Friday 20 October 2017

விவாகரத்து?


 என்.செல்வராஜ்

"வக்கீல் நோட்டீஸ் வந்திருக்கு. அப்பா ஊருக்கு வரச்சொல்றாரு " என்றான் நடராஜன். எதுக்கு என்று கேட்டான் குமார். எல்லாம் என் பொண்டாட்டி பண்ற வேலைதான்.அவளுக்கு விவாகரத்து வேணுமாம்" பதில் சொன்ன நடராஜன் வார்த்தையில்  கோபம் கொப்பளித்தது. கேட்டா நீ கொடுக்கணுமா. "அவங்க கேட்கட்டும் நீ முடியாதுன்னு சொல்லிடு" என்றான் குமார். "இல்ல, அப்பா கோர்டில விவாகரத்து கேஸ் ஃபைல் பண்ண வரச்சொல்றாரு" என்றான் நடராஜன்.

    நீ வரமுடியாதுன்னு உங்க அப்பா கிட்ட தெளிவா சொல்லிடு. இப்போதைக்கு ஆறப் போடு. ஆறு மாசம் போனா தானா உன் மனைவி வீட்டுக்கு வருவா. அவங்க பிடிவாதமா விவாகரத்து கேஸை தொடர்ந்தா அப்புறமா என்ன பண்றதுன்னு யோசிக்கலாம் "என்றான் குமார்.

கல்யாணம் ஆகி இரண்டு வருடம் ஆகியும் மனைவி சீதா  கரு தரிக்கவில்லையே என்று மனக்கவலையில் இருந்தான் நடராஜன்.இருவரும் ஒரே ஊர்.தெருமட்டும் தான் வேறு வேறு. நடராஜன் வீடு இருந்த தெருவின் ஆரம்பத்திலேயே ஒரு அழகிய பெருமாள் கோயில் இருக்கிறது. மன நிம்மதிக்காக அங்கே போய் அமருவான் நடராஜன். பல நாட்கள் சீதாவை அந்த கோயிலிலே பார்த்திருக்கிறான். சீதா பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறாள். நடராஜன் பட்டப்படிப்பு முடித்துவிட்டான். ஒரே ஊர் என்பதால் அவ்வப்போது இருவரும் பேசிக்கொள்வதுண்டு. வேலை கிடைத்து வெளியூர் கிளம்பியபோது அவளின் கண்களை பார்க்க அவன் சிரமப்பட்டான்.அவன் அவளை மனைவியாக்கிக்கொள்ள விரும்பினான். ஆனால் அதை அவன் அவளிடம் சொன்னதில்லை. வேலையில் சேர்ந்தவுடன் பெற்றோரிடம் சொன்னான்.அவர்களும் அந்த பெண்ணையே பேசி முடித்து அவனின் மனைவியாக்கினர்.

 அவன்  மனைவி மிகவும் நல்லவளாக இருந்தாள். இல்லற வாழ்க்கையும் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனாலும் குழந்தை இல்லை என்ற குறை மட்டும் மனதில் இருந்துகொண்டே இருந்தது. நகரின் பிரபல மருத்துவமனைக்கு சென்று வந்தான். குறை எதுவும் இல்லை என்று சொன்ன மருத்துவர் சில மாத்திரைகள் எடுத்துக்கொள்ள சொல்லி அறிவுறுத்தினார். அதன்படி மருந்து சாப்பிட்டு வந்த சில மாதங்களில் மனைவி கற்பமானாள்கற்பமான மனைவியை சைக்கிளில் வைத்து நண்பணின் வீட்டுக்கு அழைத்து சென்றான்.செல்லும் வழியில் திடீரென ஒரு சைக்கிள் வந்து மோத மனைவியுடன் கீழே விழுந்துவிட்டான். அந்த இடத்தில் சாலை மிகவும் சுத்தமானதாக இருந்ததால் அடி அதிகம் இல்லை. இருந்தாலும் மனைவிக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என்ற பயம் அவ்னுக்கு வந்து விட்டது. உடனே மருத்துவமனைக்கு மனைவியை அழைத்துச் சென்றான். கூட்டம் மிக அதிகமாக இருந்தது.அவனுடைய தவிப்பு அதிகமாகிக்கொண்டே வந்தது. நெஞ்சில் ஒரு பயம். ஏதேனும் ஆகி விட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்திலேயே இருந்தான்.குமார் டாக்டரின் உதவியாளரிடம் சென்று நடந்த விபத்தை சொல்லி உடனே டாக்டரை பார்க்க அனுமதிக்குமாறு கேட்டான் உதவியாளர் உடனே மருத்துவரை பார்க்க அனுமதித்தார். டாக்டரம்மா  நடராஜனின் மனைவியை பரிசோதனை செய்தபிறகு பிரச்னை  எதுவும் இல்லை என்றார்.

 எப்படியாவது உடனே ஒரு ஸ்கூட்டர்  வாங்கவேண்டும் என்று நினைத்தான். அப்போது வெஸ்பா ஸ்கூட்டர் பிரபலமாக இருந்தது.அவனுக்கு பிடித்த நீல நிற ஸ்கூட்டரை  கடன் வாங்கி உடனே வாங்கினான். அதில் மனைவியை உட்காரவைத்து அழகு பார்த்தான்.சீதாவுக்கும் பெருமைதான். கணவன்  ஸ்கூட்டர் வாங்கியதை எல்லோரிடமும் பெருமையாக சொல்லிக்கொண்டாள்.

      எதைச்செய்தாலும் அதை சிறப்பாக பலரும் பாராட்டும்படி செய்யவேண்டும் என்ற எண்ணம் நடராஜனுக்கு. வீட்டுக்கு வரும் நண்பர்களை நன்றாக உபசரிப்பான். எந்த நேரத்தில் போனாலும் சாப்பிடச்சொல்வான்.குமார் அவன் வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் சாப்பிடச் சொல்வான். ஆனால் குமாரின் பழக்கம் வேறு. நண்பர்கள் வீட்டுக்கு முன்பே முடிவுசெய்து அவனுக்காகவும்  சமையல் செய்யப்பட்டால் தான் சாப்பிட ஒத்துக்கொள்வான். இல்லை என்றால் ஏதேனும் காரணம் சொல்லிவிட்டு அவன் வீட்டுக்குப் போய்விடுவான்.எப்போது போனாலும் நடராஜனின் மனைவியும் சாப்பிடச் சொல்வார். அவனது பழக்கத்தை அவன் மாற்றிக்கொள்ளமாட்டான். எனவே நடராஜனும் அவன் மனைவியும் குமார் வந்தால் வீட்டில் இருக்கும் காரவகையில் கொஞ்சம் வைத்து காப்பி அல்லது டீ சாப்பிட சொல்வார்கள். அவனும் அவர்களின் நலம் விசாரித்துவிட்டு கிளம்பி விடுவான்.
 
