரு செம்பு நிறைய தண்ணீர் கொடுத்துப்பின் வாங்க என்றழைத்த ஊர்கள். காருமாமாவின் இறுதிச் சடங்கிற்கான ஆயத்தங்களில் கதை ஆரம்பிக்கின்றது. பின் காலம் முன்னுக்கு நகர்கிறது.
5. ராஜவனம்- ராம் தங்கம்:
நாமும் சேர்ந்தே காட்டுக்குள் பயணம் செய்கின்றோம். உண்மையாய் வேலைபார்க்கும் வனக்காவலர் நடப்பு வழக்கப்படி இன்னல் அனுபவிக்கின்றார். ராம் தங்கத்திற்கு காடு நன்றாகத் தெரிந்திருக்கிறது. கற்பனையாகவோ, தகவல்களைத் தேடியோ இந்த நூலை எழுதமுடியாது. பெரியநாவல் வடிவில் வந்திருக்க வேண்டிய விஷயகனம் கொண்டது, பாதி வயிறு சாப்பிட்ட உணர்வு.
6. தவ்வை - அகிலா:
ஆங்கிலக்கவிதைகளில் வரும் அதே வார்த்தை சிக்கனத்தையும், அழுத்தத்தையும் இந்த நாவலிலும் பயன்படுத்தியிருக்கிறார். முழுக்கவே திருநெல்வேலி வட்டார வழக்கில் வரும் நாவல். பெண்ணின் அகஉணர்வுகளை வார்த்தைகளில் வடிக்கத் தெரிந்திருக்கிறது. தவ்வையின் Depressionக்கான காரணம் நமக்குத் தெளிவாகத் தெரிவது, இவருக்கு நாவலில் கிடைத்த வெற்றியாகவே கருத வேண்டும்.
7. ராமோஜியம் - இரா முருகன்:
நாவலின் நடுவே சிறுகதை வருகிறது. இல்லை இந்த சிறுகதையாலேயே இந்த நாவல் வந்தது. ஆரம்பத்தில் இருந்தே இரா. முருகனைப் படிக்கிறேன். வெகு சுவாரசியமான எழுத்துக்குச் சொந்தக்காரர். குறும்பு கொப்பளிக்கும் மொழிநடை எல்லோருக்கும் தெரியும் வண்ணமும் பூடகமாகவும் (உடும்புத் தைலத்தின் உபயோகம்?) நாவல் முழுதும் வருகிறது. மாயயதார்த்தமும் நடுவில் வந்தது தெரியாமல் வந்து போகிறது
8. பட்டக்காடு - அமல்ராஜ் பிரான்சிஸ்:
வன்னிக்கு வெளியே, அரசுக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து இறுதிப்போரை எதிர்கொண்ட இளைஞனின் கதையே இந்த நாவல். உண்மையில் நடந்த சம்பவங்களுடன் புனைவும் கலந்து வருகிறது.
9. ஆதுர சாலை - அ. உமர் பாரூக்:
கம்பம் போன்ற நகரமும் இல்லாத, கிராமமும் இல்லாத சிற்றூரில் ஏழ்மைக் குடும்பத்திலிருந்து, சிரமப்பட்டுப் படித்து, நேர்மையான சிந்தனைகள் கொண்ட இளைஞன் ஆய்வுக்கூடத்தில் மற்றும் மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்து, எதிர்கொள்ளும் அனுபவங்களே இந்த நாவல்.
10. புனைபாவை - இரா. முருகவேள்:
இரா.முருகவேளின் செம்புலம், முகிலினி நாவல்களைப் படித்தவர்கள் புனைவுடன் அவர் அசல் வரலாற்றைக் கலப்பதை அறிந்திருப்பார்கள். இந்த நாவலும் ஒரு புதிய கோணத்தில் நமது பழைய வரலாற்றை நம்முன் வைக்கிறது. இருபத்தெட்டு நூல்களை இந்த நாவலுக்கு குறிப்பெடுக்க உதவியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதையும் தாண்டிய உழைப்பும், முனைப்பும் இல்லாமல் இந்த நாவல் சாத்தியமில்லை. இது போன்ற நூல்கள் பரவலாக வாசிக்கப்பட்டு, வரவேற்பு பெறவேண்டும். கடந்தகால வரலாறு எதிர்காலத் தவறுகளைத் தவிர்க்க உதவும்.
11. சாலாம்புரி- அ. வெண்ணிலா:
வெண்ணிலாவின் மொழி அழகு. தன் கண்முன் விரிந்த சரித்திரத்தை இவர் எழுதலாமே என்று சிலநேரம் நான் நினைத்ததுண்டு. இந்த நாவல் அது தான். எத்தனை உயிரோட்டம் இதில்! இவருடைய சிறந்த படைப்புகளில் ஒன்றாய் என்றும் இருக்கப்போகும் நாவலிது.
12. குமிழி- ரவி:
இந்த நாவல் சுயஅனுபவங்களை நாவல் வடிவில் எழுதியது. ஈழத்தை விட்டுத் தப்பிக்குமுன் தன் இயக்க அனுபவங்களைக் கொடுத்துப் பாதுகாக்க வைத்திருந்தது அழிந்து போகிறது. முப்பத்தைந்து வருடங்கள் கழிந்து நாவல் உருவம் எடுத்து வருகிறது. நினைவிலிருந்து எழுதப்படுவதால் இறந்த பாண்டி வெளிநாடு தப்புவது போல் சிறு நினைவுப்பிழைகள் உண்டு. என்றாலும் இது ஒரு ஆவணம் என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. இது மற்ற போர்நாவல்களிலிருந்து வித்தியாசப்படுவதை வாசித்தவர்கள் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும்.
13. பேரருவி - கலாப்பிரியா:
உதுத்துத் தாளிச்சது, சுண்டக்கறி, அங்கனாக்குழி,முளைப்பாரி கரைப்பது, சீவிலி தூக்குவது, கவட்டாப்புள்,கோட்டிக்காரன், எருவி வச்சிறது, வல்லா வல்லடி, உளுத்தம் பருப்பு சோறும் எள்ளுத்துவையலும் (எனக்கு கூடவே கருப்பட்டி) என்று வரிசையாய் வரும் திருநெல்வேலி வட்டாரச் சொற்களும், கலாச்சாரமும் புரிந்தோர் கூடுதலாய் ரசிக்கலாம் இந்த நாவலை
14. லிங்கம் - ஜெயந்தி கார்த்திக்:
கண்டியூர் வட்டார மொழி கதை முழுதும் இதமாக வருடிக்கொடுக்கிறது
பார்த்த மனிதர்களையே கதையில் வடித்திருக்கிறேன் என்பது கதாபாத்திரங்களில் தெளிவாகத் தெரிகிறது. சில பக்கங்களே வந்து போகும் லதா, குழந்தையை அறைவதில் இருந்து வேப்பங்கொட்டை விலைக்குக் கொடுக்கப் பொறுக்குவது வரை ஒரு தெளிவான சித்திரம். குழந்தைகள் மேல் குடும்ப பாறாங்கல் சுமத்தப்படுகிறது. தோளில் தையல்இயந்திரத்தை சுமந்து செல்லும் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறோம். அவர்கள் குறித்து ஏதேனும் முழுநாவல் வந்திருக்கிறதா என் நினைவில் இல்லை.
15. யாம் சில அரிசி வேண்டினோம்- அழகிய பெரியவன்:
தலித் இலக்கியத்தை நுட்பமாக சித்தரிக்கும் வெகுசிலரில் அழகிய பெரியவனும் ஒருவர். கவசிநாதன், பதினைந்து, பதினாறு வருடம் படித்துப் பட்டம் வாங்கிவிட்டால் அதன்பிறகு எல்லாம் சுகமே என்ற கனவிலிருந்து, நிதர்சன வாழ்க்கையின் சூட்டுக்கோல் தகிப்பு தாங்காமல், பதறி விழிக்கும் லட்சோபலட்சம் இளைஞர்களின் பிரதிநிதி.
மொழிபெயர்ப்புகள்:
1. ஆயிரம் சூரியப் பேரொளிகள்- காலித் ஹுசைனி தமிழில் ஷஹிதா:
வெகு சில நாவல்களே தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆவலையும், இனிமேல் படிப்பது கடினம் என்ற எண்ணத்தையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தும். அத்தகைய நாவல் இது. இரண்டு பெண்களின் கதையினூடே ஆப்கானின் Soviet invasionல் இருந்து American bombing வரை மாறும் அரசியலும் கூடவே வருகிறது. சபிக்கப்பட்ட தேசம். ஷஹிதாவின் மொழிபெயர்ப்பைப் பற்றி புதிதாக என்ன சொல்ல இருக்கிறது. இதமான மொழிபெயர்ப்பு.
2. பார்வையற்றவளின் சந்ததிகள்- அனீஸ் சலீம்- தமிழில் விலாசினி:
குடும்பங்கள் நமக்கு பாதுகாப்பு தரும் புகலிடமாக இல்லாமல் இருக்கலாம், குடும்பங்கள் நாம் விரும்புவதை விட அடிக்கடி நம்முடன் முரண்படக்கூடும், ஆனாலும் நாம் யார் என்பதை நம் குடும்பங்கள் தான் வடிவமைக்கின்றன. நகைச்சுவையுடன் ஆரம்பிக்கும் நாவல் அதனுடனேயே தொடர்கிறது. ஆனால் வெகுசீக்கிரத்தில் நீங்கள் சிரிப்பதை நிறுத்தி இருப்பீர்கள். What a dark read it was!
3. கானல் நீர்- அப்துல்லா கான்- தமிழில் விலாசினி
அப்துல்லா கானின் நாவல் எந்த சமரசமுமின்றி, தங்கு தடையின்றி சீரான வேகத்தில் சொல்ல வேண்டியது எல்லாவற்றையும் சொல்கிறது. முந்நூறு பக்கங்களுக்குள் இத்தனை விசயங்கள் நிறைந்த நாவலை எழுத முடியுமா என்ற ஆச்சரியம் எழுகிறது. காமம் ஒரு சாதாரணனை சேணம், கடிவாளம் பூட்டி ஓடவிட்டுப் பார்த்து வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பத்திலும் லகானை இழுப்பதை நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார். ஆரம்பத்தில் சற்றே நாடகத்தன்மை கலந்திருந்தாலும் வெகு முதிர்ச்சியான எழுத்து. அதேபோல் சார்புநிலையின்றி, அடையாளச்சிக்கலின்றி இது போன்ற ஒரு நாவலைத் தருவதும் எளிதல்ல
4. மரக்கறி- ஹான் காங்- தமிழில் சமயவேல்:
மரக்கறி நாவல் முழுவதுமே தவிர்த்தல் என்ற ஒரு செயலைப்பின்னிப் படர்கிறது. இயாங்-ஹை சாதாரணனை மணந்த சாதாரண குடும்பத்துப் பெண். வலியுறுத்தல் எதுவும் செய்யாத எதிர்பார்ப்பு இல்லாத மனைவி. ஒருநாள் துர்கனவு ஒன்று கண்டு தான் முழுசைவத்திற்கு மாறியதாக கணவனிடம் சொல்கிறாள். மாமிசத்தை தவிர்க்கிறாள். கலவியைத் தவிர்க்கிறாள். அதன்பிறகு பொதுவாகப் பெண்கள் செய்யும் பலசெயல்களைத் தவிர்க்கிறாள். இறுதியில் மானுடத்தையே தவிர்க்கிறாள்.
5. உண்மை இராமாயணத்தின் தேடல்- ஜி.என். நாகராஜ்- தமிழில் கே.நல்லதம்பி:
