Tuesday 11 June 2019

அண்மைக் காலத் தமிழ் நாவல்களின் போக்குகள் - சில மதிப்பீடுகள்

எழுத்தாளர்: பா.ஆனந்தகுமார் 
கதையிலக்கிய மரபு இந்திய இலக்கியத்தில் காணப்படும் மிகப் பழமையான ஒன்று. இந்தியக் கதை மரபு இரண்டாயிரம் ஆண்டுக்காலத் தொன்மை யுடையது. என்றாலும் நவீன இந்தியக் கதை இலக்கிய மரபில் மேனாட்டுத் தாக்கத்தின் வாயிலாக நாவல் என்கிற புதிய கதையிலக்கிய வகை உருவானது.
நாவல் வகை இந்திய இலக்கியத்திற்கு இந்தியப் படைப்பாளி களுக்கு அறிமுகமான பின்னர், நாவல் என்கிற மேனாட்டு இலக்கிய வகையின் பண்புகளை அப்படியே ஏற்றுக்கொள்வதும், மேனாட்டு நாவல் இலக்கியப் பண்புகளை இந்தியப் பண்பாட்டிற்கு இயைப ‘பண்பாட்டுவயமாக்கி’ உருவாக்குவதும் என்கிற இருவகைப் போக்குகள் தொடக்ககாலம் முதல் இன்று வரை தொடர்ந்து நிலவி வருகின்றன.
இவற்றுக் கிடையில் இந்தியப் பண்பாட்டிற்குரிய சொந்த சுதேசிய கலையிலக்கிய மரபை உருவாக்கும் முயற்சியும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தமிழ் நாவலி லக்கிய வரலாற்றிலும் கடந்த நூறாண்டுகளுக்கு மேலாக மேற்சுட்டிய போக்குகள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் இயங்கி வருகின்றன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய பிரதாப முதலியார் சரித்திரம் உள்ளிட்ட தொடக்க கால தமிழ்நாவல்கள் ஆங்கில இலக்கிய நாவலாசிரியரான வால்டர் ஸ்காட்டின் சாகசக் கற்பனை (Romance) பாணியைப் பின்பற்றி அமைந்தவை.
ஆயினும் அவற்றுள் தமிழ்க்காப்பியம் மற்றும் நாட்டார் கதைப்பாடல்களின் கதைகூறும் முறைகளை - எடுத் துரைப்பியல் முறைகளைக் காணமுடிகின்றது. மேலும் அவை பழந்தமிழ் இலக்கியத்தின் அறச்சொல்லாடல் களையும் பெற்றுத் திகழ்கின்றன.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வார, மாத பத்திரிகைகளின் வெகுஜன இரசனைக்கேற்ப துப்பறியும் நாவல்கள் வெளிவந்தன. விடுதலைப்போராட்டம் தமிழ் மண்ணில் சூடுபிடித்த போது, காந்தியின் ‘கிராமத்திற்குத் திரும்பிச்செல்க’ என்கிற முழக்கத்தை ஏற்று, கிராமிய வாழ்க்கைப் பின்னணியை அதன் சமூகப் பண்பாட்டு முரண்களோடு நாவலுக்குள் கொண்டுவரும் முயற்சிகள் தீவிரப்பட்டன.
இவ்வகையில் கா.சி.வேங்கடரமணி, சங்கர்ராம், ஆர்.சண்முகசுந்தரம் ஆகியோர் குறிப்பிடத்தக்கோர். விடுதலைப் போராட்டத்தின் இறுதிக்கட்டத்தில் கல்கியின் ‘வரலாற்று சாகசக் கற்பனை’ தமிழ் வாசகரிடையே கோலோச்சியது. கல்கியைத் தொடர்ந்து அகிலனின் இலட்சியப் பாங்கு தமிழ் மேட்டிமை வாசகர்களிடையே செல்வாக்குப் பெற்றது.
இந்திய விடுதலைக்குப் பின் தமிழ் நாவல் வரலாற்றில் ருசிய நாவலிலக்கியத்தின் தாக்கத்தால் மக்சிம் கோர்க்கியின் சோஷலிச யதார்த்தவாதப் போக்கு அறிமுகமானது. தொ.மு.சி. ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’ நாவல் முதல் சோஷலிச யதார்த்தவாத நாவலாக அடை யாளப்படுத்தப்பட்டது. பஞ்சாலைத் தொழிலாளர்களின் போராட்டத்தை உயர்த்திப் பிடித்த இந்நாவல், தொழிலாளர் போராட்டத்தைப் பற்றிய முதல் நாவலாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து டி.செல்வராஜின் ‘மலரும் சருகும்’ நாவல், நெல்லை மாவட்ட நிலத் தொழிலாளர்கள் போராட்டத்தைப் படம்பிடித்துக் காட்டியது. இதன் பின்னர் ஜெயகாந்தன் தமிழ் நாவல் உலகில் செல்வாக்குப் பெற்ற நாவலாசிரியராக உயர்ந்தார். இவரது நாவல்கள் தல்ஸ்தோயின் மனித நேயப் பாங்கையும் மக்சிம் கோர்க்கியின் போராட்ட ஆவேசத்தையும் வெளிப்படுத்தின.
ஆயினும் இவரது கதைமாந்தர்கள் தனிமனிதச் சார்புநிலையை நாடு பவர்கள். ஜெயகாந்தன் வெகுஜன இலக்கிய இரசனையையும் மேட்டிமை இலக்கிய இரசனையையும் சமநிலைப்படுத்தினார். ஜெயகாந்தனைத் தொடர்ந்து பொன்னீலன், தனுஷ்கோடி ராமசாமி, கு.சின்னப்ப பாரதி, மேலாண்மை பொன்னுச்சாமி ஆகியோர் தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் யதார்த்தவாதப் போக்கினைப் பின்பற்றி வெற்றி பெற்றனர்.
இந்திய விடுதலைக்குப் பின்னர் முற்போக்குத்தன்மை கொண்ட இடதுசாரி இலக்கியப்போக்கான யதார்த்தவாதம் செல்வாக்குப் பெற்றதைப் போன்றே வட்டாரவியல் எழுத்தும் செல்வாக்குப் பெற்றன. இவ்வகையில் தி.ஜானகிராமன் தஞ்சைவட்டாரக் கிராமத்து வாழ் வியலையும் பிராமணர்களின் பண்பாட்டு வாழ்க்கை யையும் எடுத்துக் காட்டினார்.