    நடராஜனின் சில நண்பர்கள் அவனின் வற்புறுத்தலுக்கு இணங்கி சாப்பிடுவார்கள். அவன் தப்பாக நினைத்து விடக்கூடாதே என்று சாப்பிடுவார்கள். ஆனால் அவன் மனைவிக்கு சாப்பிட மிஞ்சுகிறதா என்பதை அவன் பார்க்காமல் விட்டுவிடுவான். பல நாட்களில் அவன் மனைவி சாப்பாடு இன்றி அசதியில் படுத்து விடுவாள். அவளுக்கு எரிச்சலாக இருக்கும். என்ன மனிதர் இவர். மனைவி சாப்பிட இருக்கிறதா என்றுகூட பார்க்காமல் வரும் நண்பர்களுக்கு உபசரிக்கச் சொல்கிறாரே என்று நினைப்பாள்.இந்த மாதிரியான எரிச்சல்கள் அவள் பார்வையில் கணவன் மீது கோபத்தை வரவழைத்தன. ஐந்து மாதம் நெருங்கி விட்டது.அவளது அண்ணன், அண்ணி இருவரும் ஒரு நாள் வந்தனர். விருந்து தடபுடலாக நடந்தது. மனைவியின் அண்ணனாச்சே. தங்கை குறை வைப்பாளா? அவர்கள் எதற்கு வந்திருப்பார்கள் என்பது நடராஜனுக்கு நன்றாகப் புரிந்தது. நடராஜனுக்கோ அவளது பிரசவத்தை தான் வேலை செய்யும் இடத்திலேயே வைத்துக்கொள்ளலாம் என்று ஆசை.

       மனைவியைப் பிரிந்திருப்பது மிகவும் கஷ்டம் என்று அவனுக்குத் தோன்றியது.மனைவியின் அண்ணன் " நடராஜன் என் தங்கச்சியை ஊருக்கு அழைச்சிகிட்டு போகலாம்னு வந்திருக்கேன். என்னைக்கு அழைச்சுட்டு  போகலாம் ? என்றார். அம்மாகிட்ட கேட்டுட்டு நாளைக்கு சொல்றேன் என்றான் நடராஜன்.ஊரில் இருக்கும் அப்பா, அம்மாவுடன் தொலைபேசியில் பேசினான். அவன் அம்மா " தலைப்பிரசவம் , அவங்க அம்மா வூட்டில தான் வச்சுக்கணும்.அது தான் முறை. நீ அனுப்பிடு . ஒரே ஊரு தானே. நான் பாத்துக்கிறேன். வந்து நம்ம வூட்டில ஏழாம் மாசம் வரைக்கும் இருக்கட்டும். வளைகாப்பிட்ட பிறகு அவங்க வூட்டுக்கு அனுப்பலாம் என்றார் அம்மா. நடராஜனும் சம்மதித்தான். இன்னும் இரண்டு மாசம் நம்ம வூட்டில தான இருப்பாள். அம்மாவுக்கு தெரிஞ்ச பெரிய டாக்டர் கிட்ட காட்டலாம். அந்த டாக்டர் கிட்டேயே பிரசவத்தையும் வச்சுக்க சொல்லலாம் என நினைத்தான்.

   மறுநாள் மச்சானிடம் பதில் எப்படி சொல்வது என்று யோசித்துக்கொண்டிருந்தான். மனைவி சீதாவிடம் கலந்து பேசுவது நல்லது என அவனுக்குத் தோன்றியது. மனைவியிடம் "உங்க அண்ணன் என்ன சொல்றாரு. இப்பவே ஊருக்குப் போகனுமா " எனக் கேட்டான். எனக்கு ஒண்ணும் இல்லீங்க. அம்மா அழைச்சிட்டு வரச் சொன்னதா அண்ணன் சொல்றாரு. நீங்க தான் சொல்லனும். நான் ஊருக்குப் போனா வர எப்படியும் ஒரு வருஷம் ஆயிடும். அதுவரைக்கும் நீங்க தனியா இங்க இருக்கணும்.அதான் ஒங்க கிட்ட கேட்க சொன்னேன்" என்றாள். "சரி அம்மாகிட்ட கேட்டேன். அவங்க உன்னை அனுப்ப சொல்லிட்டாங்க.ஆனா வளைகாப்பு  வரைக்கும் எங்க வீட்டுல தான் இருக்கனும். அப்புறமா உங்க அம்மா வீட்டுல இருக்கலாம். டாக்டர் எங்க அம்மாவுக்கு தெரிஞ்சவங்க. அவங்க கிட்ட காட்டிக்கலாம். எல்லா செலவையும் நானே பாத்துக்குறேன். நீ நல்லா இருந்தா எனக்கு போதும் . அப்புறம் உன் இஷ்டம் " என்றான் நடராஜன். ஊருக்குப் போக கணவன் சம்மதம் சொன்னதும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனாள் சீதா. அம்மாவைப் பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டன. கர்ப்பமாக இருப்பவள்  மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று எல்லோரும் சொல்வார்கள். கருவில் இருக்கும் காலத்திலேயே அபிமன்யு சக்கரவியூகததை உடைத்து உள்ளே நுழையும் வித்தையை அறிந்தான் என்கிறது மகாபாரதம். பிரகலாதன் கருவில் இருக்கும்போது நாரதரின் உபதேசத்தால் நாராயணனின் பக்தனானான். எனவே அவளை சந்தோசமாக வைத்திருக்க வேண்டும் என்றே நடராஜன் விரும்பினான்,

         மனைவி ஊருக்குப் புறப்பட்டாள். அவள் கண்கள் கலங்கியிருந்தன. முந்தானையை எடுத்து துடைத்துக்கொண்டாள். நடராஜன் அதை கவனித்துவிட்டு
'சீதா நீ நம்ம வீட்டுக்குத்தானே போற, அதுக்குப்போயி கண் கலங்குறியே " என்றான். "இல்லீங்க உங்களை நெனச்சா கஷ்டமா இருக்கு. நான் இல்லாம எப்படி கஷ்டப்படுவீங்களோன்னு நெனச்சேன். அதான் கண் கலங்கிட்டுது " என்றாள். ஊருக்கு போனதும் அவளும் அண்ணனும் முதலில் அவர்கள் வீட்டுக்குச் சென்றார்கள். வீட்டுக்கு போனதும் அம்மா " ஏண்டி ஒன் வீட்டுக்கு போகப்போறீயா " என்றாள்." ஆமாம்மா. என் வீட்டுக்காரரு அப்படித்தான் சொல்லி அனுப்புனாரு" "அதெல்லாம் சரி. ஆனா உன்னோட மாமியார் உன்ன விடாம திட்டிகிட்டே இருப்பாங்களே.அத எப்படி சமாளிப்ப"  "எப்படியும் பொறுத்து தான் போகனும் . ரொம்ப முடியாம போச்சுன்னா நா இங்க வந்துடுறன்"  "சரி அவங்க கிட்ட மரியாதை கொடுத்து பேசு . ஏதாவது சொன்னாலும் மரியாதை இல்லாம பேசிடாதே "  "அதெல்லாம் எனக்குத் தெரியும். நான் பாத்துக்கறன்."   அம்மாவிடம்  சொல்லிவிட்டு மாமியார் வீட்டுக்குப் போனாள் சீதா.

            மாமியார் வாசலிலேயே வரவேற்றார்." என்னக்கி வந்தவளுக்கு இன்னக்கி தான் வழி தெரிஞ்சுதா. ஒன்ன சொல்லி குத்தமில்ல. எல்லாம் எம் மவன் கொடுக்கிற தைரியம். ஊருக்கு வந்து ரெண்டு நாள் கழிச்சு வரே. என் மவன் என்னடான்னா பொண்டாட்டி ஊட்டுக்கு வந்துட்டாளா.. வந்துட்டாளான்னு தெனம் போன் போட்டு கேட்டுகிட்டு இருக்கான். நான் என்னத்த சொல்ல ... " என்றவாறே " சரி உள்ளே போ" என்றாள். "என்ன மருமவளே துணி மணியெல்லாம் எங்கே ?சும்மா வந்திருக்க " என்றார் மாமியார். "அத்தே நான் எங்க அம்மா வீட்டிலேயே தங்கிக்கிறனே, தெனம் இங்க வந்துட்டுப் போறேன் " என்றாள் அவள். " மவன் கிட்ட பேசிட்டுதான் சொல்ல முடியும் " என்றார் அவர் மாமியார்.