ஐம்பது ஆண்டுகள் முன்பு கன்னடத்துமகாகவி குவெம்பு மற்றும் சமஸ்கிருத மகா நாடகஆசிரியன் பாசன் இருவரைப் படித்து இராமாயணத் தேடலைத் தொடங்கியவர். படித்த படிப்புக்கு சம்பந்தமில்லாத இராமாயண ஆய்வால் பலரின் கேலியை சம்பாதித்தவர். இந்தியா முழுவதும் நாட்டுப்புற, கோயில் ஆய்வுகள் உள்ளிட்ட பல ஆய்வுகள் செய்திருக்கிறார். கன்னடம், இந்தி, சமஸ்கிருதம், தமிழ் (கன்னடர் கம்பஇராமாயணத்தை முழுமையாகப் படித்திருக்கிறார்) மொழிகளில் எழுதப்பட்ட முக்கியமான நூல்களைப் படித்திருக்கிறார். தலபுராணங்களின் கதை, யக்ஷகான, நாட்டுப்புறக் கதைகளைக் கேட்டிருக்கிறார். பெங்களூரின் பல நூலகங்கள், ஆராய்ச்சி மையங்கள், தார்வாட் நூலகம், ஹைதராபாத், புதுதில்லி, கல்கத்தா நூலகங்களுக்குச் சென்று தகவல்களைத் திரட்டியிருக்கிறார். இவர் சொல்வது அறுதியான முடிவல்ல. ஆனால் ஒரு தனிமனிதனின் ஆர்வம் எங்கெல்லாம் கொண்டு சேர்க்கும் என்பதன் எடுத்துக்காட்டு இந்த நூல்.
6. யாத்வஷேம்- நேமிசந்த்ரா- தமிழில் கே.நல்லதம்பி:
இரண்டாம் உலகப்போர் நடக்கையில், தப்பிஓடிவந்த, முப்பது யூதக்குடும்பங்கள் பெங்களூரில் வாழ வந்தன, பின்னர் அவர்களில் சிலர் இறந்து, சுமார் ஐம்பது சமாதிகள், இஸ்லாமிய மயான நிலத்தில் ஒரு ஏக்கர் பிரிக்கப்பட்டு புதைக்கப்பட்டன, இப்போதும் மாதத்திற்கு அவர்கள் உறவினர், வரலாற்று வல்லுந‌ர் உட்பட மூன்று, நான்கு வருகை நிகழ்கிறது, இருபத்தைந்து ஆண்டுகளாக கல்லறையை ஒரு இஸ்லாமியக் குடும்பம் பராமரித்து வருகிறது என்ற விவரங்கள் பெங்களூரில் பல வருடங்கள் வசிப்பவர்களுக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதை மையமாகக் கொண்டு இந்த நாவல் ஆரம்பிக்கிறது.
7. மைனா- தெலுங்கில் சீலா வீரராஜூ- தமிழில் ராஜேஸ்வரி கோதண்டம்:
இது சாதாரணனின் கதை. சபலங்களும், சந்தர்ப்பங்களும் இழுத்த இழுப்பிற்குச் செல்லும் சராசரி மனிதனின் கதை. ஆரம்பத்தில் இருந்தே எந்த தேக்கமும் இன்றி வேகநடை போடும் கதை. சாயிபாபா எனும் மனிதனின் அகஉணர்வுகளைத் தெளிவாக வாசகர் புரிந்துகொள்ளச் செய்யும் மொழிநடை. ராஜேஸ்வரி கோதண்டம் இது வேறுமொழி நாவல் என்று சிறிதும் தோன்றாத அளவிற்கு மொழிபெயர்த்துள்ளார். நல்ல வாசிப்பனுபவத்தை அளிக்கும் நாவல்.
8. கடைசி வைஸ்ராயின் மனைவி- ரியனான் ஜென்கின்ஸ் ஸேங்- தமிழில் பத்மஜா நாராயணன்:
இந்த நூல் புனைவு. ஆனால் இதில் வரும் சம்பவங்களில் பலவும், கதாபாத்திரங்களும் நிஜம். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தழுவி இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. நமக்கு மிக வேண்டியவர்கள் கண்முன் இறந்தால் அந்த முகம் தான் நம் மனதில் உறைந்து போகிறது. எத்தனை முயற்சித்தும் அவர்கள் இளமைத் தோற்றம் நினைவுக்கு வருவதில்லை. பிப்பியின் கணவருடான இறுதிக்கணங்கள் ஒரு கவிதை.
சிறுகதைகள்
1. தாயுமானவள் - சு.வேணுகோபால்:
ஆறு கதைகள் கொண்ட தொகுப்பு. சு.வேணுகோபாலின் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான கதைபெஸ்டிகள். நுட்பமான உணர்வுகளை, விமர்சனப் பார்வையின்றி, பேருந்தில் ஜன்னல் வழியே பார்க்கும் காட்சிகள் மாறிக் கொண்டே வருவதைப் பார்ப்பது போலொரு அனுபவம். கதைக்குள் கதைகள் சிறுகதை வடிவத்தைக் கலைக்காமல் வருவது இவர் கதைகளின் தனித்துவம்.
2. துயிலாத ஊழ் - சமகால ஈழச்சிறுகதைகள்- தொகுப்பாசிரியர் அகரமுதல்வன்:
பத்து எழுத்தாளர்களின் பத்து கதைகள். வெவ்வேறு தரம் எனினும் சமகால ஈழ எழுத்தாளர்கள் என்ற வகையில் ஒரு புத்தகம். விடுபட்டவர்கள் (அகரமுதல்வனே இல்லை) இருப்பினும் இது பாராட்டப்படவேண்டிய ஒன்று. நிலம் ஒன்று. குரல்கள் வேறு. அடிவாங்கியவரின் வலியை அருகிருப்போர், அனுதாபம் கொள்வோரால் ஒருநாளும் முழுதாக உணர்ந்து கொள்ள முடிவதில்லை.
3. இறுதி வணக்கம்- சயந்தன்
சயந்தனின் ஏழு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது. ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைக்கருவைக் கொண்டவை. சயந்தனின் கதையுலகம் பரந்து விரிகிறது. கிழவனின் உயிர் கதையும், பூரணம் கதையும் நேரெதிர் திசையில் பயணிக்கின்றன. ஒரு சொட்டுக் கண்ணீர் மற்றும் கயல்விழி- தமிழரசி- சந்திரிகா இரண்டுமே ஸ்விஸ்ஸில் நடக்கும் கதைகள் என்றாலும் இரண்டாம் கதை தொடும் உயரங்கள் வேறு. சயந்தனின் தொடர் வாசிப்பு மொழிநடையின் செறிவில் தெரிகிறது. நல்ல தொகுப்பு இது.
4. அமீலா- ப.தெய்வீகன்
ஒன்பது கதைகள் அடங்கிய தொகுப்பு. என் பேரன் ஆம்பிள போன்ற கதைகள் தமிழில் சொல்லப்படாத கதைக்களம் எவ்வளவு இன்னும் மீதம் இருக்கிறது என்பதற்கு உதாரணம். பலர் நகைச்சுவையை கையை முறுக்கி, தரதரவென்று இழுத்து அழவைத்துக் கூட்டி வருகையில் தெய்வீகனிடம் நகைச்சுவை இயல்பாக வருகிறது. நகைச்சுவை மட்டுமல்ல, கதைசொல்லலிலும் ஒரு முதிர்ச்சி தெரிகிறது.
5. கச்சேரி - தி.ஜானகிராமன்
காவேரி ஆற்றொழுக்கு மொழிநடையால் சிரஞ்சீவி ஆன கலைஞன். உரையாடல்களில், அதற்கிடையே பொதிந்திருக்கும் மௌனங்களின் சத்தங்களில் வாசகர்கனை மயங்கவைத்த மந்திரவாதி. மீறல்களின் அழகியலை இலக்கியமாக்கிய எழுத்துச் சித்தன். வாழ்நாளில் ஒரே ஒரு எழுத்தாளரை மட்டுமே படிக்க முடியும் என்று நான் சபிக்கப்பட்டால், நான் சொல்லும் பெயர் தி.ஜாவாகத் தான் இருக்கமுடியும்.
6. சமாதானத்தின் கதை - ஜேகே:
போருக்குப்பின் வெளிநாடு சென்று தங்கிய இளம் தலைமுறையினரின் கதை பெரும்பாலும் அந்த நிலத்தின் கதை தாய்நிலத்தின் தொடர்போடு இருக்கும். இவரது கதைகள் பெரும்பாலும் வயதானவர்களுக்கு ஏற்படும் அடையாளச் சிக்கல்கள் ( அடிக்கடி நீங்கள் இந்தியாவா என்று கேட்போரிடம் இலங்கை என்று சொன்னாலும் புரிவதில்லை), அலைக்கழிப்புகள், எப்படியும் ஊர் திரும்பவேண்டுமென்ற ஆசை, குடும்பத்தைப் பிரிந்த ஏக்கம் எல்லாம் வந்தாலும் ஒவ்வொன்றுமே வித்தியாசமான கதைகள்.
7. கடுவழித்துணை- கமலதேவி:
பதினைந்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. கதைகள் முன்னும் பின்னுமாக எந்த அறிவிப்புமின்றி நகர்கின்றன. நனவோடையில் மனம் தோய்ந்து பின் மீள்கிறது. ஒரு வரி இல்லை என்றால் ஒரு உரையாடலில் கதையின் உயிர்நாடி ஒளிந்திருக்கிறது. நேர்க்கோட்டுக் கதை சொல்லலில் வாசித்துப் பழகியவர்கள் ஒரு தடவைக்கு மேல் கதையைப் படிக்க வேண்டியிருக்கும். வட்டாரவழக்கு அநேகமான கதைகளில். மாயை போன்ற சிறுகதையை எழுதிய கைகள் தமிழ் சிறுகதைத் தளத்தில் பல நல்ல கதைகளைத் தரப்போகும் கைகள்.
8. அநீதிக்கதைகள் - அருண்.மோ:
பத்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது. ஒன்றுக்கொன்று சற்றும் சம்பந்தமில்லாத பத்து வித்தியாசமான கதைகள். யுத்திகளும் மாறுகின்றன. கதை சொல்லலும் திரைக்கதை போல, Visual effect கொண்ட முதல் கதையிலிருந்து, பசி போல Poe பாணியில் சொல்லும் கதைகள் வரை வித்தியாசப்படுகின்றன.
9. மாயம்- பெருமாள் முருகன்:
வழமை போல் விவசாய, நடுத்தர வர்க்கத்தின் கதைகள் இவை. கதைக்கரு என்று இல்லாமல் சின்ன சம்பவங்களை, உணர்வுகளைக் கதையாக்கியிருக்கிறார். சில நல்ல கதைகளும், சில சராசரிக் கதைகளும் கலந்த தொகுப்பு. ஆனால் எல்லாக் கதைகளிலுமே பெருமாள் முருகனின் Touch இருக்கிறது.
10. உச்சை- ம.நவீன்:
ஒன்பது கதைகள் கொண்ட தொகுப்பு இது. மாயம், அமானுஷ்யம் போலத் தோற்றமளிக்கும் எல்லாக் கதைகளிலும் கடைசியில் Realityயே தங்கிவிடுகிறது. நிறையக்கதைகளில் இருவருக்கு இடையே நடைபெறும் Mind game கதையாகி இருக்கிறது. சில கதைகள் பேய்ச்சியின் தொடர்ச்சி போல் காட்சியளிக்கின்றன. ஒரு Subtle humour அநேககதைகளில் இழையோடுகிறது.
11. ஆனந்த நிலையம் – பாவண்ணன்
எளிய மனிதர்களின் எளிய கதைகள். உரையாடல்கள், வர்ணனைகளில் கதையின் அழுத்தத்தைக் கூட்டுகிறார். வண்ணதாசனின் கதைகளில் வருவது போலவே இவர் கதைகளிலும் எல்லோரும் நேசத்தால் நிறைந்த மனிதர்கள். நேசமில்லா மனிதர்கள் வந்தாலும் அவர்கள் கோணத்தில் கதை நகர்வதில்லை.
12. அவளது வீடு- எஸ்.ராமகிருஷ்ணன்
இருபது சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. எஸ்.ரா வின் மொத்த கதைகளிலிருந்து பத்து வாசகர்கள் அவர்களுக்கு சிறந்த கதைகள் என்று தோன்றியதை தேர்வு செய்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் எஸ்.ராவின் பலம் என்பது அவரது சிறுகதைகளில் தான் என்று தோன்றுகிறது.

