Saturday 16 November 2019

தமிழின் சிறந்த நாவல்கள் -50 ஒரு வாசகனின் பரிந்துரை

ராயகிரி சங்கர்

இது  நூல்வெளி.காம் தளத்தில் வெளியாகி உள்ளது

வாசிப்பின் நோக்கம் என்ன? என்ற கேள்விக்கு உங்களின் பதிலைப்பொறுத்தே இருக்கிறது இப்பத்தியைத் தொடர்ந்து வாசிப்பதா வாசிக்காமல் கடந்து செல்வதா என்பது. எனக்கு வாசிப்பு என்பது ஒரு பிறவியில் பலபிறவிகளுக்கான வாழ்க்கை அனுபவங்களை அடைதல். விதிக்கப்பட்ட வாழ்வின்மேல் நின்றுகொண்டு என்னைச்சுற்றி இருப்பவர்களின் வாழ்வைப் புரிந்துகொள்ளுதல். 
மேலும் தீரா வெறியோடு அலைந்துதிரிந்து பொருள் சேர்க்கும் இவ்வாழ்வின் பொருள்தான் என்ன என்பதும். வாசிப்பினை நேரக்கொலை என்று கருதி புத்தகங்களைத் தேடிப் படிப்பவர்களோடு எனக்கு உடன்பாடில்லை. யானையைப் பிடித்து வந்து பிச்சையெடுக்க அங்குசத்தால் அடிமைப்படுத்தி வைப்பது போன்றதுதான் புத்தக வாசிப்பை வெறும் பொழுது போக்கிற்கெனத் தெரிவு செய்வது. இன்னொன்றும் இருக்கிறது. இலக்கியம் எல்லாருக்கும் உரியதல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கே அதன் கதவுகள் திறக்கின்றன. 
மெய்காண் முறை என்பார் எழுத்தாளர் ஜெயமோகன். கண்களால் காணும் அனைத்தின் உள்ளும் கட்புலனாகா கருப்பொருளை உருப்பெருக்கிகொண்டு காட்டுபவைதான் அத்தனை கலைகளும். இலக்கியம் மொழிகொண்டு இருப்பதால் நம்மைப் பாதிக்கும் அதன் ஆற்றல் அளப்பரியது.நம் மனம் என்பது முழுக்கவும் சொற்கனால் ஆனது. சொற்களில் உறைந்த நினைவுகளே படிமங்கள். இவ்வுலகைச் சொற்கள் கொண்டே அறிகிறோம். சொற்களின்றி நாம் காணும் பருப்பொருட்கள் இல்லை. அதொன்றே இரண்டாயிரம் ஆண்டுகளாக இடையறாமல் தொடர்ந்து வரும் நம் இலக்கிய மரபு. 
தமிழில் தீவிர இலக்கியம் என்றொரு பிரிவு கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக இயங்கி வருகிறது. நம்மில் பெரும்பாலோருக்கு அதன் முழுப் பரிணாம வளர்ச்சி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கல்வி நிலையங்கள் சங்க இலக்கியத்தையும் அறநெறிக் கருத்துக்களை வலியுறுத்தும் புனைவுகளையுமே நமக்கு அறிமுகம் செய்து வைக்கின்றன. விதிவிலக்காக சில இருக்கலாம். அதிகம் சுய தேடலினால் மட்டுமே நம் வாசிப்பு ரசனையை மேம்படுத்திக் கொள்ள முடிகிறது. வழிகாட்டவோ எடுத்துச்சொல்லவோ இங்கே அதிகப் பேர்கள் இல்லை. 
இப்போதைக்கு வாசிக்க வேண்டிய ஐம்பது தமிழ் நாவலாசிரியர்கள் என்று நான் கருதும் ஒரு பட்டியலை இடுகிறேன். யாருக்கேனும் சிலருக்கு இது உதவக்கூடும். 
1. சுந்தர ராமசாமி - ஒரு புளிய மரத்தின் கதை, ஜே.ஜே சில குறிப்புகள், குழந்தைகள் ஆண்கள் பெண்கள். 