கி.ராஜநாராயணன் கோவில்பட்டி மாவட்ட கரிசல்வட்டார வாழ்வியலைச் சிறப்புற எடுத்துக்காட்டினார். நீலபத்மநாபன், ஹெப்சிபா ஜேசுதாசன் ஆகிய இருவரும் குமரி மாவட்ட வட்டாரவியல் பாங்கை, அதன் சமூகப் பண்பாட்டு முரண்களுடன் எழுத்துக்குள் கொணர்ந்தார்.
1970களில் தமிழ் நாவல் இலக்கியத்தில் நவீனத்துவ இலக்கியப் போக்கு செல்வாக்கு பெற்றது. அதனை யட்டி பெருநகர வாழ்க்கையும் மனிதனின் இருத்தலியப் பார்வையும் தமிழ் நாவல்களில் விவரிப்புக்குள்ளாயின. அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, ஆதவன், சுந்தரராமசாமி ஆகியோர் நவீனத்துவ இலக்கியப் பார்வையுடையவர்களாக இருந்தனர்.
இந்திரா பார்த்த சாரதியிடம் நவீனத்துவப் பார்வையை இடதுசாரி மனோபாவத்துடன் அணுகும் போக்குக் காணப்பட்டது. 1980களில் தமிழ்நாவல் வரலாற்றில் பின்நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம் ஆகிய போக்குகள் செல் வாக்கு பெற்றன. கோணங்கி, எம்.ஜி.சுரேஷ், தமிழவன் ஆகியோர் பின்நவீனத்துவப் போக்கின் பிரதிநிதிகளாகச் செயல்பட்டனர். தலித்திய நாவல்களை எழுதியவர் களுள் சிவகாமி, பாமா, ராஜ்கௌதமன், இமையம் ஆகி யோர் குறிப்பிடத்தக்கோர். தலித் நாவல்கள் பெரிதும் சுயசரிதைத் தன்மையுடன் தன் எடுத்துரைப்புக்களாக அமைந்துள்ளன. இவற்றின் மொழியும் எடுத்துரைப்பியலும் எதிர் அழகியல் தன்மை கொண்டவை. பெண்ணிய எழுத்தில் சல்மா, உமாமகேஸ்வரி, சு.தமிழ்செல்வி ஆகியோர் முதன்மைப் படைப்பாளிகள் ஆவர். சல்மா தனது புனைகதைகளில் இஸ்லாமியப் பெண்களின் வாழ்க்கையையும் பாலியல் விடுதலையையும் பாடுபொருளாக்கியுள்ளார்.
உமாமகேஸ்வரி நடுத்தர பெண்களின் சமூக உளவியல் பிரச்சினைகளை குடும்ப வெளிக்குள் நின்று பேசியுள்ளார். சு.தமிழ்செல்வி கிராமப்புறத்திலிருக்கும் உழைக்கும் பெண்களின் போராட்ட வாழ்க்கையினைத் தனது நாவல்களின் பேசு பொருளாக்கியுள்ளார்.
பெண்கள் நிறம் சார்ந்தும் வர்க்கம் சார்ந்தும் ஒடுக்கப்படுவதைத் தனது மாணிக்கம், அளம், கற்றாழை முதலிய நாவல்களில் சித்திரித் துள்ளார். மேலும், குடும்பம் என்கிற அமைப்பின் அச்சாணியாகப் பெண்கள் திகழ்வதையும் நாவல்கள் எடுத்துக்காட்டுகின்றன.
யதார்த்தவாதமும் ஆவண நாவல்களும்
இருபதாம் நூற்றாண்டின் கடைசிப்பத்துக்களில் யதார்த்தவாதப் போக்கு பின்னடைந்துவிட்டது எனப் பின்நவீனத்துவவாதிகள் பேசினாலும், இருபத்தியோராம் நூற்றாண்டில் யதார்த்தவாதப் போக்கு தமிழ் நாவல் இலக்கியத்தில் பல புதிய பரிமாணங்களுடன் எழுச்சி பெற்றுள்ளது. இரண்டாயிரத்திற்குப் பின் சோசலிசம், வர்க்கப் போராட்டம் எனப் பேரரசியலைப் பேசக்கூடிய படைப்பாளிகளும் தலித், சிறுபான்மையினர், மூன்றாம் பாலினத்தார் ஆகிய விளிம்புநிலை மக்களின் நுண்ணரசி யலைப் பேசும் படைப்பாளிகளும் யதார்த்தவாத எழுத்து முறையினை நுட்பமாகக் கையாண்டுள்ளனர். பேரரசியல் பேசும் முற்போக்கு நாவலாசிரியர்கள் இக்காலப் பகுதியில் மிகப் பெரிய ஆவண நாவல்களை உருவாக்கி யுள்ளனர். இவ்வகையில் பொன்னீலனின் ‘மறுபக்கம்’, டி.செல்வராஜின் ‘தோல்’, சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ ஆகிய மூன்று நாவல்கள் குறிப்பிடத்தக்கன. இம்மூன்று நாவல்களும் சாகித்திய அகாதெமி விருது பெற்றவை. மண்டைக்காட்டு கலவரத்தை வரலாற்றுப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள பொன்னீலனின் ‘மறுபக்கம்’ நாவல் பழைய தென்திருவிதாங்கூர் பகுதியில் இன்றைய குமரி மாவட்டத்தில் 19ஆம் நூற்றாண்டு தொடங்கி 20ஆம் நூற்றாண்டு வரை நிகழ்ந்த சமூகப் பண்பாட்டுப் போராட்டங்களை ‘பனைவிளை’ என்ற கிராமத்தை மையமாக வைத்து ஆவணப்படுத்தியுள்ளது.
சமூகப் பொருளாதார உற்பத்தி உறவுகளின் ஒட்டுமொத்தமாக விளங்கும் ‘சமுதாய இருப்பு’என்கிற அடித்தளத்தைப் பற்றி அதிகம் பேசாது அவ்வடித்தளத்திலிருந்து உருவான சாதி என்கிற மேற்கட்டுமான அமைப்பின் பல்வேறு சிக்கல்களைச் சிடுக்குகளை இந்நாவல் பேசுகின்றது. அத்துடன் சாதிக்குப் பின்னால் ஒளிந்துள்ள பொருளாதார நலத்தையும், வர்க்க அரசியலையும் சுட்டிக்காட்டு கின்றது. சிலவிடத்து சாதி பற்றிய புனிதத்தையும் கேள்விக்குள்ளாக்குகின்றது.