Thursday 14 January 2021

இருபதாண்டு கால தமிழ் நாவல்கள்

 

சுனீல் கிருஷ்ணன் 


|(மார்ச் மாத அந்திமழை இதழில் இருபதாண்டு கால தமிழ் நாவல்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். நியாயப்படி இது நண்பர் ஜா. ராஜகோபாலன் எழுதியிருக்க வேண்டியது. கடைசி நேரத்தில் என்பக்கம் திருப்பிவிட்டுவிட்டார். ஒருமாத காலம் அவகாசம் கேட்டேன். அதுவும் சாத்தியமில்லை, இது ஒரு தொடர் கட்டுரை என சொல்லிவிட்டார். ஜனவரி மாத சிறுகதை குறித்தான கட்டுரையில் 'அம்புப் படுக்கை' இடம் பெற்றாலும் கூட அது சரியான அல்லது முழுமையான கட்டுரையாக உருக்கொள்ளவில்லை. என்னால் எதற்கும் சட்டென மறுப்பு சொல்ல முடிவதில்லை. ஆகவே இந்த பரிசோதனை முயற்சியை ஒப்புக்கொண்டு இரண்டு நாட்களில் எழுதி முடித்தேன். எழுதி ஓரளவு பரந்துபட்ட வகையில் எல்லா முக்கிய எழுத்தாளர்களையும் உள்ளடக்கிய ஒரு வடிவத்தில் கட்டுரை உருக்கொண்டது என எண்ணியிருந்தேன். எழுதி அனுப்பிய பிறகு தான் சில குறிப்பிடத்தக்க விடுபடல்கள் உள்ளதை கவனித்தேன். யூமா வாசுகியின் ரத்த உறவுகள், ஃபிரான்சிஸ் கிருபாவின் 'கன்னி' கலாப்ரியாவின் 'வேணல்'  அழகிய பெரியவனின் படைப்புகள் போன்றவை முக்கிய விடுபடல்கள். இவைத்தவிர அபிலாஷின் 'கால்கள்' தவசியின் 'சேவற்கட்டு'  போன்ற பல நாவல்கள் விடுபட்டிருக்க கூடும். ஈழத்தில் 'தேவகாந்தன்' சிங்கப்பூரில் 'சித்துராஜ் போன்ராஜின் நாவல்களும் நழுவிவிட்டன. இத்தகைய முயற்சி ஆபத்தானது. சிக்கலை தருவிப்பது. முழு இது பட்டியல் அல்ல என சொல்லிக்கொண்டாலும் கூட பட்டியல்தன்மை கொண்டது என நம்பப்படுகிறது. நிச்சயம் சிலருக்காவது வருத்தத்தை தருவிப்பது. கொஞ்சம் தவறினாலும் வெறும் பட்டியலாக சுருங்கிவிடும் ஆபத்து கொண்டது. எனினும் இதை ஒரு தொடக்க வரையறையாக கொள்ளலாம். இப்படி வேறு சில எழுத்தாளர்களும் விமர்சகர்களும் இருபது ஆண்டுகால நாவல்கள் குறித்து எழுதும்போது இயல்பாக இந்த விடுபடல்கள் நிறைவுறும்)
--

நவீனத் தமிழ் இலக்கியத்தின் இரு தொடக்கப் புள்ளிகள் என கவிதைக்கு பாரதியையும் புனைவுக்கு புதுமைபித்தனையும் அடையாளம் காட்டுவது வழக்கம். பாரதியில் தொடங்கிய கவிமரபு பல பெரும் கவிகளை உருவாக்கி இன்றுவரை வளமாக பெருகி வருகிறது. புதுமைப்பித்தனின் வெளிப்பாட்டு வடிவம் சிறுகதையாகவே இருந்தது. தொடக்கத்திலிருந்தே சிறுகதையில் பல மேதைகள் உருவாகி அந்த தளத்தை செறிவாக்கினார்கள். இன்று தமிழில் புதிதாக சிறுகதை எழுதவரும் எழுத்தாளருக்கு மூதாதையின் பளுவை கடந்து புதிதாக எழுத வேண்டிய நிர்பந்தம் உள்ளது ஒருவகையில் வரம் இன்னொரு வகையில் சவால். முன்னோடிகள் உருவாக்கியளித்த இவ்விரு வெளிப்பாட்டு வடிவங்களும் இன்றுவரை தழைத்து வளர்வதை உணர முடிகிறது. இந்த கட்டுரை கடந்த இருபது ஆண்டுகால தமிழ் நாவல் இலக்கியத்தின் செல்திசையை பற்றியதே அன்றி சிறந்த நாவல்களுக்கான பட்டியல் அல்ல. இதுவும் கூட பக்க வரையறைக்கும் ஞாபக வரையறைக்கும் உட்பட்டு செய்யப்படும் ஒரு முயற்சி மட்டுமே. ஏனெனில் இத்தகைய பேசுபொருள் ஒரு முனைவர் பட்ட ஆய்வு அளவிற்கு விரித்து எழுதப்படவேண்டியது. வரலாறு சார்ந்த ஒரு கோணத்துக்கு முக்கியத்துவம் அளித்து நாவல்களில் ஏற்பட்டுள்ள பரிணாமத்தை அடையாளம் காண முயல்கிறது.

புதுமைபித்தனின் காலத்தில் மலையாளத்தில் தகழி சிவசங்கரம் பிள்ளை செம்மீன், தோட்டியின் மகன் போன்ற ஆக்கங்களை உருவாக்கிவிட்டார். தமிழில் பரப்பிலக்கிய தளத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன்  மற்றும் சிவகாமியின் சபதம் தமிழ் நாவலின் அடையாளமாக நிலைபெற்றிருந்த போது கன்னடத்தில் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் ‘சிக்கவீர ராஜேந்திரனை எழுதிவிட்டார். மண்ணும் மனிதர்களும், சோமன துடி போன்ற பெரும் ஆக்கங்கள் உருவாகிவிட்டன. இந்தியில் கோதான் வெளிவந்தது.  வங்காளத்தில் விபூதி பூஷன் பந்தோபத்யாயா, தாரா சங்கர் பானர்ஜி, அதீன் பந்தோபத்யாயா என பலரும் அபாரமான உயரங்களை நாவலில் அடைந்துவிட்டார்கள்.