    அன்னக்கி சாயங்காலம் மகனின் போன் வந்தததாக போஸ்ட் ஆபீசில் இருந்து தகவல் வந்தது. மாமியார் மருமகளையும் அழைத்துக்கொண்டு போஸ்ட் ஆபீஸ் போனார். மகனின் போன் வந்ததும் " தம்பி இன்னிக்குத் தான் மருமவ நம்ம வூட்டுக்கு வந்தா. அவங்க வூட்டிலேயே தங்கிக்கறேன்றா, என்னடா சொல்றே "என்றார் அவனின் அம்மா. மறுமுனை சற்று அமைதியானது." சரி போன என் பொண்டாட்டிகிட்ட கொடும்மா நான் பேசிக்கிறன் "என்றான் நடராஜன்.போனை மருமகளிடம் கொடுத்தார். மறுமுனையில் இருந்த சீதாவின் கணவன் எடுத்த எடுப்பிலேயே திட்ட ஆரம்பித்தான். சீதா பதிலேதும் சொல்லவில்லை. கொஞ்ச நேரம் கழித்து "ஏன் எங்க வூட்டில இருக்க மாட்டியா" " இல்லீங்க ஒங்க வீடு நீங்க இல்லாம எனக்கு சரிப்பட்டு வராது. அதான் எங்க வீட்டிலேயே இருக்கலாம்னு நெனைக்கிறன்"  "அதை ஊருக்கு கிளம்பும்போதே சொல்லி இருக்கலாம்ல. ஊருக்கு போயிட்டு இப்படி பண்றியே" "அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க தெனம் நம்ம வூட்டுக்கு வந்துட்டு போறேன். அடுத்த தெரு தானே எங்க வூடு "  " ஏதாவது பண்ணித்தொல . அம்மா வூட்டுக்கு போயிட்டா பொண்ணுகள புடிக்க முடியாது. அங்க ஏதாவது பிரச்னை வந்ததுன்னா நான் உன்னை பார்க்ககூட வரமாட்டேன், அம்மா கிட்ட போன கொடு" போனை மாமியாரிடம் கொடுத்தாள். " அம்மா அவ அவங்க வூட்டுல இருந்துட்டு போகட்டும்.நீ ஒன்னும் கேக்க வேணாம்"  "எக்கேடாவது கெட்டுப்போங்க எனக்கென்ன " என்றபடி போனை வைத்த அம்மா தன் மருமகளிடம் ஏதும் பேசாமல் வீடு திரும்பினாள்.

      தினம் வீட்டுக்கு வருவதாக சொன்ன மருமகள் வாரத்துக்கு ஒரு நாள் கூட வரவில்லை. மகனுடன் பேசும்போது மருமகளைப் பற்றிய வருத்தத்தை அம்மா தெரிவித்தாள். ஊருக்கு வந்ததிலிருந்தே சீதா எதிர் வீட்டில் குடியிருக்கும்  சதீஷுடன் அடிக்கடி பேசப் போய்விடுவதாகவும் வீட்டுக்கு இரவில் கூட நேரமாகித்தான் வருவதாகவும்  செய்திகள் அம்மாவுக்கு வந்துகொண்டே இருந்தன. செய்திகளைக் கொண்டு வந்து தந்தவள் அவள் சிறிய மகள். தினம் அவள் அண்ணியைப் பார்க்கப் போவாள். அப்படியே அங்கு கிடைக்கும் செய்திகளை அம்மாவிடம் வந்து சொல்லிவிடுவாள். அண்ணியைப் பக்கத்து வீடுகளில் இருக்கும் பெண்கள் கேலியாக பேசுவதை அம்மாவிடம் சொல்லிய அவள் மகள் செல்வி " அம்மா அண்ணி இங்க வந்தால் இத கேளும்மா" என்றாள். எப்படி கேட்பது என்று தயங்கியபடி இருந்த அம்மா ஒரு நாள் சம்மந்தி வீட்டுக்கு போனார். அவர் போனபோதும் சீதா எதிர் வீட்டுக்கு போயிருந்தாள். சம்மந்தியம்மாவிடம் மருமகள் எப்படி இருக்கிறாள் என்று கேட்ட அம்மா எங்கே என் மருமவ எனக்கேட்டாள். சீதா எதிர்வீட்டுக்கு போயிருப்பதாக சொன்னால் பிரச்னை  வரும் என்று நினைத்த அவள் அம்மா " அண்ணன் வீட்டுக்கு போனாள்.எப்ப வருவாளோ தெரியாது " என்றாள். அம்மாவின் கண் எதிர்வீட்டிலேயே இருந்தது. தன் மகள் சொல்வது உண்மையா என பார்க்கவே அவள் அன்று அங்கே வந்தார். இரவு எட்டுமணிக்கு மேல் சீதா எதிர் வீட்டிலிருந்து வெளியே வந்தாள். அவள் பின்னாலேயே சதீசும் வீட்டைவிட்டு வெளியே வருவது தெரிந்தது. அதைப் பற்றி எதுவும் கேட்காத சீதாவின் மாமியார் சம்மந்தி அம்மாவிடம் விடைபெற்று கிளம்பினாள்.

எதுவும் கேட்காமல் வீடு திரும்பிய நடராஜனின் அம்மா தன் கணவரிடம் " சீதா பண்றது ஒண்ணும் சரியில்லீங்க. எப்ப பாத்தாலும் எதிர் வீட்டுல போய் உக்காந்துகிட்டு சதீசுடன் பேசிக்கொண்டே இருக்கிறாள். நாளக்கி பையன் பேசுனான்னா அவன்கிட்ட சொல்லிடுறன். அவனே அவ கிட்ட கேட்கட்டும். நாம பேசுனா நாம அவ மேல தப்பா சொல்றோம்னு சொல்லிடுவாங்க.வயித்தில புள்ளய சுமந்துகிட்டு இருக்கிறவள நாமளும் ஒன்னும் கேட்க முடியாது " என்றார். அவரும் சரி என்றார். மறுநாள் நடராஜனின் அழைப்பு வந்தது. அம்மா மட்டும் போன் பேசப் போனார். " எப்படிம்மா இருக்கே? அப்பா நல்லா இருக்காரா. என் சீதா எப்படி இருக்கா " என்று கேட்ட நடராஜனிடம் " எல்லாரும் நல்லாதான் இருக்காங்க. ஆனா உன் பொண்டாட்டி பண்றது தான் இப்போ ஊரே பேச்சா கிடக்கு.எப்ப பாத்தாலும் எதிர் வீட்டு சதீசு வீட்டிலேயே கிடக்கிறாள். அவளை கண்டிச்சி வை. இல்லேன்னா அவ கத இங்க நாறிப்போயிடும். நா அம்புட்டுதான் சொல்லமுடியும்" என்றார் அம்மா.

நடராஜனுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. சீதா பேசும்போது கேட்டுவிடத் துடித்தான். இருந்தாலும் எந்த வித ஆதாரமும் இல்லாமல் அவள் மீது குற்றம் சுமத்த முடியாமல் தவித்தான்.அவன் அம்மா சொல்வதை நம்புவான் என்றாலும் சீதாவின் விஷயத்தில் நம்பமுடியவில்லை.அம்மா அவ இப்ப எங்க? என்ற மகனிடம் அவள் வரவில்லை என்று பதில் சொன்னார் அம்மா. சீதாவிடம் பேசவேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு போய்விட்டது.வெறுத்துப்போய் போனை வைத்துவிட்டான்.சில நாட்கள் மனைவி அழைத்துப் பேசுவாள் என்று பொறுத்துப் பார்த்தான் நடராஜன். ஆனால் அவள் பேசவில்லை. அவள் மீதான வெறுப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது. கடைசியில் அவளிடம்  பேசிவிட முடிவு செய்து அவன் ஊர் போஸ்ட் ஆபிஸை அழைத்தான்.போஸ்ட் மாஸ்டரிடம் சீதாவை வரச்சொல்லுங்கள் என்றான். அவரும் சீதாவை அழைத்துவர ஆள் அனுப்பிவிட்டு சற்று நேரம் கழித்து மீண்டும் கூப்பிடச்சொன்னார். கொஞ்ச நேரம் கழித்து நடராஜன் போஸ்ட் ஆபீஸ் எண்ணுக்கு அழைத்தான். போஸ்ட் மாஸ்டர் சீதாவிடம் போனைக்கொடுத்தார்.யாரு சீதாவா? என்ற நடராஜனுக்கு பதிலாக ஆமாங்க, எப்படி இருக்கீங்க ? என்றாள் சீதா.

      " ஏண்டி எத்தனை நாளாவுது. என்னைக் கூப்பிட்டு பேசனும்னு உனக்கு தெரியாதா?"  நீங்க கூப்பிடுவிங்கன்னு இருந்தேன்.இன்னிக்கு தான் பேசத்தோணுச்சா உங்களுக்கு " உன்னை என் ஊட்டுக்குத்தானே போவச்சொன்னேன். ஒங்கம்மா ஊட்டுக்கு போய் தங்கிகிட்டு எதிர்வீட்டுக்காரனோட கூத்தடிக்கிறியா? "  எப்பவும் பேசற அவன் கிட்ட பேசறத எப்படி தப்பா பேசுறீங்க? " நீ அவங்கிட்ட பேசக்கூடாது. ஒடனே எங்க வூட்டுக்கு போய் தங்கிக்க. ஒங்க அம்மா வூட்டுக்கு நான் வர்ரப்ப போய்க்கலாம் " யாரோ சொல்றதுக்கெல்லாம் என் பேர்ல தப்பு சொல்றீங்க. நான் ஒரு தப்பும் பண்ணல. நான் ஒங்க வூட்டுக்கு போவ முடியாது. நீங்க வரப்ப  நான் ஒங்க வூட்டுக்கு வரேன் " ஒங்க அம்மா இருக்கிறவரைக்கும் நீ உருப்படமாட்டே, சொன்னா கேளு,. எங்க ஊட்டுக்கு போ. நான் ஒரு மாசத்துல வரேன்.அப்ப எல்லாத்தையும் பேசிக்கலாம்." ஏன் ஒங்கம்மா யோக்யமா ? அவங்களால தான் பிரச்னையே. எங்க ஊட்டுக்கு ஆள் அனுப்பி வேவு பாக்குறாங்க" ஏண்டி நீ எதுத்த வூட்டுல இருக்கும்போது ஒங்கம்மா நீ உன் அண்ணன் வூட்டுக்கு போயிருக்கிறதா எங்கம்மாகிட்ட பொய் சொன்னாங்க? "ஓ அதான் பிரச்னையா. நான் அங்கே போனதுல என்ன தப்பை கண்டுபிடிச்சுட்டீங்க? " ஊர்ல ஒன்னபத்தி யாரும் தப்பா பேசிட்டா என்ன செய்றது " யார் பேசுறா ? ஒங்கம்மாதான் வூடு வூடா போய் என்னப்பத்தி பேசிட்டு இருக்காங்க. நான் உத்தமி இல்லேங்குறாங்க.அப்புறம் அங்க நான் எப்படி போகமுடியும். என்னால முடியாது.நீங்களாச்சு ஒங்கம்மாவாச்சு, எப்படியாவது போங்க. நான் பத்தினி இல்லேனே வச்சுக்கிங்க. கெட்டபேரு வாங்கிகிட்டு ஒங்க வூட்டுல என்னால இருக்கமுடியாது. இதுக்கு மேல நான் என்ன சொல்ல. போன வச்சுடுங்க" அவள் பேச்சை முடித்துக்கொண்டாள். அதன் பிறகு இருவரும் பேசிக்கொள்ளவேயில்லை.

       சீதாவுக்கு ஆண்  குழந்தை பிறந்துவிட்ட செய்தியை நடராஜனின் அம்மா தெரிவித்த போது அவன் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தான். அம்மாவிடம் எங்கிட்ட பேசாத அவள் பெத்த என் புள்ளய எப்படிம்மா நான் பாக்குறது? என்றான். அம்மாவின் குரலில் கோபம் எதுவும் இல்லை. ஆசுபத்திரியில தான் இப்ப இருக்கா. அங்க போய் பாத்துட்டு வா. பாவம் உனக்காக காத்துட்டு இருப்பா. உடனே வா" என்றார் தாய். மறுநாள் ஊருக்கு வந்த நடராஜன் தன் மனைவியையும், குழந்தையையும் மருத்துவமனையில் சென்றுபார்த்தான். அம்மாவும் கூடவே வந்தார்கள். அங்கேயும் சீதாவின் அம்மா தன் மருமகனிடன் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார்." ஒங்கம்மா எப்படி என் பொண்ண தப்பானவள்னு சொன்னாங்க.அதுக்கு ஒரு பதில் தெரியற வரைக்கும் என் பொண்ணு ஒன் வூட்டுக்கு  வரமாட்டா" என்றார். இங்க பாருங்க, என் பொண்டாட்டிய என்னெக்கு என் வூட்டுக்கு அனுப்ப தோணுதோ அப்ப சொல்லுங்க. அதுவரைக்கும் வாய மூடிக்கிட்டு இருங்க .வீணா பிரச்னையை வளக்காதீங்க" என்றவன்  அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டு  சென்றான். ஊருக்கு போனவனுக்கு சில நாட்கள் கழித்து வக்கீல் நோட்டீஸ் தான் வந்தது. இனி வாழ்வு வேதனையானது தான்  என்று அவன் நினைத்தபோது தான் அவன் நண்பனின் வார்த்தைகள் சரி எனப்பட்டன.ஆனாலும் சமாதானம் செய்வது யார் என்ற கேள்வியும் கூடவே எழுந்தது. ஒரு நாள் முழுவதும் அவன் மனம் ஊசலாடிக்கொண்டிருந்தது. குமார் சொல்வதைத்தான் கேட்கவேண்டும் என்று மனம் முடிவு செய்ய, அவன் தந்தைக்கு போன் செய்து தன் தந்தையிடம்  விவாகரத்தில் தனக்கு விருப்பமில்லை என்று பதில் சொல்லி போனை வைத்துவிட்டான்..