வரலாற்றுக்குள்ளும், தொன்மங்களுக்குள்ளும், கதைகளுக்குள்ளும் உண்மையைத் தேட நாவலாசிரியர் அறைகூவல் விடுக்கின்றார். சமூகத்தில் உள்ள சகலதரப்பினரின் குரல்களும் நாவலில் இயல்பாக வெளிப்பட்டுள்ளன. சிறுதெய்வ வழிபாட்டுக்குள் நுழைந்துவிட்ட பிராமணியத்தைத் தடுத்து நிறுத்துவது இடதுசாரித் தோழரின் நிகழ்ச்சித் திட்டமாக நாவலின் இறுதியில் சித்திரித்திருப்பது விவாதத்திற்குரியதாகும்.
நாவலின் இறுதிப் பகுதியின் எடுத்துரைப்பியல், பின் நவீனத்துவ உத்தி முறைகள் சார்ந்து பூடகத்தன்மையும் புனைவு மிக்கதாகவும் அமைந்துள்ளது.
டி.செல்வராஜின் ‘தோல்’ நாவல் திண்டுக்கல் வட்டார தோல் தொழிற்சாலை தொழிலாளர்களின் சமூக அரசியல் போராட்ட வரலாற்றை ஆவணமாக்கி யுள்ளது. “வகை மாதிரி பாத்திரப் படைப்பாக்கமும் வர்க்கங்களின் சித்தரிப்பும்” கொண்டு இந்நாவல் சோஷலிச யதார்த்தவாத நாவலாக அமைந்துள்ளது. தொழிலாளர்களின் ‘முறி அடிமை’ ஒழிப்புப் போராட்ட வரலாறு திண்டுக்கல் மாவட்ட சமூகப் பண்பாட்டு அரசியல் வரலாற்றுடனும் தமிழக சமூகப் பண்பாட்டு அரசியல் வரலாற்றுடனும் உலக அரசியல் வரலாற்றுடனும் இணைந்து சித்திரிக்கப்பட்டுள்ளது.
சோஷலிசம் என்கிற பேரரசியலைப் பேசுகின்ற இந்நாவலில் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத் தொழிலாளர்கள் வர்க்க உணர்வு பெறு கின்றனர். நாவலில் இடம்பெறும் ஒசேப்பு, சங்கரன், வேலாயுதம், இருதயசாமி ஆகிய பாத்திரங்கள் தமது விதியை சமூகத்தின் விதியோடு இணைத்து புத்துயிர்க்கப் பட்ட ஆன்மாக்களாகத் திகழ்கின்றனர்.
தொழிற்சங்க அரசியல் இந்நாவலின் மையமாகத் திகழ்கின்றது. தொழிற்சங்கம் சமூக மாற்றத்திற்கு வழிகாட்ட வேண்டும் எனும் கருத்தினைக் கொண்ட இந்நாவல், திண்டுக்கல் மாவட்ட பொதுவுடைமை அரசியல் கட்சியின் வரலாற்றையும் எழுச்சியையும் பூடகமாக உணர்த்து கின்றது.
இந்நாவலின் முதன்மைப் பாத்திரங்களாகத் திகழ்கின்ற சங்கரன், வேலாயுதம் ஆகிய இருவரும் அன்றைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களாக இருந்த முறையே ஏ.பாலசுப்பிரமணியம், மதனகோபால் ஆகியோரின் மறுவுருவாக்கமே.
சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ நாவல் மதுரை நகரின் சமூகப்பண்பாட்டு அரசியல் வரலாற்றை நாயக்கர்காலம் தொடங்கி ஆங்கிலேய ஆட்சிக் காலத்தின் இறுதிவரை ஆயிரம் பக்கங்களுக்கு மேல் விரித்துரைத்துள்ளது. மதுரை நகரைப்பற்றிய இந்த ஆவண நாவலில் வரலாறு X புனைவு என்கிற எல்லைகள் தகர்க்கப்பட்டுள்ளன.
54 இயல்களைக் கொண்ட ‘முடியரசு’ எனும் முதல் பாகம் மதுரா விஜயம், பாளையப்பட்டு, யூனியன் ஜாக் எனும் மூன்று பெருந்தலைப்புகளில் மதுரை நகரின் அரசியல் வரலாற்றை விஜயநகர ஆட்சி, நாயக்கர்களின் பாளையப்பட்டு முறை, பிரிட்டிஷார் ஆட்சி என்ற கால வரிசையில் எடுத்துரைக்கின்றது.
66 இயல்களைக் கொண்ட ‘குடிமக்கள்’ எனும் இரண்டாம்பாகம் இருள் எனும் நாகம். தாது வருசத்திற்கு முன், மெஜுரா சிட்டி, பென்னிங்டன் ரோடு, ரயில் களவு, குற்றப்பரம்பரைச் சட்டம், பட்டசாமி எனும் ஏழு பெருந்தலைப்புகளில் மதுரை நகர் சார்ந்த குடிமக்களின் சமூகப் பண்பாட்டு வரலாற்றை விவரிக்கின்றது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மதுரைநகர், கல்வி, தொழில், வாணிபம், தகவல் தொடர்பு, போக்குவரத்து, நிர்வாகமுறை ஆகியவற்றில் படிப்படியாக அடைந்த மாற்றங்களை இப்பகுதி விவரிக்கின்றது. நாவலில் மையமாக நாயக்க மன்னர்களும் தாதனூர் கள்ளர்களும் இடம்பெறு கின்றனர். ஏனைய சமூக மக்கள் நாவலில் விளிம்பு நிலையிலேயே இடம்பெறுகின்றனர். ‘காவல் கோட்டம்’ எனும் தலைப்பிற்கேற்ப மதுரை நகரைக் காவல் செய்த கள்ளர் இன மரபினரின் இனவரைவியலும் பிரிட்டி ஷாரின் புதிய காவல் முறையால், அவர்கள் காவல் அதிகாரத்தை இழந்ததனால் ஏற்பட்ட முரண்களும் அவர்கள் குற்றப்பரம்பரை ஆக்கப்பட்ட சமூக வரலாறும் நாவலில் விரிவான சித்திரிப்பிற்குள்ளாக்கப்பட்டுள்ளன.