பிற மொழிகளை ஒப்பிடும்போது தமிழில் நாவல் மரபு சற்று வேறுபட்ட தொடக்கத்தையே கொண்டிருந்தது.  க.நா.சுவின் ‘பொய்த்தேவு’ லாசராவின் ‘அபிதா’, தி.ஜாவின் ‘மோக முள்’ ஆகியவை நம் தொடக்க கால நாவல்கள். கல்கி, சாண்டில்யன் போன்றோர் வரலாற்று புனைவுகள் வழியாக வெகு மக்கள் ஏற்பை பெற்றவர்கள் ஆனார்கள். ஆகவே நவீன இலக்கியம் அவற்றை நிராகரித்து தனது இருப்பை தக்கவைத்துக்கொள்ள தனிமனித சுயத்தை அதிகமும் பேசு பொருளாக்கிக் கொண்டது.  ‘கரைந்த நிழல்கள்’ ‘கிருஷ்ணப் பருந்து’ ‘பள்ளிகொண்டபுரம்’ என பல தமிழ் நவீன செவ்வியல் நாவல்கள் எல்லாம் இவ்வகையின் நீட்சியே. வரலாற்று, பண்பாட்டு தடயங்கள் மிக சன்னமாகவே இவற்றில் வெளிப்பட்டன. தொடக்ககால நாவல்கள் அதிகமும் அகத்தையே பேசின. புறத்தை பேசிய மார்க்சிய பின்புல நாவல்கள் அதீதமாக அப்பக்கம் சாய்ந்தன. இப்போது நோக்குகையில் ஜெயகாந்தன் இதை ஓரளவு சமன்படுத்த முயன்றார் என அடையாளப்படுத்த முடிகிறது. அகத்திணையின் கூர்மையும் சமூக பிரக்ஞையின் விழிப்புணர்வும் கொண்ட எழுத்து. ஆனால் தீவிர நவீன இலக்கியம் அவரை பெரிதாக கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது. இந்நிலையில்  இன்று தமிழின் முக்கியமான நாவலாக கொண்டாடப்படும் ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் ஆகியவை அவர் அதை எழுதிய காலத்தில் கவனிக்கப்படடவில்லை. இன்றைய தமிழ் நாவல் தாமதமாக என்றாலும் கூட, சிங்காரத்தை தன் முன்னோடியாக கண்டுகொள்கிறது என சொல்லலாம்.

தமிழ் நாவல்களின் முனைப்பான காலம் எண்பதுகளின் பிற்பகுதியிலிருந்து தொடங்குகிறது என தோராயமாக சொல்லலாம். தொன்னூறுகளில் அது வேகம் கொள்கிறது, இரண்டாயிரங்களில் உச்சம் கொள்கிறது என்றே சொல்ல வேண்டும். கடந்த இருபது ஆண்டுகளில் தமிழில் எழுதப்பட்டுள்ள நாவல்களில் முக்கியமானவை பலவும் தொண்ணூறுகளில் உருவாகி வந்த எழுத்து தலைமுறையால் உருவாக்கப்பட்வை தான். இக்காலகட்டத்தில் நாவல் குறித்தான உரையாடலை வடிவமைத்த ஆற்றல்கள் என சிலவற்றை சுட்டிக் காட்டலாம். பின் நவீனத்துவம் மற்றும் கோட்பாட்டு சொல்லாடல்கள், தலித் இயக்கம், லத்தீன் அமெரிக்க இலக்கிய மொழியாக்கங்கள் என இவை மூன்றும் தமிழ் இலக்கிய மரபுடன் மோதி பல புதிய வெளிப்பாட்டு முறைகளை உருவாக்குகின்றன. நாவல் என்பது தத்துவத்தின் கலைவடிவம் எனும் வாதம் பேசப்படுகிறது. நாவல் தனிமனிதரின் அலைக்கழிப்புகளை மன அவசங்களை சொல்வதோடு நிற்க வேண்டியதில்லை எனும் நிலைக்கு விவாதம் வளர்கிறது. வரலாற்றுடன் அவருக்கிருக்கும் ஊடுபாவு என்ன என்பதே கேள்வியாகிறது.

 கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு சில காரணிகளை அடையாளப்படுத்தலாம்.  உலகமயமாக்கம், இணைய வசதி, கணினி தட்டச்சு ஆகிய மூன்றும்  மிக முக்கியமான தாக்கங்களை செலுத்தின. குறிப்பாக இரண்டாயிரங்களில் ஆழி சூழ் உலகு, கொற்றவை, மணல் கடிகை என கணிசமான பெருநாவல்கள் வரத் தொடங்கியதற்கு கணினி தட்டச்சு ஒரு காரணி என தோன்றுகிறது. உலகமயமாக்கம் மற்றும் இணையம் பல உலக எழுத்தாளர்களை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. புத்தகங்களை எளிதாக பெற வழிவகை செய்கிறது. 



இந்திய செவ்வியல் மரபைப் பற்றி சொல்லப்படும் மிக முக்கியமான குற்றச்சாட்டே அது வரலாற்று நீக்கம் செய்கிறது என்பதைத்தான். அரிதாகவே படைப்பை உருவாக்கியவர் பற்றி அறிகிறோம், படைப்பில் வரலாற்று தகவல்களை பொருத்தங்களை தேடுவது இன்னும் சிரமம். ஒரு குறிப்பிட்ட அரசு, குறிப்பிட்ட காலம் என்பதற்கான தடையங்களை அழிப்பதன் வழியாக காலாதீத தன்மையை அடைவதே அவற்றின் நோக்கமாக இருந்தன. நவீனத் தமிழ் இலக்கியமும் வரலாற்று நீக்கத்தை ஒரு எதிர்வினையாக கைக்கொண்டது. தொன்னுருகளின் உரையாடல் பிரதிக்குள் இருக்கும் மனிதனை வரலாற்று மனிதனாக, சமூக மனிதனாக உருவகிக்கத் தொடங்கியது. இந்த மிக முக்கியமான மாற்றம் தான் இன்றைய நாவலுக்கு முன்னோடியாக சிங்காரத்தை கொண்டாட வைத்தது.

வரலாறை எழுதுதல், நுண் வரலாறை எழுதுதல், மாற்று வரலாறை அல்லது இணை வரலாறை எழுதுதல், வரலாற்றை திருகுதல் என தமிழ் இலக்கியம் நான்குவிதமான உரையாடலை வரலாற்றுடன் நிகழ்த்த தொடங்கியது.

பிரபஞ்சனின் வானம் வசப்படும் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பை அடிப்படையாக கொண்டு எழுதப்பட நாவல். வரலாற்று நாவலின் தொடக்கப்புள்ளி. தொண்ணூறுகளில் தான் சி.சு செல்லப்பா தனது வாழ்வின் இறுதி காலத்தில் ‘சுதந்திர தாகம்; நாவலை எழுதுகிறார். சு. வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ நாயக்கர் கால வரலாறை புனைவாக ஆக்கிய மிக முக்கியமான முயற்சி. அ.வெண்ணிலா, மு. ராஜேந்திரன் ஆகியோர் இத்தளத்தில் சில ஆக்கங்களை எழுதி வருகிறார்கள். சரவண கார்த்திகேயனின் ‘ஆப்பிளுக்கு முன்’ காந்தியின் பாலியல் சோதனையை பின்புலமாக கொண்டது. கடந்த ஆண்டு மிகவும் கவனிக்கப்பட்ட நாவல்களில் ஒன்றான சுளுந்தீயையும் இப்படி வகைப்படுத்தலாம். வரலாற்று நாவல்களின் சவால் என்பது தகவல்களையும் புனைவுகளையும் எந்த விகிதத்தில் கலந்து சமநிலையை அடைகிறோம் என்பதில் உள்ளது. தகவல் குவியலாக ஆக்காமல் படைப்பூக்கத்துடன் வரலாற்றை கையாள்வதில் உள்ளது. பூமணியின் 'அஞ்ஞாடி' இவ்வகையில் மிக முக்கியமான முயற்சி. ஜெயமோகனின் 'வெள்ளை யானையும்' வரலாற்று புனைவாக கவனப்படுத்த வேண்டிய முக்கிய முயற்சி. 

வரலாற்று கதை மாந்தர்களை தவிர்த்து வாழ்க்கைமுறை ஆவணம் என சொல்லத்தக்க மானுடவியல் நோக்கில் முக்கியமான முதல் முயற்சிகள் பலவும் இந்த இருபது ஆண்டுகளில் நிகழ்ந்தன. கி.ராவின் கோபல்ல நாவல் தொடர்களை ஒரு இனக்குழு வரலாறாக கொள்ள முடியும். அதுவே இவ்வகை நாவல்களின் முன்னோடி.  தொண்ணூறுகளில் வெளிவந்த இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’ இவ்வகை எழுத்துக்களின் நவீன கால முக்கிய மைல்கல் முயற்சி அவருடைய ‘செடல்’ குறிப்பிட்ட ஒரு வகையான ஆட்டக்காரர்களின் வாழ்வை சொல்கிறது. ஜோ டி குரூசின் ‘ஆழி சூழ் உலகு’, ‘கொற்கை’ ஆகியவை பரதவர்களின் வாழ்வை சொல்பவை. கிறிஸ்தோபர் ஆண்டனியின் ‘துறைவன்’ முக்குவர் எனும் குறிப்பிட்ட மீனவக் குழுவை பற்றி பேசுகிறது. எஸ்.செந்தில்குமாரின் ‘காலகண்டம்’ பொற்கொல்லர் சமூகத்தின் சித்திரத்தை அளிப்பது. அவருடைய அண்மைய நாவலான ‘கழுதைபாதை’ போடி குரங்கணி பகுதியில் கழுதை மேய்ப்பவர்கள் மற்றும் முதுவான்குடி எனும் பழங்குடி மக்கள் பற்றிய முதல் சித்திரத்தை அளிக்கிறது. ச.பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’, பழங்குடி வாழ்வை ஆவணப்படுத்துகிறது. லக்ஷ்மி சரவணகுமாரின் 'கானகன்' பளியர் வாழ்வை பேசியது. ஏக்நாத்தின் ‘கிடை காடு’ , ‘ஆங்காரம்’ போன்றவை மேய்ச்சல் தொழிலை பற்றிய நுண்மைகளை பேசுபவை. நக்கீரனின் 'காடோடி' காட்டை நுண்மையாக எழுத்தாக்கியது.  வேல ராமமூர்த்தி, சி.எம். முத்து போன்றோரை இவ்வகை எழுத்தாளர்கள் என புரிந்து கொள்ளலாம்‌.