Email:- enselvaraju@gmail.com

Monday 24 July 2017

இலக்கியச் சிந்தனை 2016 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள்

  

   என் செல்வராஜ்



இலக்கிய சிந்தனை  அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டில் பத்திரிக்கைகளில் வெளிவந்த சிறுகதைகளில் பன்னிரண்டு சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து பரிசளிக்கிறது.அதில்  சிறந்த ஒரு கதையை ஆண்டின் சிறந்த சிறுகதையாக ஒரு எழுத்தாளர் தேர்ந்தெடுத்து அந்த கதையின் தலைப்பில் 12 கதைகளையும் வானதி பதிப்பகம் மூலம் வெளியிட்டு வருகிறது.2016 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பை கைபடாமல் குச்சி ஐஸ் தயாரிப்பது எப்படி? மற்றும் கப்/கோன்/குல்ஃபி சாப்பிடுவது எப்படி என்ற கதையின் தலைப்பை புத்தகத்தின் தலைப்பாகக் கொண்டு வெளியிட்டிருக்கிறது. இது இலக்கிய சிந்தனை அமைப்பின் 47 ஆவது ஆண்டு .இந்த பரிசளிப்பு விழாவும் புத்தக வெளியீடும் 2017 ஏப்ரல் 14 ல் சென்னையில் நடந்தது. 2016 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக கைபடாமல் குச்சி ஐஸ்தயாரிப்பது எப்படி? மற்றும் கப்/கோன்/குல்ஃபி சாப்பிடுவது எப்படி? என்ற கதையை தேர்ந்தெடுத்தவர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள்.அவரின் பன்னிரண்டு கதைகளைப்பற்றிய மதிப்புரை தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

  2016 ஆம் ஆண்டின் சிறந்த பன்னிரண்டு கதைகள்

   1. நாலு ஜனம் - ஜி விஜய பத்மா -   ( கல்கி)

   2. புரிதல் - லலிதா ராம்         ( குமுதம் தீராநதி)

   3. ஆழம் - கலைச்செல்வி     ( கணையாழி )

   4. கைபடாமல் குச்சி ஐஸ்தயாரிப்பது எப்படி? மற்றும் கப்/கோன்/குல்ஃபி   
      சாப்பிடுவது எப்படி? - ராமச்சந்திர வைத்தியநாத்-    செம்மலர்

   5. அழையாத விருந்தாளி - சாருகேசி  ( அமுதசுரபி )

   6.   யா(ன்) னை ! - ப்ரியா கல்யாணராமன்  ( குமுதம் லைஃப்)

 7. காலவியூகம் - என் ஸ்ரீராம்      ( காலச்சுவடு)

 8. கனியும் மாற்றம் - பா ரகுபதி ( கல்கி)

 9. ரிட்டயர்மண்ட் - மதுரை சரவணன் - செம்மலர்

10. நாடு கடத்துதல் - எஸ் செல்வசுந்தரி - தினமணிக்கதிர்

11. ஆகாசப்பூ - பிரபஞ்சன்  - ஆனந்த விகடன்

12. திரை - ஜா தீபா    - ஆனந்த விகடன்.


நாலு ஜனம் - ஜி விஜய பத்மா

    வாழும்போது பிறருக்கு உதவினால் அவன் சாகும்போது நாலுபேர் உதவிக்கு வருவார்கள் என்பதை மையமாகக் கொண்டது. பாலு வேலையில்லாமல் வீட்டில் இருக்கிறான். கையில் காசில்லாமல் மொபைலுக்கு டாப் அப் கூட செய்யமுடியாத நிலை.மற்றவர்களுக்கு அப்பா உதவுவதை விரும்பாதவன். ஆனால்அவன் அப்பா எல்லோருக்கும் உதவுபவர். கடன் வாங்கியும் மற்றவர்களுக்கு பிரச்னை என்றால் உதவுபவர். அவருக்கு  ஹார்ட் அட்டாக் வருகிறது. அப்பா கையில் காசு இல்லை. பாலுவிடமும் ஒன்றும் இல்லை. வைத்தியம் செய்யப் பணமில்லை அதனால் ஹாஸ்பிடல் போகவேண்டாம் என தடுக்கிறார் அப்பா. ஜிஹெச் போகலாம் என்கிறான் பாலு.அதற்குள் சாவு முந்திக்கொள்கிறது. அப்பா இறந்து விடுகிறார்.வைத்தியத்துக்கே காசில்லாத அவன் அப்பாவை எடுப்பதற்கு என்ன செய்வது என தவிக்கிறான். அவன் வீட்டுக்கு அருகில் இருக்கும் நாயர் காசு கேட்காமலே டீ  போட்டு டிரம்மில் அனுப்புகிறார். பக்கத்து வீட்டு மாமா பாலு கையில் ஐயாயிரம் ரூபாயை கொடுத்து எப்படியும் தூக்குற செலவு ஒரு லட்சம் ஆகிவிடும் என்கிறார்.அப்பாவுடன் வேலை பார்த்த பியூன்  சண்முகம் இரண்டு நாளைக்கு முந்திதான் அவன் அப்பா கட்டி வந்த சீட்டை எடுத்தார் என்றும் அந்த பணம் இரண்டு லட்ச ரூபாயில் எடுப்பதற்கான செலவையும், குழந்தை இல்லாமல் இருக்கும் அவன் அக்காவுக்கான வைத்திய செலவையும் பார்த்துக்கொள்ளச் சொல்கிறார்.அந்தப் பணத்தில் அப்பாவை எடுக்கிறான்.அப்பா கோபத்தில் ஒரு நாள் தன் சாவுக்கு  மகன் செலவு செய்ய வேண்டாம் என்றும் தன் காசிலேயே எல்லாம் நடந்து விடும் என்று சொன்னது அப்படியே நடந்து விடுகிறது.

       அப்பா சம்பாதித்த பணத்தில் வாழும் மகன்களுக்கு இது ஒரு பாடம். பணமில்லையென்றால் மருத்துவம் யாருக்கும் கிடைப்பதில்லை இது இன்றைய நிலை. மருத்துவத்துக்கு ஆகும் செலவை விட இன்று அதிக பணம் இறுதிச் சடங்குகளை நடத்த தேவைப்படுகிறது.திருமணமான பெண்ணுக்கு குழந்தை இல்லை என்றால் அதற்கான வைத்திய செலவையும் அவளின் பெற்றோர் தான் செய்யவேண்டும் போன்ற உண்மைகளைச் சொல்கிறது இந்த கதை.


