Sunday 20 January 2019

முக்கிய புத்தகங்கள் 2018

முக்கிய புத்தகங்கள் 2018

   தி இந்து தமிழ் வெளியிட்டுள்ள 2018 ன் முக்கிய நூல்களின் பட்டியல் இது


சிறார் நூல்கள் 2018

ஆதி வள்ளியப்பன்


மரப்பாச்சி சொன்ன ரகசியம் l யெஸ். பாலபாரதி, வானம் வெளியீடு | தொடர்புக்கு: 91765 49991
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் இன்றைக்கு மிகப் பெரிய பிரச்சினை. ஆனால், இது குறித்துக் குழந்தைகளிடம் பேச முடியுமா? அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி, அவர்களது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கான செயல்பாடுகளில் ஈடுபடுத்த முடியுமா? முடியும் என்ற நம்பிக்கையைத் தருகிறது மரப்பாச்சி புத்தகம். கடந்த ஆண்டில் வெளியாகி, சிறார் எழுத்துக்கான முக்கிய விருதுகளையும் இந்நூல் பெற்றிருக்கிறது.
யானையோடு பேசுதல் - காடர்கள் சொன்ன கதைகள் l மனிஷ் சாண்டி-மாதுரி ரமேஷ், தமிழில்: வ. கீதா, தாரா வெளியீடு | தொடர்புக்கு: 044 2442 6696
தமிழகக் காடுகளில் காடர் எனும் பழங்குடிகள் வாழ்ந்துவருகிறார்கள். தங்களுடைய முன்னோர் காடுகளில் எப்படி வாழ்ந்தார்கள் என்பது குறித்து, தங்கள் பேரன், பேத்திகளுக்கு வயதான காடர்கள் சொன்ன கதைகளின் தொகுப்பே இந்நூல். எழுத்தாளர் வ. கீதாவின் மொழிபெயர்ப்பும் மேத்யு ஃப்ரேமின் ஓவியங்களும் இந்நூலை தனித்துவம் கொண்டதாக மாற்றியுள்ளன.
அண்டா மழை l உதயசங்கர், வானம் வெளியீடு | தொடர்புக்கு: 91765 49991
ராஜாக்கள் எல்லாம் அதிவீர பராக்கிரமசாலிகள் என்று சொல்லும் கதைகளுக்கு மாறாக, அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆட்டம் போடும் அரசர்கள் செய்யும் தவறுகளை நகைச்சுவையாகச் சொல்லும் கதைகள் அடங்கிய தொகுப்பு.
சர்க்யூட் தமிழன் l ஆயிஷா இரா. நடராசன் | புக்ஸ் ஃபார் சில்ரன் | தொடர்புக்கு: 044 - 24332924
அறிவியல் புனைகதைகள் தமிழில் குறைவு. அந்தக் குறையைப் போக்கும் வகையில் ஆயிஷா நடராசன் எழுதியுள்ள இந்த நூலில் 12 அறிவியல் புனைகதைகள் இடம்பெற்றுள்ளன. அனைத்தும் கற்பனையான எதிர்காலத்தில் நிகழ்பவை.


கோல்யா சினிட்சினின் நாட்குறிப்புகள் l நிகோலாய் நோசவ், தமிழில்: ரகுரு | வாசல் வெளியீடு | தொடர்புக்கு: 98421 02133
நிகோலாய் நோசவ், புகழ்பெற்ற ரஷ்ய சிறார் எழுத்தாளர். அவரது பல புத்தகங்கள் ஏற்கெனவே தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு பரவலாக வாசிக்கப்பட்டுள்ளன. சிறுவர்களின் சாகசங்கள், குறும்புகள், பரவசங்கள் நிறைந்த இந்த நூல், முதன்முறையாகத் தமிழில் வெளியாகியுள்ளது.
குழந்தைகளுக்கான ஆப்பிரிக்கப் பழங்கதைகள் l எஸ்.பி. ஸாக்ஸ், தமிழில்: எம். பாண்டியராஜன் | நெஸ்லிங் புக்ஸ் (என்.சி.பி.எச்.) வெளியீடு | தொடர்புக்கு: 044-26251968
ஆப்பிரிக்கப் பழங்கதைகள் எப்போதுமே சுவாரசியமானவை. அதிலும் உயிரினங்களை அடிப்படையாகக்கொண்டு சொல்லப்படும் கதைகள் தனித்தன்மை கொண்டவை. அப்படிப்பட்ட புகழ்பெற்ற கதைகளின் தொகுப்பு.
சாக்ரடீஸுக்கு விஷம் கொடுத்தது ஏன்? l எம்.எம். சசீந்திரன், தமிழில்: யூமா. வாசுகி | புக்ஸ் ஃபார் சில்ரன் | தொடர்புக்கு: 044-24332424
சிறார் புத்தகங்களில் வரலாறும் முக்கியம் இல்லையா? குழந்தைகளுக்கான பாடங்களில் காரண காரியத்தைத் தேடும், தர்க்கப்பூர்வமான சிந்தனைகளைத் தூண்டும் பாடங்கள் இடம்பெற வேண்டும். அந்த வகையில் இந்தப் புத்தகம் கிரேக்கத் தத்துவ ஞானி சாக்ரடீஸ் பற்றிப் பேசுகிறது.


வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் l எஸ். சிவதாஸ், தமிழில்: ப. ஜெயகிருஷ்ணன் | அறிவியல் வெளியீடு | தொடர்புக்கு: 99943 68501
மலையாளத்திலிருந்து பல ஆசிரியர்கள், பல சிறார் நூல்கள் இதுவரை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அந்த நூல்களில் முதல் வரிசையில் வைக்கத்தக்க ஒன்று, இயற்கைப்பாதுகாப்பை சுவாரசியமாகவும் அழகாகவும் சொல்லும் இந்த நூல்.
காட்டில் இருந்து  வீட்டுக்கு-விலங்குகள்–1,2 l சரவணன் பார்த்தசாரதி | புக்ஸ் ஃபார் சில்ரன் | தொடர்புக்கு: 044 - 24332924
நாடோடியாக அலைந்துகொண்டிருந்த மனிதர்களைச் சமூக அமைப்பை நோக்கி நகர்த்தியதில் விலங்குகளுக்குப் பெரும் பங்கு உண்டு. காட்டில் வாழ்ந்த விலங்குகளை மனித இனம் வீட்டுக்கு எப்படிக் கொண்டுவந்தது என்பதை அறிய இரண்டு பாகங்களைக் கொண்ட இந்த நூல் உதவும்.

யாரேனும் இந்த மௌனத்தைத் தகர்த்திருந்தால்... l கமலா பாசின், தமிழில்: சாலை செல்வம் | குட்டி ஆகாயம் வெளியீடு | தொடர்புக்கு: 98434 72092
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறலை மரப்பாச்சி சொன்ன ரகசியம்நூல் ஒரு வகையில் அணுகுகிறது என்றால், புகழ்பெற்ற இந்தப் புத்தகம் வேறொரு வகையில் அதே சிக்கலை அணுகியுள்ளது. சற்றே பெரிய குழந்தைகள் வாசிக்கக்கூடிய இந்தப் புத்தகமும் அவசியம் வாசிக்க வேண்டியவற்றுள் ஒன்று.

தி இந்து வெளியீடு

தினுசு தினுசா விளையாடலாமா? l மு.முருகேஷ் | தி இந்து வெளியீடு | தொடர்புக்கு: 9843131323
தமிழகத்தில் குழந்தைகளுக்கான மரபு விளையாட்டுகள் ஏராளம் உண்டு. ஆனால், கிராமங்களில்கூட இன்றைக்கு அவை பெரிதாக விளையாடப்படாத நிலையில், மறக்கக்கூடாத முக்கிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்துகிறது இந்த நூல்.


உடல் எனும் இயந்திரம் l டாக்டர் கு. கணேசன் | இந்து தமிழ் திசை வெளியீடு | தொடர்புக்கு: 74012 96562
மருத்துவ எழுத்தாளரும் பொது மருத்துவருமான டாக்டர் கு. கணேசன், மருத்துவத் தகவல்களை எளிமையாகவும் நேர்த்தியாகவும் எழுதுவதற்குப் புகழ்பெற்றவர். மாயா பஜார்இதழில் அவர் எழுதிப் பெரும் வரவேற்பைப் பெற்ற இதே தலைப்பிலான தொடர், தற்போது புத்தகமாக வெளியாகியிருக்கிறது.

மகளிர் நூல்கள் 2018

தொகுப்பு:புவி

ரேணுகா


இந்த உலகம் நிராகரித்தபோதும் தன்னுடைய வரலாற்றையும் தன் மூதாதையரின் வரலாற்றையும் கதைகளாக மாற்றியவர்கள் பெண்கள். காலம்தோறும் போராட்டங்களுக்கு நடுவேதான் பெண் எழுத்தின் இருப்பு உறுதிசெய்யப்படுகிறது. 2018-ல் பெண் எழுத்தாளர்களின் படைப்புகளும் பெண்கள் சார்ந்து எழுதப்பட்ட புத்தகங்களும் வரவேற்பைப் பெற்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை:
பெண்ணியம்: வரலாறும் கோட்பாடுகளும் l சாரா காம்பிள் - டோரில் மோய், தமிழில்: ராஜ் கௌதமன் | வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் | சென்னை – 98 | விலை: ரூ. 90 | தொடர்புக்கு: 044 - 26251968
பெண்ணியம் குறித்த இரண்டு நூல்களின் தமிழ்ச் சுருக்கத்தை வெளியிட்டிருக்கிறார் எழுத்தாளரும் ஆய்வாளருமான ராஜ் கௌதமன். முதலாவது  புத்தகம் பெண்ணியமும் பிந்தையப் பெண்ணியமும் என்ற தலைப்பில் மேற்கத்தியப் பெண்ணிய வரலாற்றின் முக்கியமான காலக்கட்டங்களைப் பற்றிய நான்கு கட்டுரைகளின் தொகுப்பு. சாரா காம்பிளைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த புத்தகம் இது. 
இரண்டாவது புத்தகம் பாலியல்/பிரதியியல்/அரசியல்: பெண்ணிய இலக்கியக் கோட்பாடுஎன்ற தலைப்பில் டோரில் மோய் எழுதியது. பெண்ணியக் கோட்பாட்டாளர்கள், திறனாய்வாளர்கள் பற்றிய எட்டுக் கட்டுரைகளின் தொகுப்பு. பெண்ணியக் கோட்பாடுகளின் அடிப்படையைப் புரிந்துகொள்ள இந்த இரண்டு புத்தகங்களின் தமிழ்ச் சுருக்கம் உதவியாக இருக்கும்.
பாழ்நிலப் பறவை லீலாகுமாரி அம்மா l இரா.பாவேந்தன் - கோ.நாகராஜ் | வெளியீடு: சந்தியா பதிப்பகம் | விலை: ரூ.115 | தொடர்புக்கு: 044 - 24896979
கேரளத்தின் காசர்கோடு பகுதியில் எண்டோசல்பான் பூச்சிக்கொல்லிக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுத்த லீலாகுமாரியின் வாழ்க்கைப் பயணம் இது. கட்டுரை வடிவில் இல்லாமல் ஒரு நாவலுக்கு இணையான உணர்ச்சிகரமான நினைவுகூரலாக அமைந்திருக்கிறது.
கௌரி லங்கேஷ்: மரணத்துள் வாழ்ந்தவர் l சந்தன் கௌடா, தமிழில்: பொன். தனசேகரன் | வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் | விலை: ரூ.150 | தொலைபேசி: 04652 - 278525
முற்போக்குக் கருத்துகளுக்காக சுட்டுக் கொல்லப்பட்ட எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் எழுதிய கட்டுரைகளை ஆங்கிலத்தில் சந்தன் கௌடா தொகுத்து வெளியிட்டிருந்தார். அதை மூத்த பத்திரிகையாளர் பொன். தனசேகரன்  தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். கௌரி லங்கேஷ் பற்றியும் அவரது எழுத்துகள் குறித்தும் அறிந்துகொள்வதற்கு இப்புத்தகம் பேருதவியாக உள்ளது.