நாகமலை, கீழக்குயில்குடி அருகே இருப்பதாக சித்திரிக்கப்படும் ‘தாதனூர்’ என்ற கிராமமும், காவல் செய்யும் கள்ளர்கள் வந்து சாடும் மதுரை வடக்குமாசி வீதி இராமாயணசாவடியும் நாவலின் கதைநிகழ்வும் நடைபெறும் முக்கியக்களங்களாக நாவலின் மைய வெளியாக அமைந்துள்ளன. தாதனூர் கிராமம், நாட்டார் கதைப்பாடல்களில் திரும்பத்திரும்ப மறித்து வருகின்ற வினையலகு (அடிக்கருத்து) போன்று நாவலில் தொடர்ந்து இடம்பெற்று வாசகனுக்கு அலுப்பூட்டு கின்றது. மதுரை நகரின் அரசு அதிகாரத்திற்குட்பட்ட மையப்பகுதியும் தாதனூர் கிராமம் நீங்கலாக வேறு புறநகர்ப்பகுதிகள், கிராமங்கள் நாவலில் விவரிப்புக்குட் படுத்தப்படவில்லை. அதே போன்று நாயக்கர், கள்ளர் இனத்தாரல்லாத வேறு இனத்தார் பற்றிய பதிவுகள் நாவலில் மிக அருகியே உள்ளன. குறிப்பாக நாயக்கர் கால வரலாற்றில் மிகவும் பேசப்பட்ட மதுரைவீரனைப் பற்றி இந்த நாவலில் எந்தப்பதிவும் இல்லை. நாவலின் புனைவாக்க முறையிலும் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் இடையில் ஒரே சீரான தன்மைகள் இல்லை. காலத்தின் வரலாற்றுப் பழைமையை மெய்ப்படுத்தும் சொல்வழக்குகளும் மொழிநடையும் இந்நாவலில் கையாளப்படவில்லை.
இருபத்தோராம் நூற்றாண்டில் மார்க்சியம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய சர்வதேசப் பிரச்சினைகளுள் ஒன்றான சூழலியலை அடிப்படையாக வைத்து சாயத்திரை முதலான நாவல்களை எழுதிய சுப்ரபாரதிமணியன் அண்மையில் ‘தறிநாடா’ எனும் நாவலை வெளியிட்டுள்ளார். இந்நாவல் திருப்பூர் வட்டாரத்தில் கைத்தறி நெசவு நசிந்து விசைத்தறிகளும் பனியன் கம்பெனிகளும் நுழைந்த சமூக வரலாற்றுப் பின்புலத்தை மையமாகக் கொண்டுள்ளது. நெசவாளர் களின் வாழ்க்கைப் போராட்டத்தைச் சித்திரிக்கும் இந்நாவல் தொழிற்சங்கம் சார்ந்த வர்க்க அரசியலைப் பேசுகின்றது.
யதார்த்தவாதமும் கூறுபடுத்தப்பட்ட வாழ்க்கையும்
இருபத்தோராம் நூற்றாண்டு யதார்த்தவாத நாவல்களின் புதிய பரிமாணங்களுள் ஒன்றாக வட்டார வாழ்வியலை நோக்கியும் குறிப்பிட்ட இனத்தினரின் இனவரைவியலை நோக்கியும் செல்வதைக் காண முடிகின்றது. இவ்வகையில் வட்டார வாழ்வியலை அடிப்படையாக வைத்து கண்மணி குணசேகரன், தவசி ஆகியோர் சிறந்த நாவல்களை உருவாக்கியுள்ளனர். நடுநாட்டு (விழுப்புரம் மாவட்ட முந்திரிக்காடுகள்) வாழ்வியலைப் பின்னணியாகக் கொண்டு கண்மணி குணசேகரனின் ‘கோரை’, ‘அஞ்சலை’ ஆகிய நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. ம.தவசியின் ‘சேவல்கட்டு’ நாவல் இராமநாதபுரம் வட்டார சமூகப்பண்பாட்டு வாழ்வைப் பின்புலமாகக் கொண்டுள்ளது. ஜோ டி குரூஸின் நாவல்கள் (ஆழிகுழ் உலகு, கொற்கை) கடலோரப் பரதவரின மக்களின் இனவரைவியலை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. அண்மையில் வெளி வந்துள்ள பூமணியின் அஞ்ஞாடி நாவல் சங்கரன்கோயில் வட்டாரத்தில் நிகழ்ந்த கழுகுமலைக் கலவரத்தைப் பின்புலமாகக்கொண்டது. என்றாலும், அப்பகுதியில் வாழ்கின்ற பள்ளர்களின் இனப்பிரிவுகளுள் ஒன்றான ‘அஞ்ஞா’ பள்ளர்களின் இனவரைவியலை ஆதாரமாகக் கொண்டுள்ளது.
பெருமாள்முருகனின் அண்மைக்கால நாவல்களான கங்கணம், மாதொருபாகன் என்பன கொங்கு வட்டாரத்தின் ஒரு பண்பாட்டுப் பிரதேசத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. கரன் கார்க்கியின் ‘கறுப்பர் நகரம்’ நாவல் சென்னை நகரின் புறஞ்சேரி வாழ்க்கையை மனிதநேயத்துடன் சித்திரிக்கின்றது. ஆர்.எஸ்.ஜேக்கப்பின் ‘பனையண்ணன்’ நாவலும் குமாரசெல்வாவின் ‘குன்னி முத்து’ நாவலும் பழைய தென்திருவிதாங்கூர் பகுதியில் வாழ்ந்த நாடார் இனத்த வரின் உள் முரண்களை (பனையேறி X வியாபாரி) அவ்வட்டாரப் பின்புலத்தோடு எடுத்துரைக்கின்றன. இவ்வாறே ஸ்ரீதரகணேசனின் ‘சடையன்குளம்’ நாவலும் தூத்துக்குடி வட்டார கிராமங்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பறையரின மக்கள் ஆதிக்கச்சாதி யினரை எதிர்த்துப் போராடுவதைக் காட்டுகின்றது.