 ஆழம் - கலைச்செல்வி

    குளிர்பான ஆலைகள் வந்ததால் அந்த ஊர் தண்ணீரில்லாமல் வறண்டு போகிறது. வரலட்சுமியின் நிலத்துக்கு தண்ணீரில்லாததால் பயிர்வைக்க முடியாத நிலையில் கடன் வாங்கி ஆழ்குழாய்க் கிணறு போடுகிறார்கள். 180 அடியை நெருங்கியும் தண்ணீர் வராததால் அதற்கு மேல் போர் போட வசதியின்றி நிறுத்தி விடுகிறார்கள். அந்த போர்வெல் போட்ட துளை மூடப்படவில்லை. அது இலைகளால் மூடி கிடக்கிறது. கணவன் நாச்சிமுத்து கடனை அடைக்க வழி இல்லாமல் கூலிக்காரனாகி  குடிகாரனாகி விடுகிறான்ஊர் எல்லையில் இருக்கும் கிணற்றில் இருந்து குடிக்கத் தண்ணீர் கொண்டுவர தன் இரண்டு மகள்களுடன் போகிறாள் வரலட்சுமி. மகனும் பிடிவாதமாக அவர்களுடன் வருகிறான். மகன் சின்னவன்.சட்டை கூட போடாமல் அம்மாவுடன் போகிறான். வழியில் சிறுநீர் கழிக்க ஒதுங்குகிறான். இலைகளால் மூடப்பட்டிருக்கும் அவளது நிலத்திலுள்ள  போர்வெல் துளைக்குள் விழுந்து விடுகிறான். அய்யோ அக்கா என்று அலறல் கேட்டு அவனது பெரிய அக்காள் திரும்பி பார்த்தபோது கை மட்டுமே வெளியே தெரிகிறது.வரலட்சுமி அடித்துக்கொண்டு புலம்புகிறாள். ஊர்க்காரர்கள் போலீசுக்கு தகவல் சொல்லி அவர்கள் மூலம் தீயணைப்பு படை வருகிறது.108 ஆம்புலன்ஸ் வருகிறது. ஆழ்துளை கிணற்றுக்குள் ஆக்சிஜன் செலுத்துகிறார்கள். அதிகாரிகள் வருகிறார்கள் .பையன் 44 அடி ஆழத்தில் கிடப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.பொழுது போய் விடுகிறது. எப்படியும் பையனை எடுத்துவிடலாம் என்று நினைக்கும் அதிகாரிகளுக்கு பையன் 60 அடிக்கும் கீழே போய்விட்டான் என்பதை அறிந்ததும் பாறையை வெடிவைத்து தகர்த்து குழி தோண்ட முடிவு செய்கிறார்கள். ஆக்சிஜன் சிலிண்டர் அகற்றப்படுகிறது. வரலட்சுமிக்கு பயம் ஏற்பட்டு அதிகாரிகளைக் கேட்கிறாள். பாறையாக இருப்பதால் 30 அடிக்கு கீழே குழி தோண்ட முடியவில்லை என்றும் சிறுவன் முகம்  மண் மூடி கிடப்பதால் அவன் உயிரோடிருக்க வாய்ப்பில்லை என்றும் உடலை வெளியே எடுக்க வெடிவைத்து பாறைகளை உடைத்துப் பின் பள்ளம் தோண்டவேண்டும் என்கிறார்கள். தன் பையனே இறந்த பிறகு இனி தோண்டவேண்டாம் என்கிறாள் அவள்.அதிகாரிகள் அவளுக்கு நிலமையை புரிய வைக்க முயல்கிறார்கள். அவளோ " இருக்கிற எடத்தையும் பள்ளம் தோண்டி போட்டுட்டு போயிடுவீய...இன்னும் ரெண்டு பொட்டப்புள்ளங்க இருக்குதய்யா... அதுங்களை வெசம் வச்சா சாவடிக்க ?....." என்கிறாள் என்று கதை முடிகிறது.

                 ஆழ்துளைக் கிணறுகள் தோண்டினால் தண்ணீர் கிடைக்காத போது அந்தத் துளையை மூடாமல் அப்படியே போட்டு விடுகிறார்கள். வரலட்சுமி போர்வெல்லும் அதே கதை தான். அந்த மூடப்படாத போர்வெல் அவளின் மகனுக்கே எமனாகி விடுகிறது. நமது நிர்வாகமோ ஒரே மாதிரியான குழி தோண்டி சிறுவன் இருக்கும் ஆழம் வரை செல்லும் முறையையே கையாள்கிறது. பள்ளம் தோண்டுவதால் ஏற்படும் அதிர்வுகளே சிறுவனை இன்னும் உள்ளே கொண்டு போய்விடுகிறது. கடைசியில் வரலட்சுமி  சொல்வது போல் நிலத்தை பள்ளமாக்கி பிணத்தை அதன் சொந்தக்காரர்களிடம் கொடுத்துவிட்டு நகர்ந்து விடுவதாக இருக்கிறது. அந்த பள்ளத்தை மூட ஆகும் செலவு மிக அதிகம் ஆகும் என்பதே நிதர்சனமான உண்மை.அதைத்தான் வரலட்சுமி அதிகாரிகளிடம் சொல்வதாக கதை முடிகிறது.

  ரிட்டயர்மெண்ட் - மதுரை சரவணன்

      கணவன் ரிட்டயர்ட் ஆன பிறகு தினமும் அவரை அதிகாலை வாக்கிங்குக்கு தயார் செய்து அனுப்புவது முதல் மதிய உணவையும் தயார் செய்து எடுத்துக்கொண்டு பள்ளி செல்லும் பள்ளி ஆசியை சித்ரா  ஒரு நாள் ரிட்டயர் ஆகிறாள். பள்ளிக்கு சென்று குழந்தைகளைப் பார்க்கவேண்டும் என்பது அவள் ஆசை.ஆனால் அவளுக்கு முன்னால் ரிட்டயர் ஆன கிளாரா டீச்சர் பள்ளிக்கு வந்தபோது எல்லோரும் கிண்டலடித்ததையும் அவர் பள்ளிக்கு புரவலர் திட்டத்திற்காக தனது பென்சன் பணத்தில் பத்தாயிரம் தர வந்தபோது தலைமை ஆசிரியர் முதல் யாருமே மதிக்காத நிலையையும் பார்த்த சித்ராவுக்கு பள்ளிப் பிள்ளைகளைப் பார்க்காமல் எப்படி காலத்தை ஓட்டுவது என தவிக்கிறாள். பள்ளி மதிய உணவு வேளையில் கணவர் அவளைச் சாப்பிடுமாறு போனில் நினைவூட்டுகிறார். அவளுடைய இரண்டு பெண்களும் வெளிநாட்டில் இருக்கிறார்கள். வீடு சொந்த வீடு. ஆனாலும் அங்கு தொடர்ந்து இருப்பது கடினம் என்பதை உணரும் அவள் போனில் விசாரிக்கும் தன் கணவரிடம் வேறு வீட்டுக்கு போய்விடலாம் என்கிறாள். சொந்த வீடு அது என்பதை ஞாபகப்படுத்துகிறார் கணவர். அவளோ வாடகை வீட்டுக்கு போக புரோக்கரை அழைத்து பள்ளிக்கு எதிரில் உள்ள அபார்ட்மெண்ட் வாடகைக்கு வேண்டும் என்று கேட்கிறாள். கணவரும் சம்மதிக்கிறார்நகரின் ஒரு பள்ளியின் அருகில் உள்ள அபார்ட்மெண்டுக்கு குடியேறுகிறார்கள். தினந்தோறும் அவள் வாழ்க்கை பள்ளியில் இருப்பது போன்றே கடக்கிறது. அவள் கணவரும் மகிழ்கிறார். பள்ளி குழந்தைகளை பார்த்துக்கொண்டே அவர்கள் பள்ளி உணவு நேரத்தில் சாப்பிடுகிறார்கள்.