இஸ்மத் சுக்தாய் கதைகள் l இஸ்மத் சுக்தாய், தமிழில்: ஜி.விஜயபத்மா | வெளியீடு: எதிர் வெளியீடு | விலை: ரூ. 400 | தொலைபேசி எண்: 9865005084
இந்தியப் பெண் எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் இஸ்மத் சுக்தாய். இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த இவரது இளமைக்காலம் போராட்டங்களுடன் கழிந்தது. அவரது படைப்புகள் எளிய மொழியில் வலிய கருத்துகளைப் பிரதிபலிப்பவை. இஸ்மத் சுக்தாய் எழுதிய கதைகளை ஜி.விஜயபத்மா தமிழில்  மொழிபெயர்த்திருக்கிறார்.
உடலெனும் வெளி l அம்பை | வெளியீடு: கிழக்கு பதிப்பகம் | விலை: ரூ.140 | தொலைபேசி எண்: 044- 42845464/42845494
தொன்மைவாய்ந்த தமிழ்ப் பண்பாட்டில் பெண்கள் எப்படிப் பார்க்கப்பட்டுள்ளனர், பண்பாட்டிலிருந்து உருவாகும் பேச்சிலும் மொழியிலும் இலக்கியத்திலும் பெண்கள் எவ்வாறு அணுகப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறியும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.  பெண் உடல் குறித்த மாற்று பார்வையை இந்நூல் முன்வைக்கிறது.
உழைக்கும் மகளிர் l க்ருப்ஸ்கயா, தமிழில்: கொற்றவை | வெளியீடு: சிந்தன் புக்ஸ் | விலை: ரூ.70 | தொலைபேசி எண்: 9445123164
புரட்சிக்கு முந்தைய ரஷ்ய மகளிரின் நிலையைப் பற்றி இப்புத்தம் பேசினாலும், புத்தகத்தைப் படிக்கும்போது இன்றைய  உலக நாடுகளில் உள்ள உழைக்கும் மகளிரின் நிலையைப் பிரதிபலிபதாகவே உள்ளது. பெண்களின் முழுமையான விடுதலைக்காக நாம் இன்னும் எவ்வளவு உழைக்க வேண்டும் என்பதையும் இச்சிறு நூல் விளக்குகிறது.


காம்ரேட் அம்மா l கல்பனா கருணாகரன் | வெளியீடு: பாரதி புத்தகலாயம் | விலை: ரூ. 50 | தொலைபேசி எண் : 044-24332424/24332924/24356935
இந்திய மாதர் இயக்கங்களின் முன்னோடிகளில் ஒருவரான தோழர் மைதிலி சிவராமனின் வாழ்க்கைப் பயணம் குறித்து  எழுதப்பட்டுள்ள புத்தகம். தமிழகத்தில் உள்ள எண்ணற்ற தொழிற்சாலைகளில் சங்கம் அமைத்த இவர், பெண்களின் பிரச்சினைகளுக்காகக் களத்தில் போராடியவர். இவரது வாழ்க்கைப் பயணம் இளம் தலைமுறையினருக்கு நல்லதொரு வழிகாட்டி.
கைர்லாஞ்சியின் காலத்தில் காதல் - 17 தலித் பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு | வெளியீடு: மைத்ரி புக்ஸ் | தொலைபேசி எண்: 9445575740
 சாதியத்தை எதிர்க்கும் வலுவான குரல்களில் தலித் பெண்ணியக் குரல் முக்கியமானது. வீட்டிலும் சமூகத்திலும் கட்டவிழ்த்துவிடப்படும் ஆணாதிக்கத்தை எதிர்க்கும் குரலாகவும் இது வெளிப்படுகிறது என்பதை இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கவிதைகள் உணர்த்துகின்றன. தென்னிந்தியாவைச் சேர்ந்த 17 தலித் பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இது. மூல மொழிகள், ஆங்கிலம் வழி வ.கீதா, சுகுமாரன், க.மாதவ், பிரேமா ரேவதி ஆகியோர் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

முள் கம்பிகளால் கூடு பின்னும் பறவை l மாலதி மைத்தி | வெளியீடு:  அணங்கு பெண்ணியப் பதிப்பகம் | விலை: ரூ. 90 | தொலைபேசி எண்: 9599329181/9599329181
பின்காலனிய நிலத்தின் பெண்ணுடல்களின் மொழியைப் பிரதியெடுக்கும் கவிதைகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. பழைய உலகிலிருந்து வெளியேறிய பெண் உடலைக் கலைத்து அடுக்கும் கவிதைகள் இவை.