2. தி.ஜானகி ராமன் - மோகமுள், அம்மா வந்தாள், நளபாகம், செம்பருத்தி, 

3. அசோகமித்திரன் - கரைந்த நிழல்கள், தண்ணீர், பதினெட்டாவது அச்சக்கோடு, மானசரோவர், ஒற்றன் 

4. ஜெயகாந்தன் - சில நேரங்களில் சில மனிதர்கள், பாரீசுக்குப்போ, கங்கை எங்கே போகிறாள், உன்னைப்போல் ஒருவன், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 

5. இந்திரா பார்த்தசாரதி - குருதிப்புனல், இயேசுவின் தோழர்கள், 

6. ஆதவன் - காகித மலர்கள், என் பெயர் ராமசேஷன் 

7. ப.சிங்காரம் - புயலிலே ஒருதோணி 

8. நாஞ்சில் நாடன் - எட்டுத்திக்கும் மதயானை, சதுரங்க குதிரை, என்பிலதனை வெயில் காயுமே, மாமிசப்படைப்பு 

9. பிரபஞ்சன் - வானம் வசப்படும், மானுடம் வெல்லும் 

10. தஞ்சைப்பிரகாஷ் - கரமுண்டார் வீடு, கள்ளம், மீனின் சிறகுகள் 

11. பூமணி - அஞ்ஞாடி, வெக்கை, பிறகு, நைவேத்தியம் 

12.எஸ்.ராமகிருஷ்ணன் - உறுபசி, யாமம், துயில், நெடுங்குருதி, உப பாண்டவம், சஞ்சாரம், இடக்கை 

13. ஜெயமோகன்.- காடு, ரப்பர், கன்னியாகுமரி, விஷ்ணுபுரம், கொற்றவை, பின்தொடரும் நிழலின் குரல், இரவு, ஏழாம் உலகம் 

14. யுவன் சந்திரசேகர் - குள்ளச்சித்தன் சரித்திரம், பகடையாட்டம், கானல்நதி, வெளியேற்றம், மணற்கேணி 

15. சாரு நிவேதிதா - ஸீரோ டிகிரி, புதிய எக்ஸைல், ராஜ லீலா. காம ரூபக்கதைகள், தேகம் 

16. கண்மணி குணசேகரன் - அஞ்சலை, நெடுஞ்சாலை, வத்தாரங்குடி, 

17. சு.வேணுகோபால் - நுண்வெளிக் கிரணங்கள் 

18. ஜி.நாகராஜன் - குறத்தி முடுக்கு, நாளை மற்றுமொரு நாளே 

19. நகுலன் - நினைவுப்பாதை, நிழல்கள் 

20. சம்பத் - இடைவெளி 

21. கோபால கிருஷ்ணன் - மணற்கடிகை, அம்மன்நெசவு 

22. ஷோபா சக்தி - கொரில்லா 

23. செந்தூரம் ஜெகதீஷ் - கிடங்குத்தெரு 

24. யூமா வாசுகி - இரத்த உறவு 

24. ஜெ.பிரான்சிஸ் கிருபா - கன்னி 

25. என்.ஸ்ரீராம் - அத்திமரச்சாலை 

26. கரிச்சான் குஞ்சு - பசித்த மானுடம் 

27. சயந்தன் - ஆதிரை 

28. தமிழ்நதி - பார்த்தீனியம் 

29.சோ.தர்மன் - கூகை, துார்வை 

30. பி.ஏ.கிருஷ்ணன் - புலி நகக்கொன்றை, கலங்கிய நதி 

31. சி.ஆர்.ரவீந்திரன் - ஈரம் கசிந்த நிலம் 

33. கிருத்திகா - குருசேத்திரம். புகை நடுவே 

34. சல்மா - .இரண்டாம் ஜாமங்களின் கதை 

35. உமா மகேஸ்வரி - யாரும் யாருடனும் இல்லை 

36. ஹெப்சிபா ஜேசுதாசன் - புத்தம் வீடு 

37. பாமா - கருக்கு 

38. இமையம் - கோவேறு கழுதைகள், ஆறுமுகம் 

39. கி.ராஜநாராயணன் - கோபல்ல கிராமம் 

40. சுகுமாரன் - வெலிங்டன் 

41. எஸ்.செந்தில்குமார் - காலகண்டம், மருக்கை, 

42. சு.வெங்கடேசன்- காவல்கோட்டம் 

43.பா.வெங்கடேசன் - பாகீரதியின் மதியம் 

44. ராஜ் கௌதமன் - சிலுவைராஜ் சரித்திரம் 

45. வண்ணநிலவன் - கடல்புரத்தில் 

46. தோப்பில் முகமது மீரான் - சாய்வு நாற்காலி, அஞ்சுவண்ணம் தெரு, துறைமுகம், கூனன்தோப்பு 

47. கீரனுார் ஜாகீர்ராஜா - மீன்காரத்தெரு, குட்டிச்சுவர்கலைஞன், வடக்கேமுறி அலிமா 

48. வா.மு.கோமு - சாந்தாமணியும் இன்னபிற காதல்கதைகளும், நாயுருவி 

49. நீல பத்மநாபன் - தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம் 

50. ஜோ.டி.குருஸ் - ஆழி சூழ் உலகு, கொற்கை, அஸ்தினாபுரம்.

 
-ராயகிரி சங்கர், புளியங்குடி.

No comments:

Post a Comment