வரலாற்று நாவல்களின் சட்டகங்கள் சற்றே இறுக்கமானவை. அத்தோடு ஒப்பிட நுண் வரலாற்று நாவல் எழுதுவது சற்றே சுலபம். வரலாற்று நாவல்கள் வரலாற்று பாத்திரங்களை, வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டவை. நுண் வரலாற்று நாவல்கள் வரலாற்று நிகழ்வுகளை சாமானியர்களின் தளத்திலிருந்து அனுகுபவை. இத்தளத்திலே பல நாவல்கள்; ததமிழில் எழுதப்பட்டுள்ளன. பி.ஏ. கிருஷ்ணனின் ‘புலி நகக் கொன்றை’ ஒரு வம்சத்தின் கதையை சொல்கிறது. மேற்சொன்ன நுண்வரலாற்று தன்மையை பயன்படுத்தி எழுதப்பட்ட சிறந்த நாவல்களில் ஒன்று. ஒரு தீப்பெட்டியில் வரையப்பட்ட ஓவியத்தின் வழியாக திராவிட அரசியலின் சமூக பரிணாமத்தை தமிழ்மகனின் வெட்டுப்புலி சொல்ல முயல்கிறது. இப்படி ஏதேனும் ஒரு பொருளின் வரலாறை எழுதத் தொடங்கி ஒரு காலகட்டத்தின் வரலாறை நாவலாக நம்மால் எழுதிவிட முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஒரு நகரத்தின் பரிணாமத்தை பாத்திரங்களின் ஊடாக சொல்லும் எம்.கோபாலகிருஷ்ணனின் ‘மணல் கடிகை, கண்மணி குணசேகரனின் ‘வந்தாரங்குடி’ தமிழ் பிரபாவின் 'பேட்டை'  போன்றவைகளும் நுண் வரலாற்று சித்திரத்தையே அளிக்கின்றன. சு.வேணுகோபாலின் 'நிலம் எனும் நல்லாள்' கிராமம் நீங்கி நகருக்கு இடம்பெயரும் வேளாண் குடியின் வாழ்வை சொல்கிறது. சோ. தர்மனின் 'சூல்' நீர்நிலை சார்ந்து சீரழிவின் வரலாறை பதிவு செய்கிறது. பெருமாள் முருகனின் மாதொருபாகன் தனி மனிதர்களின் வாழ்வை சமூக பண்பாட்டு தளத்தில் அனுகுகிறது. கடுமையாக எதிர்க்கபட்டு தமிழகத்திற்கு வெளியே மிக பரவலாக அறியப்பட்ட முதல் தமிழ் நாவல் எனும் இடத்தை அடைந்தது. தமிழ் எழுத்தின் சர்வதேச முகமாக இந்த ஆண்டுகளில் பெருமாள் முருகன் அறியப்படுகிறார். 

 ‘போர் எனும் வரலாற்று நிகழ்வை பின்புலமாக கொண்டு பல்வேறு ஈழ நாவல்கள் இந்த இருபது ஆண்டுகளில் வெளிவந்துள்ளன. ஷோபா சக்தியின் ‘ம்’ ‘கொரில்லா’ ‘பாக்ஸ் கதைகள்’ அண்மையில் வெளிவந்திருக்கும் ‘இச்சா’ வரை அனைத்துமே முக்கியமான நாவல்கள். குணா கவியழகனின், தமிழ்நதியின் நாவல்களும் இதே பின்புலத்தை பேசுபவை. சயந்தனின் ‘ஆறா வடு’ மற்றும் ‘ஆதிரை’ ஈழ பின்புலத்தில் எழுதப்பட்ட மிக முக்கியமான நாவல்கள். கடந்த ஆண்டு வெளிவந்த ம.நவீனின் ‘பேய்ச்சி’ மலேசிய தமிழர் வாழ்வை பற்றிய நுண் வரலாற்று சித்திரத்தை அளிக்கும் முக்கிய நாவல். சீ.முத்துசாமியின் ‘மண்புழுக்கள்’ மற்றும் ‘மலைக்காடு’ ஆகியவையும் இந்த இருபது ஆண்டுகளுக்குள் வெளிவந்த முக்கிய மலேசிய நாவல்கள்.   

.   வெவ்வேறு தொழில் சார்ந்தும் நுண் வரலாற்று நாவல்கள் எழுதப்படலாம். சுப்ரபாரதி மணியன் நெசவு சாயப்பட்டறை சார்ந்து பல ஆக்கங்களை எழுதி வருகிறார். கணினி மற்றும் தகவல் தொடர்புத்துறை சார்ந்தும் சில நாவல்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. இரா.முருகன், செல்லமுத்து குப்புசாமி, வினாயகமுருகன் ஆகியோர் எழுதி இருக்கிறார்கள். கார்த்திக் பாலசுப்பிரமணியத்தின் ‘நட்சத்திரவாசிகளை’ குறிப்பிடத்தக்க முயற்சியாக சொல்லமுடியும்.

பெண் எழுத்துக்கள் கூர்மையான தன்னிலையில் வாழ்வனுபவ வெளியிலிருத்து உருவாகுபவை. தனித்த பேசுபொருள் மற்றும் கூறுமுறை காரணமாக தனித்தன்மையை அடைபவை.  சிவகாமியின் 'ஆனந்தாயி' உமாமகேஷ்வரியின் 'யாரும் யாருடனும் இல்லை' பாமாவின் 'கருக்கு' சல்மாவின் 'இரண்டாம் ஜாமங்களின் கதை' போன்றவை இந்த காலகட்டத்தில் வெளியான குறிப்பிடத்தக்க பெண் எழுத்துக்கள். இஸ்லாமிய வாழ்வை எழுதிய முன்னோடி என தோப்பில் முகமதுமீரானை சொல்லலாம். கீரனூர் ஜாகிர் ராஜாவின் துருக்கி தொப்பி புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்களுடன் ஒப்பிடத்தக்க முக்கியமான ஆக்கம். அர்ஷியா, மீரான் மைதீனின் ஆக்கங்களும் இவ்வரிசையில் வருபவை‌ 

இணை வரலாறு அல்லது மாற்று வரலாறை எழுதுவதில் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் மற்றும் பின் தொடரும் நிழலின் குரல் ஆகியவை முக்கிய முன்னோடி ஆக்கங்கள். பெருங்கதையாடல் வடிவத்தை கைக்கொள்ள முயல்கின்றன. வெவ்வேறு மெய்யியல் தரப்புகளின் மோதலை உருவாக்குகிறார். அரவிந்தின் 'சீர்மை' சிறிய அளவில் என்றாலும் தத்துவ மோதல்களை வரலாற்று ஆளுமையின் பின்புலத்தில் நகர்த்துகிறது. மாற்று வரலாறு எழுத்துக்கள் நாட்டாரியல் மற்றும் தொன்மங்களை மீளுருவாக்கம் செய்தன. ஜெயமோகனின் ‘கொற்றவை’ மற்றும்  இப்போது எழுதிக்கொண்டிருக்கும் ‘வெண் முரசு’ தொடர் நாவல்கள் இவ்வகையை சேர்ந்தவை. பல தொகுதிகள், பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் நீளும் ஒரு அரிய முயற்சி. நவீன கால அறிதல்களை கொண்டு பாரதத்தை மீளுருவாக்கம் செய்கிறார். ஃபிராய்டு, யுங், கிராம்ஷி என பலருடைய அறிதல்கள் பாரத கதையாடலோடு இணைகிறது. முருகவேளின் ‘மிளிர் கல்’ கண்ணகியை நவீன தளத்தில் மீளுருவாக்கம் செய்ய முயல்கிறது. கோணங்கியின் நாவல்களையும் இவ்வரிசையிலேயே ஒருவர் வைக்கக்கூடும். பூமணியின் ‘கொம்மை’ மகாபாரதத்தை நாட்டாரியல் தளத்தில் மறு உருவாக்கம் செய்கிறது. எஸ். ராமகிருஷ்ணனின் உப பாண்டவம் பின் நவீனத்துவ பாணியில் பாரதத்தை சொல்கிறது. நெடுங்குருதி யாமம் இடக்கை சஞ்சாரம் என அவருடைய நாவல்கள் முக்கியமானவை. வரலாற்று இடைவெளிகளை பேசுபவை. 

வரலாறை திருகுதல் ஒரு வகையில் மாற்று அல்லது இணை வரலாறை உருவாக்கும் முயற்சி மற்றொரு வகையில் வரலாற்றை நிராகரித்தல்‌. பா‌ வெங்கடேசனின் நாவல்களை முந்தைய பகுப்பிலும் யுவன் சந்திரசேகரின் நாவல்களை பிந்தைய பகுப்பிலும் வைக்கலாம். வரலாறை திருகி அதன் அபத்தத்தை சுட்டி அதை நிராகரிக்கும் ஆக்கம் தேவிபாரதியின் நட்ராஜ் மகராஜ். இரா. முருகனின் 'அரசூர் வம்ச' தொடர் நாவல்கள் அடிப்படையில் ஒரு வம்சகதைதான். ஆனால் அதன் சொல்முறை காரணமாக வரலாறை திருகி அதை குறியீடுகளாக ஆக்கிக் கொள்கிறது. சாருவின் ஜீரோ டிகிரி சிதறல் வடிவத்தின் முன்னோடி முயற்சி. அவருடைய ராசலீலா எக்சைல் ஆகிய நாவல்கள் இந்த ஆண்டுகளில் வெளியாயின.

தேவி பாரதியின் 'நிழலின் தனிமை' தனிமனிதனை மையமாக கொண்ட நாவல். ஆனால் அந்த நாவல் கொண்டாடப்பட்டது‌‌. அது எழுப்பிய ஆழ்ந்த கேள்விகள் மற்றும் இறுதியில் சென்றடையும் வெறுமை அதை முக்கிய நாவலாக்கியது. லக்ஷ்மி சரவணகுமாரின் 'உப்பு நாய்கள்' வரலாறு தனிமனிதன் இடையீட்டில் நிகழும் நாவல். ஒரு வகையில் சுரேஷ் பிரதீப்பின் 'ஒளிர் நிழல் குணா எனும் ஒரு தனி மனிதனின் கதைதான் ஆனால் குறிப்பிட்ட வரலாற்று தருணத்துக்கு எதிர்வினையாற்றுவது. சுனில் கிருஷ்ணனின் ' நீலகண்டமும்' வரலாற்று காலத்திற்கான தனி மனிதனின் எதிர்வினை என்றே வகைப்படுத்த முடியும்‌. இவை வரலாற்று நிகழ்வு என இல்லாமல் வரலாற்று போக்கின் மீதான எதிர்வினை என சொல்லலாம்.

 நாவல்களில் எப்போதும் பேருரு கொள்வது காலம் தான். யதார்த்தவாத செவ்வியல் நாவல்கள் எதை எடுத்துக்கொண்டாலும்  ஒருவகையில் நாம் மீண்டும் மீண்டும் சென்று மோதுவது காலத்தின் பேருரு தோற்றத்தில் தான். அது தால்ஸ்தாயின் போரும் வாழ்வுமாக  இருந்தாலும் சரி பைரப்பாவின் குடும்பம் சிதைகிறது என்றாலும் சரி. தமிழ் நாவல்களின் கூறுமுறை பேசு பொருள் என்னவாக இருந்தாலும் அவை இந்த இலக்கை நெருங்குவதை பொருத்தே அதை மதிப்பிடுவது வழக்கமாகிவிட்டது. 