இந்து தமிழ் வெளியீடு

வான் மண் பெண் l ந.வினோத் குமார் | தொடர்புக்கு: 7401296562
இந்து தமிழ்நாளிதழின் தமிழ் திசைவெளியீடாக கடந்த ஆண்டு வெளியான வான் மண் பெண்புத்தகம் இயற்கையைக் காக்கும் முனைப்பில் களத்தில் போராடிய பெண்களைப் பற்றிய  ஆவணம். இயற்கையைப் பாதுகாத்தல் என்பது ஒட்டுமொத்த உலகைப் பாதுகாப்பதற்குச் சமம்.
சூழல் சீர்கேடுகளைத் தங்களுடைய மகத்தான போராட்டங்கள் மூலம் தகர்த்தெறிந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் குறித்த தொகுப்பு இது. இயற்கையை நேசிக்கும் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய  புத்தகம்.

விடைபெறும் 2018: சுற்றுச்சூழல் நூல்கள்

புவி

நேயா


கையிலிருக்கும் பூமி l சு. தியடோர் பாஸ்கரன் | உயிர்மை வெளியீடு, தொடர்புக்கு: 044-48586727
மூத்த சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் தமிழில் சூழலியல் எழுத்துக்குத் தனி அடையாளம் பெற்றுத் தந்தவர். தமிழில் அவர் எழுதிய 100 கட்டுரைகள் அடங்கிய இந்த முழுத் தொகுப்பு, முதன்மையான சூழலியல் ஆவணமாக வெளியாகியுள்ளது.
1000 கடல் மைல் l வறீதையா கான்ஸ்தந்தீன் | கடல்வெளி தடாகம் | தொடர்புக்கு: 044 – 4310 0442
மீனவர்களை ஏதோ மீன்பிடித் தொழில் செய்பவர்கள் என்ற ரீதியிலேயே புரிந்துகொள்கிறது பொதுப்புத்தி. ஆனால், காட்டைச் சார்ந்து வாழும் பழங்குடிகளைப் போல் கடலைச் சார்ந்து வாழும் பழங்குடிகளாக உள்ள மீனவர்களை அரசுகள் எப்படிப்பட்ட நெருக்கடிகளுக்குத் தள்ளுகின்றன என்பதை விரிவாகப் பேசுகிறது இந்தப் புத்தகம்.
விதை அரசியல் l பாமயன் | தமிழினி வெளியீடு | தொடர்புக்கு: 86672 55103
இடுபொருட்களை விற்பனைசெய்து வேளாண்மையில் இனிமேலும் பெரும் லாபம் சம்பாதிக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட பன்னாட்டு நிறுவனங்கள், அடிமடியில் கை வைக்கும் விதமாக விதை வியாபாரத்தை கையில் எடுத்துள்ளன. இது எப்படிப்பட்ட பேரழிவுக்கு இட்டுச்செல்லும் என்று எச்சரிக்கிறது இந்நூல்.
நாங்கள் நடந்து அறிந்த காடு l தமிழில் வ.கீதா | தாரா வெளியீடு | தொடர்புக்கு: 044 2442 6696
மரபு அறிவு பெரும்பாலான நவீனத்துவவாதிகளால் துச்சமாகக் கருதப்படுகிறது. ஆனால், மரபு அறிவு எனும் பொக்கிஷம் எப்படிப்பட்டது. அது எவ்வளவு முக்கியமானது என்பதை ஆனைமலைக் காட்டுப் பகுதிகளில் வாழும் காடர் பழங்குடியினரின் சிலரது வார்த்தைகள் வழியாகக் கதைபோலக் கோத்துத் தந்துள்ளனர் மாதுரி ரமேஷும் மனிஷ் சாண்டியும். இதை எழுத்தாளர் வ.கீதா சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.
தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள் l சண்முகானந்தம் செயக்குமார் | எதிர் வெளியீடு | தொடர்புக்கு: 04259 226012
பறவைகளுக்கும் தமிழ் மண்ணுக்குமான உறவு நெடியது, இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பதும்கூட. இந்த உறவை சங்கப் பாடல்கள் தொடங்கி தற்போதுவரை காணலாம். தமிழகத்தில் பறவைகளைப் பாதுகாக்க பல்வேறு சரணாலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.. அவற்றைப் பற்றியும் அங்கு வரும் பறவைகள், அவை சந்திக்கும் பிரச்சினைகள் பற்றியும் விரிவாகவும் படங்களுடனும் உருவாகியிருக்கிறது இந்தப் புத்தகம்.


உயிர் இனிது l கோவை சதாசிவம் | குறிஞ்சி வெளியீடு | தொடர்புக்கு: 99650 75221
நமது பெருமைகளான குறிஞ்சி, செங்காந்தள், செங்கால் நாரை, வரையாடு, தேவாங்கு, ஓங்கில், நட்சத்திர ஆமை உள்பட பல்வேறு உயிரினங்கள், தாவரங்கள், இயற்கை அம்சங்கள் பற்றி சுருக்கமாகவும் தெளிவாகவும் அறிமுகப்படுத்தும் 40-க்கும் மேற்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.
இருளர்களும் இயற்கையும் l சி. மஞ்சுளா | என்.சி.பி.எச். வெளியீடு | தொடர்புக்கு: 044-26251968
பழங்குடியினரையும் இயற்கை குறித்த அறிவையும் பிரித்துப் பார்க்க முடியாது. தாவரவியல் அறிவை மருத்துவ அறிவாகப் பரிணமிக்கச் செய்த இருளர்களைப் பற்றி ஆய்வுபூர்வமாகப் பேசுகிறது இந்த நூல். சமவெளி இருளர்கள் பற்றி மிகக் குறைவான பதிவுகளே இருக்கும் நிலையில், இப்புத்தகம் முக்கியமானது.
ஸ்டெர்லைட்டின் சூழலியல் படுகொலை | தொகுப்பு நூல், பூவுலகின் நண்பர்கள் வெளியீடு | தொடர்புக்கு: 044-24839293
கடந்த ஆண்டின் மிகப் பெரிய சூழலியல் பிரச்சினையாகவும், சமூகப் பிரச்சினையாகவும் தொடங்கி, தற்போதுவரை நீடித்துக்கொண்டிருக்கிறது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினை. இந்த ஆலை குறித்தும் அதன் பின்னணி குறித்தும் விரிவாக அலசுகிறது இந்தப் புத்தகம்.