எனவே, பேரரசியல் (மார்க்ஸியம்) பேசாத யதார்த்தவாத நாவல்கள் எல்லாம் பொதுவாழ்க்கை அனுபவங்களிலிருந்து விலகி தனி இனக்குழுக்களை நோக்கிச் செல்வது இக்காலப் பகுதியின் முதன்மைப் போக்காக இருக்கின்றது. இவ்வகை நாவல்கள் ஒட்டுமொத்த சமூகத்தின் இயங்கியலை வகைமாதிரிப் படுத்துகின்ற தன்மையிலிருந்து விலகி கூறுபடுத்தப் பட்ட வாழ்க்கையின் தனித்த அனுபவங்களைப் பேசுகின்றன. யதார்த்தவாத நாவல்களில் சோஷலிசம் எனும் பேரரசியலைப் பேசக்கூடிய நாவல்கள் ஒரு வகையினதாகவும், வட்டாரம், தலித்தியம், பெண்ணியம் என்கிற விளிம்புநிலை அடையாளங்களைக் கொண்ட நாவல்கள் இன்னொரு வகையினதாகவும் அமைந் துள்ளன. விளிம்புநிலை அடையாளம் சார்ந்த நாவல் களுள் அண்மைக்காலத்தில் சிறுபான்மையினரான இஸ்லாமியரின் வாழ்வியல் சார்ந்த நாவல்களும், மூன்றாம் பாலினத்தாரான திருநங்கையரின் நாவல்களும் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளன. அறியப் படாத இஸ்லாமிய வாழ்க்கையை எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் தோப்பில் முகமதுமீரான் படம்பிடித்துக் காட்டியிருந்தார்.
21ஆம் நூற்றாண்டில் மீரான்மைதீன், தோப்பில் முகமதுமீரானைப் போன்றே குமரிமாவட்ட இஸ்லாமியரின் சமூகப்பண்பாட்டு வாழ்வைத் தமது நாவலுக்குரிய களமாகக் கொண் டிருந்தாலும் இஸ்லாமியத் தொன்மங்கள், பெண் மீதான ஒடுக்குதல் ஆகிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி யுள்ளார். ‘ஓதி எறியப்படாத முட்டைகள்’ எனும் இவரது முதல் நாவலைத் தொடர்ந்து அண்மையில் ‘அஜ்னபி’ எனும் நாவலை மீரான்மைதீன் வெளியிட்டுள்ளார். இந்நாவல், அராபிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழ்நாட்டு இஸ்லாமிய இளைஞர்களின் இன்னல்களை எடுத்துரைக்கின்றது. கீரனூர் ஜாகீர்ராஜாவின் கொங்கு வட்டார நாவல்கள் (துருக்கித்தொப்பி, கறுத்தலெப்பை, மீன்காரத்தெரு) அடித்தள இஸ்லாமிய மக்களின் - கறுத்த முஸ்லீம்களின் வாழ்வியலைச் சித்திரிக்கின்றது. இவரது ‘வடக்கே முறி அலீமா’ நாவல் இவரது வழக்கமான யதார்த்தவாத எழுத்துக்கு மாறாக பின்நவீனத்துவப் பிரதியாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. பெண்ணின் எல்லையற்ற காமத்தையும் பாலியல் விடுதலையையும் பேசும் இந்நாவலில் பின்நவீனத்துவ உத்திக்கூறுகள் இயைந்து செல்லாமல் துருத்தி நிற்கின்றன. அர்ஷியா தனது ஏழரைப் பங்காளி வகையறா, அப்பாஸ்பாய் தோப்பு ஆகிய நாவல்களில் மதுரையில் வாழும் உருது பேசும் இஸ்லாமிய மக்களின் சமூகப்பண்பாட்டு வாழ்வியலை ஆவணப்படுத்தியுள்ளார். அன்வர் ராஜாவின் ‘கறுப்பாயி என்ற நூர்ஜஹான்’ நெல்லை மாவட்ட மீனாட்சிபுரம் பகுதியில் நிகழ்ந்த இஸ்லாமிய மதமாற்றத்தையும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சமூக மாற்றங்களையும், பண்பாட்டுச் சிக்கல்களையும் விவரிக்கின்றது.
பெண்ணியமும் பாலியல் எழுத்தும்
பெண்ணியம் என்கிற பாலின அடையாள அரசி யலுக்குப் பின்னர், அண்மைக்காலத்தில் உலகளாவிய நிலையில் பாலினம் கடந்த நிலையும் (Transgender) பாலின அடையாளத்தை நீக்கும் நிலையும், பாலினச் செயல்பாட்டுக் கொள்கையாக (Queer Theory)) தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழ்ச் சூழலிலும் மூன்றாம் பாலினத்தாரின் முகமும், குரலும் உயர்ந்து வருகின்றது. திருநங்கையர்களான மூன்றாம் பாலினத்தார் தமது வாழ்க்கையனுபவங்களை - சமூகம் தரும் நெருக்கடிகளை - அவமானங்களை - புறக் கணிப்புக்களை வலியின் மொழியில் இலக்கியமாக்கி வருகின்றனர். அவ்வகையில் பிரியா பாபுவின் ‘மூன்றாம் பாலினத்தின் முகம்’ குறிப்பிடத்தகுந்த நாவலாக விளங்குகின்றது. தலித் நாவல்களைப் போன்று இதுவும் தன் எடுத்துரைப்பியலாக ((Self Narrative) அமைந் துள்ளது. அண்மையில் வெளிவந்த சு.வேணுகோபாலின் ‘பால்கனி’ நாவல் திருநங்கையரின் வாழ்வியல் நெருக்கடி களை ஒரு பெண்ணின் (அக்காள்) நோக்குநிலையில் விவரிக்கின்றது.
இருபதாம் நூற்றாண்டு தமிழ்நாவல் இலக்கியத்தில் யதார்த்தவாதமும் நவீனத்துவமும் கருத்தியல் அடிப் படையில் முரணி நின்றதைப் போல 21ஆம் நூற்றாண்டு தமிழ் நாவல் இலக்கியத்தில் யதார்த்தவாதமும் பின் நவீத்துவமும் முரணி நிற்கின்றன. வேறுவகையில் சொல்வதானால் யதார்த்தவாதம், பின்நவீனத்துவம்
என்ற இரு எதிர் முரண்களுக்கிடையிலான இயங்கியல் வளர்ச்சியில் தமிழ்நாவல் இலக்கியம் வளர்ந்து வருகின்றது; அடுத்த கட்டத்திற்கு நகர்கின்றது. பின் நவீனத்துவமானது தமிழ்நாவல் இலக்கியத்தில் வெவ்வேறு முகங்களில், வெவ்வேறு பரிமாணங்களில் தன்னை வெளிப்படுத்தியுள்ளது. பாலியல் எழுத்து, பிரதிகளின் ஊடாட்டம், மாந்திரிக எதார்த்தம், மொழிச் சிதறடிப்பும் விளையாட்டும். அறிவியல் கதையாடல், மர்மக் கதையாடல் என்பனவற்றைக் கொண்டு தமிழ் நாவலிலக்கியத்தில் பின்நவீனத்துவ பிரதிகள் தயாரிக்கப் படுகின்றன. பாலியல் எழுத்திற்கு எடுத்துக்காட்டாக சாருநிவேதிதாவின் ஜீரோ டிகிரி, காமரூபக் கதைகள், தேகம், எக்ஸில் ஆகிய நாவல்கள் அமைந்துள்ளன. சாரு நிவேதிதாவைத் தொடர்ந்து அண்மையில் வாமுகோமுவின் நாவல்களும் அமைந்துள்ளன. இவரது தொடக்ககால நாவல்கள் காமத்தின் இயல்பான பேசவேண்டிய பகுதியைச் சித்திரித்தாலும் பிற்கால நாவல்கள் சாருநிவேதிதாவைப் போன்றே பாலியல் வக்கிரங்கள், பாலியல் பிறழ்வுகள் ஆகியவற்றைப் பேசின. மங்களத்து தேவதைகள், கள்ளி, காந்தாமணியின் இன்னபிற கதைகள் ஆகிய இவரது நாவல்கள் இவ்வகையில் குறிப்பிடத் தக்கன.