                       ரிட்டயர்மெண்ட் தவிர்க்க முடியாதது. பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள்  அடிக்கடி அவர்கள் பணியாற்றிய அலுவலகம் செல்லவே  விரும்புவார்கள்.ஆனால் அவர்களுக்கு எந்த மரியாதையும் கிடைக்காதபோது, பணியில் இருப்பவர்கள் காட்டும் அலட்சிய மனோபாவத்தைப் பார்க்கும்போது ஏன் அங்கே போனோம் என்று ஆகிவிடும்.அதனாலேயே பெரும்பாலும் ரிட்டயர் ஆன பின் யாரும் தன் அலுவலகம் போக விரும்புவதில்லை. சித்ரா போல ரிட்டயர்ட் வாழ்க்கையை தனக்கு பிடித்தவாறு அமைத்துக்கொண்டால் நீண்ட நாள் நலமாக வாழலாம்.



  கால வியூகம் - என் ஸ்ரீராம்

                   அனாதையான சிறுவன் சேதுவை பெரிய சிற்பி எடுத்துச் சென்று தன் வீட்டில் வளர்க்கிறார்.அவனுக்கு சிற்பம் செதுக்கும் தொழிலைக் கற்று கொடுக்கிறார். அவனது திறமையைக் கண்டு பெரும்பாலான தனது சிற்ப வேலைகளை அவனுக்கு கொடுக்கிறார். சேது சிவனின் ஊர்த்துவ தாண்டவம் சிலை வடிக்கிறான்.முத்திரை சரியாக வரவில்லை என்று அவனை தேரில் அழைத்துக்கொண்டு  ஒரு நாட்டிய மங்கை வீட்டுக்கு அழைத்து சென்று அவளை ஆடச்சொல்லி முத்திரைகளை கவனிக்க சொல்கிறார்.அவளின் மகன் பெரிய சிற்பியை அப்பா என்று அழைக்கிறான். பெரிய சிற்பி சேதுவை போய் சிற்பத்தை செதுக்கு என அனுப்பி வைக்கிறார்.பெரிய சிற்பி அவள் வீட்டிலேயே தங்கிவிடுகிறார்.சேது ஊர்த்துவ தாண்டவ சிற்பத்தை சரியாக செதுக்குகிறான். ஒரு வாரம் சென்ற பின் பெரிய சிற்பியின் மகளிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கிறான் சேது. அவள்  தன் அப்பா ஏக பத்தினி விரதன் என்றும் அவரைப்போன்ற ஒருவனையே மணப்பேன் என்கிறாள். பெரிய சிற்பி வைப்பாட்டியாக நாட்டியக்காரியை வைத்திருப்பதை அவன் சொல்லி விடுகிறான். பெரிய சிற்பியின் மனைவியும் மகளும் வீட்டைவிட்டு வெளியே போக முடிவு செய்கிறார்கள்.பெரிய சிற்பி தானே வீட்டை விட்டு வெளியேறுவதாக சொல்லி வெளியேறிவிடுகிறார். அதன் பின் அவரது சிற்ப வேலைகளை எல்லாம் சேது சிற்பியிடமே விட்டு விடுகிறார். சேது சிற்பி பெரிய சிற்பியின் மகளை மணந்து கொள்கிறான். மரணத்தருவாயில் இருக்கும்போது பெரிய சிற்பியின் மகன் வந்து கடைசியாக ஒரு முறை தனது தந்தை அவனை பார்க்க விரும்புவதாக அழைக்கிறான். சேது சிற்பியும் உடனே அங்கு அச்சிறுவனுடன் செல்கிறான். பெரிய சிற்பி தான் கனவு கண்ட கோயில்களின் வரைபடங்களை எடுத்துச் செல்லுமாறு சொல்கிறார். அவன் மறுத்துவிட்டுச் சென்றுவிடுகிறான். பெரிய சிற்பி மரணம் அடைந்தபின் பத்தாண்டுகள் கழித்து சேது சிற்பிக்கு ஒரு பெரிய மலைக்கோயிலை உருவாக்கும் பொறுப்பு வருகிறது. அக்கோயிலுக்கு முருகனின் சிலையை வடிக்கும்போது உடைந்து விடுகிறது.மீண்டும் வேறு ஒரு கல்லில் செதுக்க முயல்கிறான்.அதுவும் உடைகிறது.பெரிய சிற்பியின் வீட்டுக்கு சென்று அவர் மகன் நாகேந்திரனை தேடிக் கண்டு பிடிக்கிறான்.அவனிடம் பெரிய சிற்பியின் வரைபடங்கள் உள்ள சிற்ப சாஸ்திர கோணிப்பையை கேட்கிறான்அவன் அவற்றை எரித்துவிட்டதாகவும் ஆனாலும் அதில் உள்ள அனைத்தும் தனக்கு தெரியும் என்றும் புதிய கோயில் கட்ட தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறுகிறான். சேது அவனை அழைத்து சென்று அவன் சொல்வதுபோல் கோயிலைக் கட்டுகிறான்.கட்டி முடித்த கோயிலின் நான்காவது கும்பாபிஷேகத்தின் போது நாகேந்திரனைத்தேடி காட்டுக்குச்செல்கிறான் சேது. அங்கு நாகேந்திரன் பேசாச்சாமியாக இருக்கிறார்.பேசாச்சாமி நீ ஆணவத்தால் ஆனவன் என்கிறார். அந்த ஆணவத்தை அழிக்கத்தான் தற்போது வந்திருப்பதாக சேது சொல்கிறான்.அதனால் என்ன பயன் என்று கேட்ட நாகேந்திரனிடம் பெரிய சிற்பிக்கு செய்யும் பிராயசித்தம் என்கிறான் சேது. தான் ஒரு சிற்பியே அல்ல என்றும் சேதுவை அவமானப்படுத்தவே கோயில் கட்ட வந்ததாகவும் ஆனால் அப்புறம் பெரிய சிற்பியின்  ஓலைகளைப் பார்த்த்போது தான் கோயில் அதில் உள்ளபடியே கட்டப்பட்டிருப்பதாகவும் சொன்ன நாகேந்திரன் தான் அந்த ஒலைகளை அழிக்கவில்லை என்றும் சித்தர் தவக்குகைக்கு  போய்ப் பார் என்றும் சொல்கிறான். மலைக்கோயிலின் வரைபடம் பெரியசிற்பியின் கையெழுத்திலேயே அப்படியே இருந்தது.அந்த கோணிப்பையை எடுத்துக்கொண்டு பேசாச்சாமியை பார்க்கப்போகிறான். அங்கே யாரும் இல்லை. அந்த இடத்தில் யாரும் இருந்ததற்கான அடையாளமே இல்லை.வனம் சேது சிற்பியை உள்வாங்கிக்கொண்டது.

                தான் மிகச்சிறந்த சிற்பி என ஆணவத்துடன் இருந்த சேது சிற்பி மலைக்கோயிலை கட்ட முடியாமல்  தனது குருவின் ஓலைச்சுவடியை தேடிப் போவதும் அவருடைய மகன் சொல்படி கோயிலைக்கட்டி முடித்தபின் ஆணவம் அழிந்து குருவின் மகனைத் தேடி அலைவதுமே கதை. கடைசியில் அந்த நாகேந்திரன் என்கிற பேசாச்சாமியும் மாயமாக மறைந்து விடுகிறார்.குருவின் ஓலைகளைச் சுமந்த படி நாகேந்திரனைத் தேடிக்கொண்டே இருக்கிறார் கடைசி வரை.