இந்திய நாயினங்கள்  l சு. தியடோர் பாஸ்கரன் | காலச்சுவடு வெளியீடு | தொடர்புக்கு:04652 - 278525
நாய் நமக்கு மிக நெருக்கமான உயிரினம். அதேநேரம் நாய் என்றவுடன் நம் மனதில் அயல்நாட்டு நாய் வகைகளும், கலப்பின நாய் வகைகளுமே தோன்றுகின்றன. இந்தப் பின்னணியில் இந்திய நாட்டு நாயினங்கள் பற்றி முதன்முறையாக தமிழில் அறிமுகப்படுத்துகிறது இந்தப் புத்தகம்.
ஒன்பது ஆட்தின்னிகளும், ஒரு போக்கிரி யானையும் | கென்னத் ஆண்டர்சன், தமிழில்: கமலநாத் | பாரதி புத்தகாலயம் | தொடர்புக்கு: 044-24332424
வேட்டை இலக்கியம் என அறியப்படும் பிரிவில் தேசிய அளவில் ஜிம் கார்பெட் புகழ்பெற்றவர். வட இந்தியாவுக்கு ஜிம் கார்பெட் என்றால் தென்னகத்துக்கு கென்னத் ஆண்டர்சன். இவருடைய ஆங்கில நூல்கள் மிகக் குறைவாகவே மற்ற மொழிகளுக்குச் சென்றுள்ள நிலையில், இப்புத்தகம் தமிழில் வெளியாகியுள்ளது.


படைப்பிலக்கியம்

சிவப்புக் கிளி l வசுதேந்திரா - தமிழில் யூமா வாசுகி | பாரதி புத்தகாலயம் | தொடர்புக்கு: 044 - 24332924
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் நம் அனைவரது வாழ்வையும் நேரடியாகத் தீண்டத் தொடங்கிவிட்ட நிலையிலும், அவற்றைக் குறித்த அடிப்படை உணர்வு அற்றவர்களாகவே பெரும்பாலோர் இருக்கிறோம். இயற்கையையும் நம் வாழ்க்கையையும் எப்படிப்பட்ட அவலமான வகையில் பறிகொடுத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை அழுத்திச் சொல்லும் கதைகளில் ஒன்று சிவப்புக் கிளி’.
ஐம்பேரியற்கை l மாற்கு, தமிழினி | தொடர்புக்கு: 86672 55103
போராடும் மாநிலமாக மாறியுள்ள தமிழகத்தின் அத்தனை போராட்டங்களுக்கும் மைய இழை, இயற்கையைப் பாதுகாப்பதுதான். அந்த நோக்கத்துக்கு இலக்கிய வடிவம் கொடுத்திருக்கிறார் மாற்கு. கிராமத் தன்னிறைவு, சமத்துவம், எளிய வாழ்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற லட்சியங்களைக் கொண்ட ஒரு வெற்றிகரமான கிராமத்தை முன்மாதிரியாகக் காட்டுகிறது கதை. தொண்டு நிறுவனங்களின் லாப நோக்கம், நகர நாகரிகத்தின் தாக்கத்தால் மறந்துபோன 23 மூலிகைகளின் பட்டியல் என்று நடப்பையும் இழப்பையும் ஒருசேரப் பேசுகிறது.

இந்து தமிழ்வெளியீடுகள்

கடலம்மா பேசுறங் கண்ணு! | l வறீதையா கான்ஸ்தந்தின்
கடல், மீன்கள், துறைவர்கள், அவர்களது சமூகம்-பண்பாடு-சூழலியல் குறித்து மிகப் பெரிய திறப்பைத் தந்த இதே தலைப்பிலான தொடர், ‘இந்து தமிழ்நாளிதழில் ஓராண்டுக்கும் மேலாக வெளியானது. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் புத்தகமாகவும் வெளியாகியுள்ளது.

முன்னத்தி ஏர் | l பாமயன்
இயற்கை வேளாண்மை இயக்கத்துக்குத் தமிழகத்தில் தடம் அமைத்துத் தந்த முன்னோடிகள் குறித்து மூத்த சூழலியல் அறிஞரும் இயற்கை வேளாண் வல்லுநருமான பாமயன், ‘இந்து தமிழ்நாளிதழில் எழுதிய இதே தலைப்பிலான தொடர் பரவலான வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடர் புத்தகமாக வெளியாகியுள்ளது.
இந்து தமிழ் வெளியீடுகள் தொடர்புக்கு: 74012 96562

ஆங்கில நூல்

Birds of Tiruvannamalai | தி ஃபாரஸ்ட் வே அறக்கட்டளை வெளியீடு | தொடர்புக்கு: 97898 64166
தமிழகத்தில் ஒவ்வொரு பகுதிதோறும் பறவை வழிகாட்டிகள் தற்போது வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. அந்த வகையில் முன்னோடி முயற்சியாக திருவண்ணாமலை பறவைகளுக்கான இந்த வழிகாட்டி வெளியாகியுள்ளது. ஓவியர் சிவக்குமாரின் ஓவியங்களுடன் மறுசுழற்சித் தாளில் அச்சிடப்பட்டுள்ளது தனித்தன்மை வாய்ந்த இந்தப் புத்தகம்.