மாந்திரிக யதார்த்தம் : மர்மமும் வரலாறும்
யுவன் சந்திரசேகரின் நாவல்கள் மாந்திரிக யதார்த்தவாத பாணியில் அமைந்துள்ளன. இவரது பகடையாட்டம், குள்ளச்சித்தன் சரித்திரம், கானல் நிலவில் ஆகிய நாவல்கள் வாழ்வின் அபத்தத்தையும் நினைவுக்கும் இருப்புக்குமான ஊடாட்டத்தையும் எடுத்துரைக்கின்றன. பிரேம்ரமேஷின் ‘சொல் என்றொரு சொல்’ நாவல், பின்நவீனத்துவத்தின் பிறழ் எழுத்து முறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. மையமற்ற தன்மையும், தர்க்கத்தை மறுதலிக்கும் தொடர்ச்சியற்ற தன்மையும், பல்வேறு பிரதிகளின் ஊடாட்டமும் இந்நாவலில் பின்நவீனத்துவக் கூறுகளாக இடம்பெற்றுள்ளன. அதேநேரத்தில் தமிழ்த்தொன்மம் குறித்த மறுவாசிப்பும் இந்நாவலில் இடம் பெற்றுள்ளது.
எம்.ஜி.சுரேஷின் யுரேகா என்றொரு நகரம், 37, சிலந்தி ஆகிய மூன்று நாவல்களும் மர்மமும் அறிவியலும் நிறைந்த கதையாடல்களாக அமைந் துள்ளன. அந்தமான் அருகே புதிதாகத் தொல்லியல் அறிஞர்களால் அறிவியல் தொழில்நுட்பத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட யுரேகா என்ற நகரம் கடைசியில் பன்னாட்டு முதலாளித்துவத்தின் சூழ்ச்சியால் பொய்யாக உருவாக்கப்பட்டதென அறியப்படுகிறது. பன்னாட்டு முதலாளித்துவம் தனது வர்க்க நலனுக்காக தொழில் நுட்பத்தையும் தகவல் தொடர்பையும் தவறாகப் பயன்படுத்துவதை இந்நாவல் துப்பறியும் நாவலுக்குரிய விறுவிறுப்புடன் எடுத்துரைக்கின்றது. வரலாறு அதிகாரம் சார்ந்து கட்டமைக்கப்படுவதையும் இந்நாவல் உணர்த்துகின்றது. இவரது ‘37’ எனும் நாவல் வேற்றுக்கிரக மனிதர்கள் பற்றிய புனைவாக அமைந் துள்ளது. இந்நாவல்களைப் போன்றே தமிழவனின் ‘ஜி.கே. எழுதிய மர்ம நாவலு’ம் துப்பறியும் நாவலுக்குரிய மர்மத்தன்மையுடனும் விறுவிறுப்புடனும் அமைந் துள்ளது. ஆயின் அறிவியல் புனைவுக்கு மாறாக வரலாறு குறித்த புனைவு இந்நாவலில் இடம்பெற்றுள்ளது. சுருங்கை எனப்படும் பழைமையான நகரத்தைக் கதைக் களமாகக் இந்நாவல் கொண்டுள்ளது.
கிரேக்க கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ள இந்நகரம் பல்வேறு கோயில்களும் அரசமாளிகைகளும் மர்மப் பாதைகளும் நிறைந்தவையாக அமைந்துள்ளது. இந்நகரில் நடக்கும் கொலையைத் துப்புத்துலக்குவதற்கு வந்த நபரே கடைசியில் அந்நகரில் நடக்கும் பல கொலைகளுக்குக் காரணமாக இருப்பது நாவலின் இறுதியில் விடுவிக்கப்படுகின்றது. புத்த சமயத்தாரால் ஆளப்பட்ட நாடு என்ற கருத்துக்கு மாற்றான வரலாற்றை எழுத முயலும் யுனசேனன், நாவலில் கொல்லப்படுகின்றான். மத அதிகாரத்தின் அரசியல் விளையாட்டு வரலாறெழுதியலிலும் தொடர்வதை இந்நாவல் நுட்பமாக உணர்த்துகின்றது. அதே சமயத்தில் மதவாத அரசியலால் இலங்கையில் பழைய தமிழ் வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்படுவதையும் இந்நாவல் நினைவுபடுத்துகின்றது. இந்தியாவில் மதவாத அரசியல்வாதிகள் திராவிட நாகரிகமான சிந்துவெளி நாகரிகத்தை ஆரிய நாகரிகமாக மாற்றிக்காட்ட செய்கின்ற முயற்சிகளையும் (காளை வடிவத்தை குதிரை வடிவமாக்கல்) தமிழவனின் இந்நாவலும் எம்.ஜி.சுரேஷின் ‘யுரேகா என்றொரு நகரமும்’ மறைமுகமாக வாசகனுக்கு நினைவுபடுத்துகின்றன. வெகுஜன அரசியலிலுள்ள துப்பறியும் நாவல்களில் விறுவிறுப்பும் மர்மமுமே நிறைந்திருக்குமே அல்லாது இந்நாவல்களைப் போன்ற சமூக உள்ளடக்கமும் பூடக வாசிப்பும் புதிய எடுத்துரைப்பியலும் அவற்றுக்குக் கிடையாது.