     2016 ஆம் ஆண்டின் இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற கதைகளின் தொகுப்பு " கை படாமல் குச்சி ஐஸ் தயாரிப்பது எப்படி மற்றும் கப் /கோன்/ குல்ஃபி சாப்பிடுவது எப்படி  என்ற தலைப்பில் வானதி பதிப்பகம் வெளிட்டுள்ளது. விலை ரூபாய் 100/

Monday 5 June 2017

எனக்குப் பிடித்த சிறுகதைகள்

என் செல்வராஜ்

 சிறுகதை நூற்றாண்டை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நூறு எழுத்தாளர்களின் கதைகளை தொகுப்பதாக இருந்தால் இந்த பட்டியலில் உள்ள எனக்கு பிடித்த சிறுகதைகளில் பல சிறுகதைகள்  கட்டாயம் அதில் இடம்பெறும். இந்த கதைகளைத் தாண்டி இன்னும் நிறைய சிறுகதைகள் தொகுக்கப்படவேண்டும் என்று விரும்புகிறேன்.


1. தனுமை - வண்ணதாசன்
2. விடியுமா? - கு ப ராஜகோபாலன்
3.கடவுளும் கந்தசாமி பிள்ளையும் - புதுமைப்பித்தன்
4. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை
5. அழியாச்சுடர் - மௌனி
6. எஸ்தர் - வண்ண நிலவன்
7.புலிக்கலைஞன் - அசோகமித்திரன்
8. மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி
9. நகரம் - சுஜாதா
10. சிலிர்ப்பு - தி ஜானகிராமன்
11. நட்சத்திரக் குழந்தைகள் - பி எஸ் ராமையா
12. ராஜா வந்திருக்கிறார் - கு அழகிரிசாமி
13. அக்னிப்பிரவேசம் - ஜெயகாந்தன்
14. நாயனம் - ஆ மாதவன்
15. வெயிலோடு போய் - ச தமிழ் செல்வன்
16. அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்
17. கன்னிமை - கி ராஜநாராயணன்
18. சாசனம் - கந்தர்வன்
19. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா கந்தசாமி
20. புற்றில் உறையும் பாம்புகள் - இராஜேந்திர சோழன்
21. மூங்கில் குருத்து - திலீப் குமார்
22. ரத்னாபாயின் ஆங்கிலம் - சுந்தர ராமசாமி
23. இருளப்ப சாமியும் 21 கிடாய்களும் - வேல ராமமூர்த்தி
24. ஒரு இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்
25. மதினிமார்களின் கதை - கோணங்கி
26. ஒரு பழைய கிழவர் ஒரு புதிய உலகம் - ஆதவன்
27. பத்ம வியூகம் - ஜெயமோகன்
28. பாற்கடல் - லா ச ராமாமிர்தம்
29. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் -சுப்ரபாரதி மணியன்
30. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி
31. சாமியார் ஜூவுக்கு போகிறார் - சம்பத்
32. பற்றி எரிந்த தென்னை மரம் - தஞ்சை ப்ரகாஷ்
33 பைத்தியக்கார பிள்ளை - எம் வி வெங்கட் ராம்
34. ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்
35. கனவுக்கதை - சார்வாகன்
36. ஞானப்பால் - ந பிச்சமூர்த்தி
37. அந்நியர்கள் - ஆர் சூடாமணி
38. செவ்வாழை - அண்ணாதுரை
39. முள் - பாவண்ணன்
40. வேனல் தெரு - எஸ் ராமகிருஷ்ணன்
41.தோணி - வ அ இராச ரத்தினம்
42. ஒரு ஜெருசலேம் - பா செயப்பிரகாசம்
43.வெள்ளிப்பாதரசம் - இலங்கையர்கோன்
44.கேதாரியின் தாயார் - கல்கி
45.தேர் - எஸ் பொன்னுதுரை
46.நசுக்கம் - சோ தர்மன்
47.பாற்கஞ்சி - சி வைத்திலிங்கம்
48.அரசனின் வருகை - உமா வரதராஜன்
49.ஆண்களின் படித்துறை - ஜே பி சாணக்யா
50. கற்பு - வரதர்
51. சாவித்திரி - க நா சுப்ரமணியம்
52.தேடல் - வாஸந்தி
53.நீர்மை - ந முத்துசாமி
54.பூனைகள் இல்லாத வீடு - சந்திரா
55.மரப்பாச்சி - உமா மகேஸ்வரி
56.கடிகாரம் - நீல பத்மநாபன்
57.அண்ணாச்சி - பாமா
58.அரும்பு - மேலாண்மை பொன்னுச்சாமி
59.ஆனைத்தீ - ரகுநாதன்
60.இருட்டில் நின்ற ... சுப்ரமண்ய ராஜு
 61.ஏழு முனிக்கும் இளைய முனி - சி எம் முத்து
62.காசு மரம் - அகிலன்
63.சித்தி - மா அரங்கநாதன்
64.சேதாரம் - தனுஷ்கோடி ராமசாமி
65. நிலவிலே பேசுவோம் - என் கே ரகுநாதன்
66.நீர் விளையாட்டு - பெருமாள் முருகன்
67.புயல் - கோபி கிருஷ்ணன்
68.மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார் இந்திரஜித்
69.மீன்கள் - தெளிவத்தை ஜோசப்
70. ரீதி - பூமணி
 71.வேட்டை - யூமா வாசுகி
72.வைராக்கியம் - சிவசங்கரி
73. நாற்காலியும் நான்கு தலைமுறைகளும் - திலகவதி
74. சிலிர்ப்புகள் - சி ஆர் ரவீந்திரன்
75.சிறுமி கொண்டு வந்த மலர் - விமலாதித்த மாமல்லன்
76.தழும்பு - சோ தர்மன்
77.அனல் மின் மனங்கள் - தமயந்தி,
78.பலாச்சுளை - ரசிகன்
79.அ முத்துலிங்கம் - அமெரிக்காகாரி
80.குடிமுந்திரி - தங்கர் பச்சான்
81.கழிவு - ஆண்டாள் பிரியதர்ஷினி
82.மதிப்பு மிகுந்த மலர் - வல்லிக்கண்ணன்
83.மாடுகள் -இமையம்
84.நரிக்குறத்தி - ஜெகசிற்பியன்
85.நொண்டிக்கிளி - தி ஜ ரங்கநாதன்
86.பெயிண்டர் பிள்ளையின் ஒரு நாள் காலைப் பொழுது - உதயசங்கர்
87.பிளாக் நம்பர் 27 திருலோக்புரி - சாரு நிவேதிதா
88.சத்ரு - பவா செல்லதுரை
89.தபால்கார அப்துல்காதர் - எம் எஸ் கல்யாணசுந்தரம்
90.உக்கிலு - குமார செல்வா
91.உத்தராயணம் - இரா முருகன்
92.வட்டக்கண்ணாடி - தோப்பில் முகம்மது மீரான்
93.ரெயிவே ஸ்தானம் - பாரதியார்
94.அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி
95.களவு போகும் புரவிகள் - சு வேணு கோபால்
96.கலைடாஸ்கோப் மனிதர்கள் - கார்த்திகைப்பாண்டியன்
97.சின்ன சின்ன வட்டங்கள் - பாலகுமாரன்
98.கன்யாகுமாரி - த நா குமாரஸ்வாமி
99.கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக் கூடும் - ஆதவன் தீட்சண்யா
100.ஒரு சுமாரான கணவன் - ரெ கார்த்திகேசு