ஒட்டுமொத்தமாக தமிழ்  இலக்கியத்தில் கடந்த இருபது ஆண்டுகளில் நாவல்களில் பெரும் பாய்ச்சல் நிகழ்ந்து வருவதை உணர முடிகிறது. வருங்காலத்திலும் தமிழ் நாவல்கள் தொடர்ந்து சரியான திசையில் புதிய சவால்களை கண்டடைந்தபடி முன்நகரும் எனும் நம்பிக்கை இருக்கிறது.  தற்கால தமிழ் நாவலில் உள்ள கதாபாத்திரம் பண்பாட்டு தொடர்ச்சியோ வரலாற்று பிரக்ஞையோ அற்றவர் அல்ல.  அவர்கள் சூழலின் காலத்தின் பிரதிநிதிகள். தற்கால தமிழ் நாவலின் சவால் என்பது தரவுகளை எந்த அளவில் புனைவாக்குவது என்பதே. கடந்த முப்பது ஆண்டுகளாக அது எதிர்கொண்டுவரும் சவால் என்பது அகத்துக்கும் புறத்துக்கும் இடையிலான சமநிலையை அடைய முற்படுவதுதான். 

இரண்டாயிரம் ஆண்டிற்குப் பிறகு வந்த சிறந்த தமிழ் நாவல்கள்

 சசிதரன் வலைப்பக்கம்

நூல்கள் பட்டியல் போடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். புத்தகம் வாங்குவதற்கு அடிக்கடி நான் பட்டியல் போடுவேன். போன மாதம் ஒருவர் food court-ல் நான் புத்தகம் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து தமிழில் நீங்க படிச்ச நாவல்களை சொல்லுங்கள் என்றார். அப்போது கீழே உள்ள சில புத்தகங்களில் சிலவற்றை சொன்னேன். வீட்டுக்கு  வந்தவுடன் பட்டியலை தயாரிக்க ஆரம்பித்தேன். கதை மாந்தர்கள் கண்முன்னே வந்து சென்றனர். அந்தந்த புத்தகங்களை வாசித்த இடங்களின் ஞாபகமும் வந்தது. கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் படித்த புத்தங்களின்  ஞாபகங்களுடன் நேரம் செலவழித்தேன்.  கீழே கூறியுள்ள அனைத்து புத்தங்களையும் நான் படித்திருக்கிறேன். இரண்டாயிரம் ஆண்டிற்கு பிறகு வெளிவந்த நாவல்களில் எனக்கு பிடித்தவை கீழே : 

1)காவல் கோட்டம்  - சு.வெங்கடேசன் 

2) தாண்டவராயன் கதை -பா.வெங்கடேசன் 

3)உப்பு நாய்கள்  - லஷ்மி சரவணக்குமார் 

4)நீலகண்டம்  -சுனீல் கிருஷ்ணன் 

5)சுபிட்ச முருகன்  - சரவணன் சந்திரன் 

6)அஞ்ஞாடி  - பூமணி 

7)தீம்புனல் - ஜி. கார்ல் மார்க்ஸ் 

8) ஆழி சூழல் - ஜோ .டி  குருஸ் 

9)வேனல் - காலப்பிரியா 

10)பருக்கை  - வீரபாண்டியன் 

11)வலம்  -  விநாயக முருகன் 

12)துறைவன்  - கிறிஸ்டோபர் ஆன்றணி 

13)ரோல்ஸ் வாட்ச்  - சரவணன் சந்திரன் 

14) யாமம் - எஸ் . ராமகிருஷ்னன் 

15)புலிநகக் கொன்றை - பி ஏ கிருஷ்ணன் 

16) கடல்புரத்தில்  - வண்ண நிலவன் 

17)கூகை  - சோ.தர்மன் 

18)சிலுவைராஜ் சரித்திரம்  - ராஜ் கௌதமன் 

19)செடல் -இமையம் 

20)ஆப்பிளுக்கு முன் - சரவன்கார்த்திகேயன் 

21)கானகன்  - லஷ்மி சரவணக்குமார் 

22)கொரில்லா - ஷோபாசக்தி 

23)நடுகல் - தீபச்செல்வன் 

24) வெட்டுப் புலி  - தமிழ்மகன் 

25) வேள்பாரி - சு.வெங்கடேசன் 

26)மிளிர் கல் - இரா. முருகவேள் 

27)காடு - ஜெயமோகன் 

28)சுளுந்தீ - முத்துநாகு 

29)கங்காபுரம் -வெண்ணிலா 

30)பேய்ச்சி -நவீன் 

31)ஆறாவடு - சயந்தன்

32)அஞ்சுவண்ணம் தெரு  - தோப்பில் முஹம்மது மீரான் 

33) விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம் - சி.மோகன் 

34)அழியாச்சொல் - குட்டி ரேவதி 

35) மீன்காரத் தெரு -கீரனுர் ஜாகீர் ராஜா 

36)கோட்டை வீடு  - ம.கா முத்துரை 

37)கழுதைப்பாதை -எஸ். செந்தில்குமார் 

38)மரயானை -சிந்து பொன்ராஜ் 

39)வாரணாசி  - பா.வெங்கடேசன் 

40)பட்டக்காடு  - அமலராஜ் பிரான்சிஸ் 

41)உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன் 

42)சலூன்  -வீரபாண்டியன் 

43)ஜெப்னா பேக்கரி - வாசு முருகவேள் 

44)காடோடி - நக்கீரன் 

45)இச்சா - ஷோபா சக்தி 

46)யாமம் - எஸ். ராமகிருஷ்ணன் 

47)கெடை காடு - ஏக்நாத் 

48)குற்றப்பரம்பரை - வேல ராமமூர்த்தி 

49)ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன் 

50)ஆதிரை - சயந்தன் 

51)சக்கை  - கலைச்செல்வி 

52) பார்த்தீனியம் - தமிழ்நதி 

53)ஏதிலி - அ.சி. விஜிதரன் 

54)ஏந்திழை  - ஆத்மார்த்தி 

55) உம்மத் -ஸர்மிளா செய்யத் 

56)இரண்டாம் ஜாமங்களின் கதை - சல்மா 

57)மலைக்காடு - சீ.முத்துசாமி 

58)பேட்டை - தமிழ்ப் பிரபா 

59)லாக்கப்  - சந்திரகுமார் 

60)இரவு  - ஜெயமோகன் 

61)கொற்கை - ஜோ .டி  குருஸ்

62)வெண்முரசு வரிசை நாவல்கள் - ஜெயமோகன் 

63) வாழ்க வாழ்க - இமையம் 

64)தூர்வை  -சோ.தர்மன்

65)பிறகு - பூமணி 

66)ராஜீவ்காந்தி சாலை  - விநாயக முருகன்

67)ஐந்து முதலைகளின் கதை -சரவணன் சந்திரன் 

68)கீதாரி - கலைச்செல்வி 

எனக்கு பிடித்த இன்னும் சில நூல்களின் வெளிவந்த வருடங்கள் தெரியவில்லை அதனால் அவற்றை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை .

Tuesday 5 January 2021

நாயனம் - ஆ மாதவன்

 

ஆ மாதவனின் நினைவாக அவரின் சிறந்த கதையான நாயனம் 


இறந்தவருக்கு ஒன்றும் தெரியாது. புதியமல் ஜிப்பா, வேஷ்டி அணிந்து கொண்டு, நெற்றியில் மூன்று விரல் திருநீற்றுப் பட்டையுடன், நீட்டி நிமிர்ந்து  அந்திமத்துயில் கொள்கிறார். கறுப்பு உடம்பு, வயசாளி, மேல்வரிசைப் பல் கொஞ்சம் பெரிசு, உதட்டை மீறி ஏளனச் சிரிப்பாக அது வெளித் தெரிகிறது. தலைமாட்டில் குத்து விளக்கும், நுனி வாழையிலையில் நிறை நாழி பழமும் ஊதுவத்தியும், சிவப்பு அரளிப்பூ மாலையுமாக ஜோடித்திருக்கிறார்கள். சாவு மணம் ஊதுவத்தியிலிருந்து கமழ்கிறது.

aa maadhavan_m‘யென்னைப் பெத்த யப்போவ்.. யெனக்கினி ஆரிருக்கா?… என்று கால்மாட்டில் பெண்அள் கும்பலிலிருந்து நாற்பது வயசுக்காரி கறுப்பி முட்டி முட்டி அழுகிறாள். அவளுக்கு பச்சைக் கண்டாங்கிதான், பொருந்துகிறது.

சாயங்காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. தென்னந் தோப்புக்கு அப்பால், வாழைப் பண்ணையைத் தாண்டி, பாறைகள் நிறைந்த ஆற்றின் புது வெள்ளத்தின் குளிரைக் காற்று சுமந்து வருகிறது. காக்கைகள் கூட்டுக்குப் பறந்து போகின்றன. தாழைப்புதர் வேலிகளின் நடுவில்- வாய்க்கால் கரையிலிருந்து , முற்றிய கமுகு மரத்தை வெட்டிச் சுமந்து கொண்டுவந்து, முற்றத்தில் பாடை ஏணி தயாரிக்கிறார்கள். பிளந்த கமுகுமரம், வெளீரென்று பொள்ளையாக முற்றத்தில் துண்டாகக் கிடக்கிறது.

வாசலில், இளவுக் கூட்டத்தினரிடையே, செத்தவரின் தடியன்களான ஆண்பிள்ளைகள் இரண்டு அழுக்குத் துண்டை அணிந்து கொண்டு சுறுசுறுவென்று , எண்ணெய்ச் சிலைகள் போலத் தலைகுனிந்து அமர்ந்திருக்கிறர்கள். சின்னவன், கொஞ்சம் அழுகிறான். பெரியவன் முழங்கையைக் கன்னத்துக்கு முட்டுக் கொடுத்துக் கூரையின் துலாக் கட்டையைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். உள்ளேயிருந்து வரும் ஒப்பாரி, இப்பொழுது பழக்கமாகிச் சாதாரணமாகி விடுகிறது.

“ இப்படியே இருந்தாப் பொழுதுதான் இருட்டும். இருட்டு வருமுன்னே இதோ அதோன்னு காரியத்தை முடிப்பம்; என்ன தங்கப்பா??”