பிறழ் எழுத்தும் மொழிச் சிதறடிப்பும்: தமிழவன்
பிறழ் எழுத்துமுறைக்கும் மொழிச் சிதறடிப்பிற்கும் புனைவுலகப் பயணத்திற்கும் காட்டாக தமிழவனின் ‘சரித்திரத்தில் படித்த நிழல்கள்’ நாவல் அமைந்துள்ளது. நாட்டார் கதை பாணியில் துதி, சொல்வோன் கூற்று என்பதாகத் தொடங்கும் இந்நாவல், இமை மூடியபடி பார்க்கும் பாக்கியத்தாயின் சரித்திரத்தை முதலில் எடுத்துரைக்கின்றது. தொடர்ந்து அவளது கணவன் தெகிமொலோ அரசனான பச்சைராஜனின் சரித்திரம் எடுத்துரைக்கப்படுகின்றது. ராஜபோஜனம், சூனியக் குதிரையில் பிறந்தவன் கதை, கர்ணா பொக்கிசத்தின் கதை என ஒவ்வொரு அத்தியாயமும் தலைப்பைப் பெற்று மரபான எடுத்துரைப்பியலைக் கொண்டுள்ளது. பழைய தேவதைக்கதையைப் போன்று அமைந்தாலும் நிகழ்கால வரலாறும் நாவலுக்குள் ஊடாடத்தான் செய்கிறது. தெகிமொலோ தேசம் தமிழ்த்தேசத்தையும் தெகிலோ மொழி நூலக எரிப்பு யாழ்ப்பாண நூலக எரிப்பையும் ‘ஹேராம்’ என்ற உச்சரிப்பும் கைத்தடியும் காந்தியையும் நினைவுபடுத்துகின்றன. பல்கலைக்கழக மொழித்துறையும் நாவலில் ஓரிடத்தில் சுட்டப் படுகின்றது.
கதைக்குள் காலம் சீட்டுக்கட்டுப்போல் முன்பின் செருகப்படுவதாகவும், பொலபொலவென உதிர்வதாகவும் நாவலாசிரியர் காட்டுகின்றார். பழைய சரித்திரக்கதை போன்ற புனைவுக்குள் நிகழ்கால அர்த்தத்தைப் பொதிய வைக்க நாவலாசிரியர் முயற்சித்துள்ளார். ஆயின் புனைவு வாசகனிடம் எந்த விதமான கதையனுபவத்தையும் வாழ்க்கையனு பவத்தையும் வாசக அனுபவத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக வாசகனைப் பற்றி எந்தவிதமான அக்கறையு மில்லாத இந்தப் பிரதி படைப்பாளியின் மேதா விலாசத்தைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. இதயத்தால் எழுதப்படாது மூளையால் செய்யப்பட்ட இந்த நாவல், பின்நவீனத்துவ இலக்கணம் கொண்ட நாவலாக இருக்கலாம். இலக்கியம் கண்டதற்குத்தான் இலக்கணம் இயம்பப்படும். ஆனால், இந்நாவலோ இலக்கணத்திற்காக உருவாக்கப்பட்ட இலக்கியப் பிரதியாக அமைந்துவிட்டது. பழைய யாப்பு, அணி இலக்கண நூல்களில் விவரிக்கப்பட்ட இலக்கணத்திற் கேற்ற எடுத்துக்காட்டுப் பாடல்கள் கிடைக்கவில்லை யெனில் இலக்கணக்காரர்கள் தாமே சொந்தமாக செய்யுட்களை எழுதிச் சேர்ப்பர். அதைப்போன்று இந்நாவலும் பின்நவீனத்துவ நாவல் இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாகக் காட்டுவதற்கு செய்யப்பட்ட நாவலாக இருக்கின்றது. ஆயின், முதற்பதிப்பில் பின்நவீனத்துவ நாவல் என்ற முத்திரையைத் தாங்கிய நாவல் இரண்டாம் பதிப்பில் பின்காலனித்துவ நாவலாக மாறிய அதிசயம்தான் சாதாரண வாசகர்களுக்கு விளங்கவில்லை. பின்நவீனத்துவப் பிரதி, ‘நகரும் பிரதி’ என்பதால் ஒருவேளை முதற்பதிப்பிலிருந்து இரண்டாம் பதிப்பிற்கு நகரும்போது வேறொரு வகையான பிரதியாக மாறிவிட்டதோ என்னவோ!
அண்மையில் வெளிவந்த தமிழவனின் ‘முஸல்பனி’ நாவலும் இத்தகையதே. இந்நாவல் சரித்திரத்தில் படிந்த நிழல்கள், நாவலின் இரண்டாம் பாகம் எனக் கருதத்தக்க வகையில் அமைந்துள்ளது. சரித்திரத்தில் படிந்த நிழல்கள் நாவலைப்போன்று இந்நாவலிலும் தெகிமோலா அரசர் ஒருவர் வருகிறார். பாத்திரங்களை விநோதப்படுத்துதல் இந்நாவலிலும் இடம்பெறுகின்றது. தெகிமொலா அரசர் அத்திரிகப்பா எட்டுத் தலைகள் கொண்டவன். அத்திரிகப்பாவின் மகள் முஸல்பனி இந்நாவலின் கதைத்தலைவி. அவளது இடதுகால் வலது காலைவிட மூன்று அங்குலம் குறைவுடையது. முஸல்பனி மண்ரா பட்டணத்தை ஆள்பவள். தெகிமொலாவைத் தமிழ் என்னும் மண்ரா பட்டினத்தை மதுரைப்பட்டிண மென்றும் மூளையுள்ள வாசகன் தனது மூளையைக் கசக்கிப் பிழிந்து புரிந்து கொள்ளலாம். இதேபோன்று எட்டாவது இயலில் வரும் ஆதி இலக்கணக்காரனைத் ‘தொல்காப்பியன்’ என்றும் அவன் கட்டிய மூன்று கட்டிடத்தை எழுத்து, சொல், பொருள், என்ற மூன்று அதிகாரங்களாகவும் ‘ஐந்து பாத்திகள் கட்டி பிரித் திருக்கும் பயிர் போன்ற மக்கள்’ என்பதில் ஐந்து பாத்தி களை ஐந்துவகை ஜாதிப்பிரிவுகளாகப் புரிந்துகொள்ள வேண்டுமென வாசகன் நிர்பந்திக்கப்படுகிறான். இந் நாவலின் வாசகன், தமிழ் கற்றறிந்த ஆய்வாளராகவோ பேராசிரியராகவோதான் இருக்கமுடியும்.