விடைபெறும் 2018: உடல்நல நூல்கள்

புவி

தொகுப்பு: கோபால்


மருத்துவம், உடல்நலப் பேணல் தொடர்பாக 2018-ல் வெளியான முக்கியமான நூல்கள்...
உடல் பருமன் ஆபத்தானது என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ள அதே நேரம், அதிலிருந்து விடுபடுவதற்கு ஆபத்து நிறைந்த வழிகளை நாடும் போக்கும் அதிகரித்துள்ளது. தொப்பையைக் குறைப்பது, உடல் பருமனால் விளையும் நோய்கள்குறித்த விழிப்புணர்வைப் பெறுவது, அதற்கான சிகிச்சைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பது, எடையைக் குறைப்பதற்கான சுயமுயற்சிகள் ஆகியவற்றை உரையாடலைப் போன்ற சுவாரஸ்யமான பாணியில் விளக்கும் நூல். அலோபதி மருத்துவத்தில் 30 ஆண்டு அனுபவம் பெற்ற டாக்டர் கு.கணேசன் கல்கி’, வார இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது.
ஒல்லி பெல்லி | டாக்டர் கு.கணேசன் | கிழக்கு பதிப்பகம் | தொடர்புக்கு 044-4200 9603
அகில இந்திய வானொலியில் மருத்துவர் சி.அசோக் ஆற்றிய மருத்துவ உரைகளின் தொகுப்பே இந்த நூல். நோய்களுக்கான மருத்துவத்தைத் தாண்டி முழு உடல்நலம் பற்றிய புரிதலை ஏற்படுத்தவும் நல்ல உணவு, நல்ல உள்ளம் ஆகியவற்றைப் புரியவைக்கும் நோக்கத்துடனும் மருத்து வத்தைப் பாமரர்களுக்குப் புரியும் வகையில் எளிதாக்கிக் கொடுக்கும் முயற்சியாகவும் இந்த உரைகள் அமைந்துள்ளன.
நாளும் நலம் நாடி | மருத்துவர் சி.அசோக் | மணிமேகலை பிரசுரம் | தொடர்புக்கு 044-24342926, 24346082


நீட் நுழைவுத் தேர்வின் மூலம் தமிழ்வழிக் கல்வி பயின்ற மாணவர்கள் மருத்துவக் கனவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் சூழலில், தமிழிலேயே படித்து மருத்துவர் ஆக முடியும் என்ற நம்பிக்கையை அறிவியல் அணுகுமுறையுடன் முன்வைக்கும் நூல். சிறப்புநிலை அறுவை சிகிச்சைப் பேராசிரியரான டாக்டர் சு.நரேந்திரன் எழுதியிருக்கும் இந்நூல் மருத்துவத்தில் கலைச் சொல்லாக்க நெறிமுறைகள், மருத்துவப் பாடநூல் உருவாக்கம் ஆகியவற்றுக்கான தனிக் கட்டுரைகளை உள்ளடக்கியது.
தமிழால் மருத்துவக் கல்வி முடியும் | டாக்டர் சு.நரேந்திரன் | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் | தொடர்புக்கு 044-2625 1968, 2625 8410, 4860 1884
சர்க்கரை நோய் குறித்த மாயைகளைக் களைந்து சாமானிய மக்கள் சர்க்கரை நோயை எப்படிக் கையாள வேண்டும் என்று விளக்குவதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதற்கான ஆரோக்கியமான நடவடிக்கைகளையும் பரிந்துரைக்கிறது இந்த நூல்.
சாமானியனும் சர்க்கரை நோயும் | டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் | உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் | கோயமுத்தூர் | தொடர்புக்கு 9443291655
மருத்துவமும் கல்வியும் வணிகமயமாகி வருவது நம் சமகாலத்தின் மாபெரும் அவலங்களாகத் தொடர்கின்றது. இந்நிலையில் இந்திய மக்களவையில் தாக்கலாகியிருக்கும் மருத்துவ ஆணைய மசோதா (NMC Bill, 2017), மருத்துவக் கல்வியையும் மருத்துவத்தையும் ஒட்டுமொத்தமாக சந்தையிடம் ஒப்படைக்கும் முயற்சி என்று எச்சரிக்கும் நூல். தமிழகத்தைச் சேர்ந்த முக்கியமான மருத்துவர்கள், கல்விச் செயற்பாட்டாளர்களின் கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன.
மறுக்கப்படும் மருத்துவம் | தொகுப்பு: பு,பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு | பாரதி புத்தகாலயம் | தொடர்புக்கு 044-2433 2424, 2433 2924, 2435 6935
தஞ்சையைச் சேர்ந்த மருத்துவரும் கவிஞருமான ச.மருது துரை கடந்த இருபதாண்டுகளில் எழுதி வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. அறிவியல் தொழில்நுட்பத் தளங்களில் மிகப்பெரிய வளர்ச்சியை மருத்துவம் அடைந்திருந்தாலும் அது சமுதாயத் தளத்தில் பிரதிபலிக்காதது ஏன், சாமானியனுக்கும் நலவாழ்வு என்ற தத்துவத்தைத் தொலைத்துவிட்டு நகர்ப்புற நட்சத்திர மருத்துவமனைகளை முதன்மைப்படுத்தியது எது என்ற கேள்விகளை எழுப்பி அதற்கான காரணங்களை விளக்குவதோடு தீர்வுகளையும் முன் வைத்திருக்கிறார் மருதுதுரை.
வெட்டப்படும் கட்டை விரல் | ச.மருது துரை | அகரம் வெளியீடு | தொடர்புக்கு 04362 239289
உணவுப் பழக்கத்திலிருந்து உறங்கும் முறைவரை கர்ப்பிணிப் பெண்கள் கடைப்பிடிக்க வேண் டிய நியமங்கள், கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய முதுகுவலி உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், குழந்தை பிறப்பின்போது கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்கள், தாய்ப்பாலின் முக்கியத்துவம். குழந்தை வளர்ப்பின் பல்வேறு நிலைகள், தாய்-சேய் நலத்துக்கான மருத்துவக் குறிப்புகள், குழந்தையின் மனநலத்தைப் பேணுவதற்கான ஆலோசனைகள் ஆகியவற்றை விரிவாக விளக்கும் நூல் இது. குழந்தை வளர்ப்பில் தந்தையர்களுக்கான பங்கை உணர்த்தி அதை நிறைவேற்றுவதற்கான ஆலோசனைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
குழந்தை வளர்ப்பு என்னும் அரிய கலை | டி.வெங்கட்ராவ் பாலு, சூர்யகுமாரி | நர்மதா பதிப்பகம் | தொடர்புக்கு 98402 26661, 98409 32566, 99400 45044