“ஆமாமாம். நாயனக்காரனைத்தான் இன்னம் காணோம். யாரு போயிருக்காங்க அழைச்சார?”

“வடிவேலும் சின்னண்ணணும் போயிருக்கிறாங்க. மேலாத்தூரிலே இன்னிக்கு ஆம்புட்றது கஸ்டம் . அல்லாம், முத்துபட்டி திருவிழாவுக்குப் போயிருப்பாங்க.”

“சின்னண்ணன் போயிருக்கிறான்லியா அப்போ நிச்சயம் யாரையாவது இட்டுக்கிட்டு வருவான். வரட்டும். அதுக்குள்ளியும் மத்த வேலைங்களெப் பாக்கறது.”

மழைவரும் போல் இருந்தது. அந்தியிருள் குளிர ஆரம்பித்தது. கியாஸ் விளக்கொன்றைச் சுமந்து கொண்டு , வயல் வரப்பு வழியாக வாய்க்காலைத் தாண்டி ஒருவன் கரையேறி வந்து கொண்டிருக்கிறான். விளக்கின் ஒளியில், வாழை மரமும், பச்சை ஓலைய்ப் பந்தலும் பெரிய பெரிய நிழல்களாக வளர்ந்து திரைக்காட்சி போல மாறி மாறிப் போயிற்று.

விளக்கு சுமந்து வந்தவன், வேர்க்க விறுவிறுக்க முற்றத்தில் ஸ்டாண்டு மேல் விளக்கை இறக்கி வைத்தான். விளக்கின் உஸ்… உஸ்..! உள்ளே அழுகை ஓய்ந்து போயிருந்தது. குசுகுசுத்த குரலில் பெண்கள் வக்கணை பேசுகிறார்கள். ஊதுவத்தி இன்னும் மணமாக மணத்துக்கொண்டு புகை பரத்துகிறது.

விளக்கு வந்துவிட்ட வசதியில் முற்றத்துச் சந்தடி, அங்கிங்காக விலகி நின்றுகொண்டு இருட்டில், தெரியாத வயல் வரப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சலிப்பு- எல்லாரது முகத்திலும் அசட்டுக்களையை விரவிவிட்டிருக்கிறது. சும்மாவேனும் எத்தனை தரம் வெற்றிலை போடுகிறது? எத்தனை தரம் பீடி பிடிக்கிறது?

“விடிஞ்ச மொதக்கொண்டு ஒண்ணுமே சாப்பிடலே. எப்போ இந்தக் காரியம் முடியறது, குளிச்சு மாத்திச் சாப்பிடுறதோ? சரியான தொந்தரவு போ.”

யாரோ ஓராள் இருட்டைப் பொத்துக்கொண்டு வெள்ளையாக நடையும் வேகமுமாக ஓடிவந்தான்.

“சின்னண்ணனும், வடிவேலும் தட்றாம்பட்டிக்குச் சைக்கிள்லே போயிருக்கிறாங்க. மேலாத்தூரிலே யாரும் நாயனக்காரங்க ஆப்டலியாம். சேதி சொல்லச் சொன்னாங்க.” வந்தவன்  பந்தலையும்- கியாஸ் விளக்கையும்- முசுமுசுத்த கும்பலையும் – உள்ளே பெண்களீன் அர்த்தமற்ற அலமலங்களையும் – மாறி மாறி ப் பார்த்துவிட்டுப் பீடிக்கு நெருப்புத் தேடி ஒதுங்கினான். எப்பிடியும் தட்றாம்பட்டி போய் ஆளை இட்டுக் கொண்டுவர இன்னும் ஒரு மணியோ , ஒன்றரை மணியோ நேரமாகலாம், கும்பலின் முகம் சுணங்கியது.

“இந்தக் காலத்திலே, யாருப்பா நாயனமும் , பல்லக்கும் வச்சிக்கிறாங்க? ஏதோ அக்கம் அசலுக்கு ஒரு தொந்தரவு இல்லாமெ, காரியத்தை முடிக்கிறதெ விட்டுவிட்டு? இப்போ பாரு , எத்தினிஎ பேரு இதுக்கோசரம் காத்துக் கெடக்கிறாங்க ?”

”இல்லே, மூத்த பிள்ளைதான் சொல்லிச்சிது. செத்தவரு முன்னாடியே சொல்லி வச்ச சங்கதியாம். தமக்கு , சுடுகாடு யாத்திரை தவுல் நாயனக் கச்சேரியோட நடத்தணுமினு. அதாம் அந்த பொண்ணும் அழுகையா அழுதிச்சி. செத்தவங்க ஆத்துமா நிம்மதியாப் போகட்டுமேன்னு தான், இப்போ, மேலாத்தூர் போய் அங்கியும் ஆம்புடாமே தட்றாம்பட்டி போயிருக்காங்களாம்.”

“நல்ல ரோதனையாப் போச்சு. செத்தவங்களுக்கென்ன? அவுங்க போயிட்டாங்க. இருக்கிறவங்க களுத்து அறுபடுது “.

மழை வந்தேவிட்டது. ஹோவென்று . கூரை மேலும் பச்சைப் பந்தல் மேலும் இரைச்சலிட்டது. சுற்றிலும் கமுகு, தென்னை , தாழைப்புதூர் மேல் எல்லாம் கொட்டியதால் இரைச்சல் பலமாகக் கேட்டது. கியாஸ் லைட்டைத் திண்ணைமேல் தூக்கி வைத்தார்கள். திண்ணையில் அமர்ந்திருந்தவர்களின் தலை முண்டாசும், தலையும் பெரிய நிழல்களாகச் சுவரில் உருக்குலைந்து தெரிந்தன.

உள்ளே ஏதோ குழந்தை அடம்பிடித்து அழத் துவங்கியது. தாய்க்காரி பூச்சாண்டியைக் கூப்பிடுகிறாள். பிய்த்து எறிவேன் என்கிறாள். ‘சனியனே , உயிரை வாங்காதே’ என்கிறாள். குழந்தை நிறுத்தாமல் அழுகிறது.

எல்லோர் முகத்திலும் ,சலிப்பும், விசாரமும், பொறுமை இழந்த வெறுப்பும் நிறைந்திருக்கின்ற்ன. தலை நரைத்த முக்கியஸ்தர்களுக்கு யாரை, என்ன பேசி, நிலைமையை ஒக்கிட்டு வைப்பது என்று தெரியவில்லை. எல்லாரும், இருட்டாக நிறைந்து கிடக்கும் வயலின் வரப்புப் பாதையையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மழை சட்டென்று ஓய்கிறது. இரைச்சல் அடங்குகிறது. கூரையிலிருந்து தண்ணீர் சொட்டுகிறது. முற்றத்தில் தண்ணீர் தேங்கி வழிந்து போகிறது.

இதற்குள்ளியும் பாடை தயாராகி , உடம்பு சிவப்புப் பட்டு மூடிக்கொண்டு , நீட்டி நிமிர்ந்து- பந்தலில் தயாராகி இருந்தது. நீர்மாலைக்குப் போன புத்திரர்கள் இரண்டு பேரும், மழையில் குளித்துத் தலைமேல் வெண்கல ஏனத்தைச் சுமந்து கொண்டு, பிணத்தின் தலைமாட்டில் வந்து, முக்காடிட்ட முண்டச்சி போல நின்றார்கள்.

‘பொம்மனாட்டிங்க குலவை போடுங்க தாயீ. அதுக்கும் சொல்லியா தரவோணும்?’ என்று தலையாரி குரல் கேட்க, தாமதித்து நின்றவர்கள் போல் கிழவிகள். கொலு கொலுவென்று ஒப்பாரி போலவே குலவையிட்டார்கள். இருட்டில் ஒதுங்கி நின்றவர்  ஒன்றிரண்டு பேர் கூடப் பந்தலுக்குள் வந்து  திண்ணையில் நுழைந்தார்கள்.

‘வாய்க்கரிசி போட இன்னும் , உள்ளே பொம்மனாட்டிக இருந்தா வந்து போடலாம். நேரமிருக்குது” என்றார் தலையார்.
” அட அதெல்லாம் எப்பவோ முடிஞ்சு போச்சே. இன்னும் புதுசாத்தான் ஆரம்பிக்கோணும். புறப்படுறதை விட்டுப்பிட்டு , அடியைப்புடிடா ஆபயாண்டீன்னு முதல்லே இருந்தே ஆரம்பிக்கோணுமா? தம்பி , சின்னத்தம்பு உன் கைக்கடியாரத்தலே மணியென்ன இப்போ?”

“ மணியா? அதெல்லாம் ரொம்ப ஆச்சு. ஒம்போது ஆகப்போவுது. எப்போ நாயனக்காரங்க வந்து எப்போ பொறப்படபோறமோ?’

எல்லோரது கண்களும் வயல் வரப்பையே பார்த்துக் கொண்டிருந்தன . இப்போது – மரண சம்பவத்தை விட , நாயனந்தான் முக்கியப் பிரச்சனையாக அத்தனை பேர் மனத்திலும் பெரிய உருக்கொண்டு நின்றது.

“யாரோ வர்ராப்போல இருக்குதுங்களே” என்று ஒரு குரல் தொலைவில் இருட்டுப்பாதையைப் பார்த்துச் சந்தேகப்பட்டது.

“ஆமாண்ணோவ், வர்ராங்க போல , யாரப்பா அது வெளக்கை சித்தெ தூக்கிக்கொண்டு போங்களென். மழையிலே சகதியும் அதுவுமா கெடக்குது. சின்னண்ணன் தான், தோள் அசைப்பைப் பார்த்தா தெரியுதில்லே”.

எல்லாரது முகங்களும் தெளிவடைந்தன. இடுப்பு வேஷ்டியை முறுக்கிக்கொண்டு, முண்டாசைச் சரி செய்துகொண்டு எல்லாரும் எழுந்து தயாராகி நின்றனர். சில ஆண் பிள்ளைகள் உள்ளே பெண்களிடம் போய் விடை பெற்று வந்தனர். உள்ளே விட்டிருந்த அழுகை ‘யங்கப்போ’ என்று பின்னும் ஈனமாக எழுந்தது.

கியாஸ் விளக்கு வட்டத்தில், சின்னண்ணனும் வடிவேலுவும் வென்றுவந்த வீரர்கள் போல நின்றனர்.