இந்து தமிழ்’  வெளியீடுகள்

உயிர் வளர்த்தேனே l போப்பு
நலம் வாழஇணைப்பிதழில் உணவை மையப்படுத்தி ஓராண்டு வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. எழுத்தாளர் போப்பு, உணவு தொடர்பான தன் பரந்த அறிவைப் பயன்படுத்தி நம் மரபுவழி வந்த நல்ல உணவைச் சமைக்கவும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றவும் கற்றுத் தருகிறார். அதோடு பருவத்துக்கு ஏற்ற உணவு வகைகளை அறிமுகப்படுத்தி அவற்றின் செய்முறைகள், பயன்களை விளக்கும் கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
சந்தேகம் சரியா? l டாக்டர் கு.கணேசன்
இந்த இடத்தில் வீங்கியதுபோல் இருக்கிறதே, புற்றுநோயாக இருக்குமோ’, ‘திடீரென்று இளைத்துவிட்டோமே, சுகர் வந்திருக்குமோ?’ என்பதுபோல் நம் உடல்நலம் சார்ந்து சந்தேகங்கள் நமக்குத் தோன்றும் அல்லது சுற்றியிருப்பவர்கள் கிளப்பிவிடுவார்கள். இந்தச் சந்தேகங்களையும் அச்சங்களையும் ஏளனம் செய்யாமல் நட்பார்ந்த முறையில் விளக்கி அவை குறித்த தெளிவை ஏற்படுத்துகிறார் டாக்டர் கு.கணேசன். இந்து தமிழ் நலம் வாழஇணைப்பிதழில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
மரபு மருத்துவம் l டாக்டர் வி.விக்ரம் குமார்
உணவு முறையில் பெருமளவு அந்நியப் பழக்கவழக்கங்களை இறக்குமதி செய்துவிட்ட நமக்குப் பாரம்பரிய உணவுப் பழக்கத்தையும் மரபுவழி மருத்துவ சிகிச்சைகளையும் அறிமுகப் படுத்தும் 40 கட்டுரைகள் அடங்கிய நூல் இது. டாக்டர் விக்ரம் குமார் இந்து தமிழ் நலம் வாழஇணைப்பிதழில் எழுதிய கட்டுரைகளின் நூல் வடிவம் இது. ஆவி பிடித்தல், எண்ணெய் தேய்த்துக் குளித்தல், வாழை இலையில் உணவருந்துதல் உள்ளிட்ட நம் பாரம்பரிய பழக்கவழக்கங்களால் விளையும் நன்மைகளை விளக்கும் கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
(இந்து தமிழ் நூல்களை வாங்கத் தொடர்புகொள்ள வேண்டிய தொலைப்பேசி எண் - 74012 96562)

விடைபெறும் 2018: சினிமா புத்தகங்கள்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் காமிக்ஸ் திரைக்கதை!
திரைக்கதையின் காட்சிகள் அனைத்தையும் காமிக்ஸ் வடிவில் தந்த முதல் முயற்சி இது. ஸ்டோரி போர்டு தன்மையுடன் வரையப்பட்ட இந்தப் புத்தகம் முழுமையான முயற்சியாகவும் வெளிப்பட்டிருப்பது ஆச்சர்யம்.
விற்பனை உரிமை: டிஸ்கவரி புக் பேலஸ் | விலை ரூ.250 |
கினோ l கிறிஸ்டோபர் கென்வொர்தி | தமிழில்: திஷா
திரைப்படக் கல்லூரிகளில் லட்சங்களைச் செலவழித்தும் உதவி இயக்குநராகப் பல ஆண்டுகளைத் தொலைத்தும் சினிமாவைக் கற்றுகொண்ட காலம் மலையேறிவிட்டதற்கு இந்த மொழிபெயர்ப்பு நூல் சிறந்த சாட்சி. இந்த இரண்டு வழிகளையும் தவிர்த்துவிட்டு சினிமா கற்றுக்கொள்ளும் சாத்தியத்தை ஏற்படுத்துகிறது இந்தப் புத்தகம். விலை: 350
வெளியீடு: பேசாமொழி பதிப்பகம்
நிழற்பட நினைவலைகள் - ஒரு ரீவைண்ட் | l நேஷனல் செல்லையா | தொகுப்பாசிரியர்: பொன்ஸீ
இரண்டு தலைமுறைக் கலைஞர்களோடு சுமார் 60 ஆண்டுகள் 450 திரைப்படங் களில் பணியாற்றியவர் ஒளிப்படக் கலைஞர் நேஷனல்செல்லையா. அவர் தனது நிழற்பட நினைவுகளைச் சுகமாக அசைபோட்டிருக்கிறார். மூடப்பட்டுவிட்ட ஸ்டுடியோக் களுக்குள் நம் விரல்பிடித்து அழைத்துச் செல்லும் புத்தகம்
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ் | விலை ரூ.130