“ அட , மேலாத்தூரிலே போனா அங்கே ஒரு ஈ, காக்கை இல்லெ. படு ஓட்டமா ஓடினோம். வீரண்ணன் சேரியிலே, ஒரு நல்ல வித்வான். மாரியம்மன் கொடையப்போ கூட நம்மூருக்கு வந்து வாசிச்சான். முனிரத்தினம்ன்னு பேரு . எப்படியும் அவரெ இட்டாந்திராலாம்ன்னு போனா. மனுசன், சீக்கா படுத்த படுக்கையா கெடக்கிறான். விடா முடியாதுன்னு, சைக்கிளைப் உடிச்சோம். தட்றாம்பட்டுலே, தோ… இவங்களெத் தான் புடிச்சுக் கொண்ணாந்தோம். சமத்திலே ஆள் ஆம்பிட்டதே தம்பிரான் புண்ணியமாப் போச்சு.”

எல்லோரும் பார்த்தார்கள்.

காய்ந்து போன மூங்கில் குழாய் போல, சாம்பல் பூத்த நாயனத்தை வைத்துக்கொண்டு , மாறு கண்ணும் குட்டைக் கிராப்பும், காவி மேலாப்புமாக, ஒரு குட்டை ஆசாமி, ‘இவனா?’ என்று கருவுவதற்குள் , ‘இவனாவது அந்த நேரத்தில் வந்து தொலைஞ்சானே’ என்ற சமாதானம் , எல்லாருக்கும் வெறுப்பை மிஞ்சி எட்டிப் பார்த்தது. தவுல்காரன், அடுப்படி, தவசிப்பிள்ளை மாதிரி வேர்க்க விறுவிறுக்க , ‘ஐயோ’ என்ற பார்வையில், முன்னால் வரமாட்டேன் என்று பின்னால் நின்றான்.

‘வெட்டியானெக் கூப்பிடுறது. நெருப்பெல்லாம் ரெடி..சங்கை ஊதச்சொல்லு பொறப்படலாமா? உள்ளே கேட்டுக்கோ.’

தாறுடுத்திக் கொண்டு பாடைப்பக்கம் நாலுபேர் தயாரானார்கள். கருமாதிக்கான பிள்ளைகள் இரண்டும், பெரியவன் தீச்சட்டியை வெட்டியான் கையிலிருந்து வாங்கிக் கொண்டான். சின்னவன், ஈர உடையில் , வெட வெடவென்று நடுங்கிக்கொண்டு , பெரியவன் பின்னால் செய்வதறியாமல் நின்றான்.

“பொறப்படுங்கப்பா. தூக்கு” என்ற கட்டளை பிறந்ததும் தாறுடுத்த நால்வரும் பாடையின் பக்கம் வந்தார்கள். உள்ளேயிருந்து பெண்கள், முட்டிக்கொண்டு தலைவிரி கோலமாக ஓடிவந்தார்கள். “யெங்களெ உட்டுட்டுப் போறீங்களே?” என்று கதறல் சகதியும் அதுவமாகக் கிடந்ததினால் விழுந்து அழுவதற்கு எல்லாரும் தயங்கினார்கள். பெண் மட்டும். ‘ங்கப்போ எனக்கினி யாருருக்கா” என்று பாடையின் கால்மாட்டில் வந்து விழுந்தாள்.

”கோவிந்தா!கோவிந்தா!” என்ற கோஷத்துடன் பாடை தோளில் ஏறிற்று. “யாருப்பா அது நாயனம். உம் … சும்மா உங்களைப் பார்க்கவா கூட்டியாந்தோம் முன்னாடி போங்க. வெளக்குத் தூக்கறவன் கூடவே போங்க. மோளத்தைப் பிடிங்க..”

நாயனக்காரன் முகம் பரிதாபமாக இருந்தது. அழைத்துவந்த வேலண்ணன் அவன் காதருகில் எதோ சொன்னான். நாயனக்காரன் மெல்ல உதட்டில் வைத்து, “பீ ப்பீ.. ‘ என்று சுத்தம் பார்த்தான். ஊர்வலம் , சகதி வழுக்கும் வரப்புப்பாதையில் போய்க்க்கொண்டிருந்தது. கியாஸ் விளக்கின் ஒளியில் எல்லார் நிழலும் தாழைப் புதரின் மேலே கமுகு மர உச்சி வரை தெரிந்தது.

’கூ..ஊஉ..ஊஉ..’ என்றூ, வெட்டியானின் இரட்டைச் சங்கு அழுதது. நாயனக்காரன் வாசிக்க ஆரம்பித்திருந்தான். ‘பீ..பீ’ என்ற அவலம் பரிதாபகரமாக இருந்தது. தவுல்காரன் சந்தர்ப்பம் தெரியாமல் வீறிட்ட குழந்தைபோல-வாத்தியத்தைத் தொப்புத் தொப்பென்று மொத்தினான்.

விவஸ்தை கெட்ட மழை. வருதடி வைத்த அலமங்கலும், கீழே வழுக்கும் வரப்புப் பாதையும், தாழைப்புதரும், கௌமுகின் தோப்பின் உச்சியில் தங்கி நின்ற குளிர்ந்த இருட்டும், மரணமும் , பசியும், அசதியும், வெறுப்பும்,துக்கமும், எரிச்ச்சலும், கோபமும், எல்லாருடைய உள்ளங்களிலும் நாயனத்தின் கர்ண கடூரமான அபஸ்வரமாக வந்து விழுந்து வயிறெரியச் செய்தது.

கியாஸ் விளக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தது.தீச்சட்டியில் குமைந்த வறட்டியின் புகையால் சங்கு ஊதுபவன் செருமினான். அனைவரும் பேச்சற்ற அவல உருவங்களாக நிழல்களை நீளவிட்டு நடந்து கொண்டிருந்தார்கள்.

‘பீப்பீ..பீ..பீ’
எல்லாருக்கும் வயிற்றைப் புரட்டியது. நெஞ்சில் ஏதோ அடைத்துக் கொண்டது போல சிரமமாக வந்தது. தலையைப்பிய்த்தது.

பின்னும் , ‘பீ..ப்பீ..பீ..பீ!
ஊர்வலம், ‘சனியனே’ என்ற பாவனையில் அவனையே பார்த்துக்க் கொண்டு வழி நடந்தது. யாராருக்கெல்லாமோ பாதை வழுக்கியது. பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த சிறுவன் ஒருவன், சக்தி தேங்கிய பள்ளத்தில் விழுந்தான். உடன் வந்த ஒருவர் , அவனைத் தூக்கிவிட்டுவிட்டு . ‘நீயெல்லாம் அங்கே எதுக்கோசரம் வரணும் , சனியனே?” என்று எந்த எரிச்சலையோ அவன் மேல் கோபமாக் கொட்டினார்.

ஆற்றங்கரை வரப்பு ஆரம்பமாகியிருந்தது. சிள் வண்டுகளின் இரைச்சல் கேட்டது. அக்கரையில், கடந்து வஞ்சித்துறையிலிருந்து தவளைகள், ‘குறோம் குறோம்’ என்று  எதிர்ப்புக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. குட்டி குட்டிக் கறுப்புப் பன்றிகள் போலப்பாறைகள் நிறைந்த ஆற்றில், புதுவெள்ளம் இரைச்சலோடு ஒழுகும் அரவம் கேட்டது. குளிர் , இன்னும் விறைப்பாக உடல்களைக் குத்திற்று.

சுடுகாட்டுத் தூரம் தீராத் தொலைவெளியாகத் தோன்றியது. இன்னும், பீ..ப்பீ..பீ..பீ..’

நாயனக்காரன் பக்கமாகத் தலை முண்டாசோடு வந்து கொண்டிருந்த தலையாரி முத்தன் , அவனையும் அந்த நாயனத்தையும் ஒரு முறை வெறித்துப் பார்த்தார். கியாஸ் லைட்டின் மஞ்சள் வெளிச்சத்தில் உப்பென்று மூச்சு நிறைந்த கன்னங்களுடன், நாயனக்காரனின், அந்தப் பொட்டைக்கண் முகம், எரிச்சலை இன்னும் வளர்த்தது.

இன்னும், பீ..ப்பீ..பீ..பீ..’

”படவா ராஸ்கல். நாயனமா வாசிக்கிறே?” தலையாரி முத்தன் ரொம்ப முரடு. அவரது அதட்டலை பாடை தூக்கிக்கொண்டு முன்னால் போய்க் கொண்டிருந்தவர்கள் கூடத் தயக்கத்தோடு திரும்பி நின்று செவிமடுத்தனர்.

அவ்வளவுதான்!

தலையாரி, நாயனக்காரன் பிடரியில் இமைக்கும் நேரத்தில் ஒரு மொத்து. ஆற்றில் துணி துவைப்பது மாதிரி ஒரு சத்தம். நாயனத்தை அப்படியே இழுத்துப் பறித்து கால் மூட்டின் மேல் வைத்து , இரண்டு கைகளாஅலும், ‘சடக்’ இரண்டு துண்டு ! புது வெள்ளமாகச் சலசலத்து ஓடிக் கொண்டிருந்த ஆற்றின் இருட்டில் நாயனத் துண்டுகள் போய் விழுந்தன.

‘ஒடிக்கோ பயமவனே, நாயனமா வாசிக்க வந்தே? நின்னா உன்னையும் முறிச்சு ஆத்திலெ வீசி யெறிஞ்சுடுவேன்.”

ஊர்வலம் தயங்கக் கொஞ்சம் நின்றது. எல்லார் முகத்திலும், ’முத்தண்ணே நீ செஞ்ச காரியத்துக்கு உனக்கு தங்கக் காப்பு அடிச்சுப் போட்டாலும் தகும்’ என்ற திருப்தி பளிச்சிட்டது.

“என்ன நின்னுட்டீங்க?- போங்கப்பா தோ மயானம் வந்தாச்சே, நல்ல நாயனக்காரனெ கொண்ணாந்தீங்க”.

இதைக் கேட்க நாயனக்காரனும் தவுல்காரனும் வரப்பு வெளியில் இல்லை. ஆற்றின் இடப்பக்கம் சந்தின் இருட்டில் இறங்கித் தெற்குப் பார்த்த பாதை வழியாக , இரண்டு பேரும் ‘செத்தோம் பிழைச்சோம்’ என்று விழுந்து எழுந்து ஓடிக்கொண்டிருந்தனர்1

விடாப்பிடியாகக் கழுத்தை அழுத்திய சனியன் விட்டுத் தொலைத்த நிம்மதியில் ஊர்வலம் சுடுகாட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.