2019-ல் கவனம் ஈர்க்கும் புதுவரவுகள்

 

படத்தொகுப்பு: கலையும் அழகியலும்' l ஜீவா பொன்னுச்சாமி D.F.Tech.
படத்தொகுப்பு எப்படி நிகழ்கிறது, விதிகள், வகைகள், அடிப்படைத் தொழில்நுட்ப அம்சங்கள், அதன் ஐந்து முக்கியக் கூறுகள், பாடல் காட்சி- சண்டைக் காட்சிகளைப் படத்தொகுப்பு செய்யும் விதம்ஒலியில் படத்தொகுப்பு செய்யும் விதம், டைட்டில் பயன்பாடு, படத்தொகுப்புக்கு உதவும் மென்பொருட்கள், படத்தொகுப்பாளர்கள் குறித்த பட்டியல், வரலாறு எனப் படத்தொகுப்புத் துறையை மிக எளிமையாகவும் அழகாகவும்  விரிவாக எழுதியுள்ளார் திரைப்படக் கல்லூரி மாணவரான ஜீவா பொன்னுச்சாமி.
வெளியீடு: நிழல் - பதியம் பிலிம் அகாடமி விலை ரூ.350
திராவிட இயக்கமும் திரைப்படவுலகமும் l க.திருநாவுக்கரசு
அரசியலில் தீவிரமாக விளங்கிய திராவிட இயக்கம், அதே அளவுக்குத் தீவிரத்தோடு நாடகங்கள் மற்றும் திரைப்படங்களிலும் இயங்கியது. டி.வி.நாராயணசாமி, கே.ஆர்.ராமசாமி, வளையாபதி முத்துகிருஷ்ணன் என்று ஏகப்பட்ட நடிகர்கள்., ஏ.வி.பி.ஆசைத்தம்பி, கே.ஜி.ராதாமணாளன், இராம.அரங்கண்ணல் என்று பல்வேறு வசனகர்த்தாக்களை உள்ளடக்கியது திராவிட இயக்கத்தின் கலையுலகப் பங்களிப்பு. இன்றைய தலைமுறைக்கு அறிமுகமில்லாத பல அரசியல் தலைவர்களையும் திரைக்கலைஞர்களையும் விரிவான தகவல்களோடு அறிமுகப்படுத்தும் நூல்.
வெளியீடு: நக்கீரன் பதிப்பகம் | விலை: ரூ.350
எனக்குத் தாய்நாடு என்பதே இல்லை l யமுனா ராஜேந்திரன்
திரைப்பட விமர்சனம் என்பது எல்லோரது கைக்கும் சென்றுவிட்ட காலம் இது. யமுனா ராஜேந்திரன் போன்ற தீவிர விமர்சகர்களின் பார்வை, அக்கலையை அதன் பம்மாத்துக்களில் இருந்து காப்பாற்றி வளர்க்கக்கூடியது என்பதை உணர்த்தும் புத்தகம் இது. உலக, இந்திய, தமிழ் சினிமாக்களை பற்றிய முழுமையான விமர்சன நோக்குடன் அணுகும் அலசல் கட்டுரைகள். சினிமா ரசனையை உயர்த்திக்கொள்ளவும் சினிமா விமர்சனத்தைச் சரியாகக் கையாளவும் மறைமுகமாகக் கற்றுத்தரும் நூல்.
வெளியீடு: பேசாமொழி பதிப்பகம் | விலை ரூபாய். 400

இந்து தமிழ் வெளியீடுகள்

 

சினிமா எடுத்துப் பார்! l எஸ்பி.முத்துராமன்
எழுதாத திரைக்கதை இல்லை, இயக்காத நட்சத்திரம் இல்லை எனும் விதமாகத் திரை இயக்கத்தில் முத்திரை பதித்த திரை ஆளுமை எஸ்பி.முத்துராமன். கல்யாணம் பண்ணிப் பார்வீட்டைக் கட்டிப் பார்என்ற முதுமொழியுடன் சினிமா எடுத்துப் பார்என்ற புதுமொழியைத் தனது 60 ஆண்டு சினிமா அனுபவத்தின் வழியாகப் பகிர்ந்திருக்கிறார். இது அவரது திரைப்பயணம் மட்டுமல்ல; தமிழ் சினிமா வரலாற்றின் திடமான ஒரு பகுதியும்தான். 
காற்றில் கலந்த இசை l எஸ்.சந்திரமோகன்
இளையராஜாவின் திரையிசையைப் பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இது, ஆழ்ந்த அவதானிப்பும் உயர்ந்த ரசனையும் கொண்டு அவரது பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டிவிடும் ரசனையை மொழி வழியே மீட்டிய முதல் முயற்சி. இசை சார்ந்த, அறிவுத் துறைச் சொற்களை நாடாமலேயே இளையாராஜாவின் திரைப்பாடல்களில் நீங்கள் உணர்ந்த அத்தனையையும் புதுவிதமாக உணர வைத்து சிலிர்க்கவும் வைக்கும் அழகியல் பார்வை.
எம்.ஜி.ஆர் 100 - காலத்தை வென்ற காவியத் தலைவர் l தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
தமிழர்களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட நூற்றாண்டு நாயகர் எம்.ஜி.ஆர், திரையிலும் அரசியலிலும் பதித்துச் சென்ற சாதனைச் சுவடுகளின் தொகுப்பு. இந்து தமிழில் வெளியாகி வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற தொடரில் இடம்பெற்ற கட்டுரைகளின் நூல் வடிவம்.

No comments:

Post a Comment