இந்நாவலின் 23-ஆவது இயலான ‘எல்லோரும் செய்த யுத்தம்’ அண்மையில் இலங்கையில் நடைபெற்ற ஈழ விடுதலைப் போரை நினைவுபடுத்துகின்றது. 24ஆவது இயலின் இறுதியில் இடம்பெறும் அடிக்குறிப்பில் இது முள்ளி வாய்க்கால் போராக ஆசிரியரால் சுட்டப்படுகின்றது. நாவல் வாசிப்பு நாம் முன்னர் குறிப்பிட்டதுபோன்று வாசகனுக்கு எந்த அனுபவத்தையும் ஏற்படுத்தாது, நாவலாசிரியரின் அறிவுஜீவித்தனத்தையே பறை சாற்றுகிறது. அத்திரிகப்பா, முஸல்பனி போன்ற ‘தூய’ தமிழ்ப்பெயர்கள் வாசகனைத் துரத்தியடிக்கின்றன. இந்நாவலின் முன்னுரையில் ஈழத்தமிழர் படுகொலையைப் பேசத்தக்க வலிமையான மொழியில், கற்பனையில், புனைவில் எதிர்மறைக் கேலியாக, பிரதிகளின் ஊடாட்ட மாக, மொழியையும் படிமத்தையும் கலந்து போர்ஹே, இட்டாலோ கால்வினோ பாணியில் எழுதியிருப்பதாக வாசகனை தமிழவன் மிரட்டுகிறார். போர்ஹே, பூடகமாக புனைவின் மொழியில் தனது நாவல்களை எழுதியிருப்பதற்கு ஒரு நியாயம் இருக்கின்றது. இலத்தீன் அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிரான கருத்தியலை அங்கு சுதந்திரமாகப் பேச இயலாது. ஆனால், ஈழத்தமிழர் விடுதலைக்கு தமிழ்நாட்டில் அரசியல் இயக்கங்களே போராட்டங்கள் நடத்திக்கொண்டிருக்கும்போது, மேலை நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் யதார்த்தத்தின் மொழியில் தமிழ்நாவல்களைக் கட்டமைக்கும்போது, தமிழவன் மட்டும் புனைவுகளுக்குள் புதைந்து கொள் வதன் இரகசியம் நமக்குப் புரியவில்லை.
மொழிவிளையாட்டும் வாசகமறுப்பும்: கோணங்கி
பின்நவீனத்துவத் தமிழ் நாவலாசிரியர்களுள் நாவலை மொழியின் விளையாட்டுக் களமாகக் கையாளு கிறவர், கோணங்கி ஆவார். பாழி, பிதுரா என்கிற வரிசையில் அண்மையில் வெளிவந்துள்ள இவரது ‘த’ நாவலும் பின்நவீனத்துவப் பிரதியாக அமைந்துள்ளது. ஆயிரம் வயதான ஆமை பிரகஸ்பதியுடன் உரையாடல் செய்வதாக இந்நாவலின் நூன்முகம் அமைந்துள்ளது. இந்நான்முகத்தில் ‘த’ என்பது இயற்கை நிகழ்ச்சிகளால் வகுக்கப்படும் குறுக்கும் மறுக்குமான பாதைகள் என்று நாவலாசிரியரால் புலப்படுத்தப்படுகின்றது. இதே போன்று சூதுப்பலகையாக கதாபாத்திரங்களை வைத்து இந்நாவலை எழுதியுள்ளதாக நாவலாசிரியர் குறிப்பிடு கின்றார். நாவலின் முதல் இயல் கழுகின் நகம் பொருந்திய இறக்கைகள் கொண்ட பிணவசியக் காரனால் எழுதப்பட்டுள்ளது. ‘காலரா ரயில்’ எனும் 97ஆவது இயலுடன் முடியும் இந்த நாவல், நாற்கரச் சாலைகளை உருவாக்கிய உலக முதலாளித்துவம் இந்தியாவில் மண்ணின் மைந்தர்களான பழங்குடி களையும் விவசாயிகளையும் கொன்றொழிப்பதையும் அதற்குப் பின்புலமாக வேதாந்தா போன்ற அமெரிக்க பண்பாட்டு நிறுவனங்கள் இருப்பதையும் முதல்இயலில் குறிப்பாகச் சுட்டுகின்றது.
நாவலின் பெரும்பான்மை யான இயல்கள் பிரிட்டிஷாரின் காலனியஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் இராமநாதபுரம், செட்டி நாட்டுப் பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்து மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை முதலான தென்கிழக்காசிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்ற வரலாற்றையும் அவர்கள் அடைந்த இன்னல்களையும், கங்காணிகளின் கொடுமைகளையும், காலரா முதலான கொடிய நோய்களின் தாக்கத்தையும் விவரிக்கின்றது. இவற்றி னூடாக தஞ்சையை மையமாக வைத்து காலனிய ஆட்சிக்கால ஓவிய (கலங்காரி), இசை (வீணை, கருநாடக இசை) வரலாறும் விவரிக்கப்படுகின்றது. நாவலின் எடுத்துரைப்பியல் மாந்திரிக யதார்த்தத்தின் புனைவுடனும் பிரதிகளின் ஊடாட்டத்துடனும் அமைந்துள்ளது. நாவலில் பைபிளில் வரும் மகதலேனா, மணிமேகலையின் ஆபுத்திரன், புத்தர், கபிலர், நாயக்கர் காலத் தெலுங்குப் பெண்கவிஞர் முத்துப்பழனி, பர்மா காங்கிரஸ், சயாம் மரணரயில், கழுவேற்றப்பட்ட சமணர்கள், சரபோஜி மன்னர், வள்ளலார், பாரதி, ஜி.நாகராஜன், ப.சிங்காரம், கிழக்கிந்திய கும்பெனியர் என காலம் வெளி கடந்து மனிதர்கள், சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அதே போன்று நாவலின் கதைக் களமும் மதுரை, தஞ்சை, சென்னை, ஒடிஷா, பர்மா, இலங்கை, மலேசியா எனப் பல வெளிகளில் இயங்கு கின்றது.
முக்கூடற்பள்ளுவில் இடம்பெறும் நெற் பட்டியல் (பக். 3,4) ஈங்கையுரை கானம், ஈனில் முதலான சங்க இலக்கியச் சொற்களும் நாவலில் இடம்பெற்று உள்ளன. நாவலின் இறுதிப்பகுதியில் இடம்பெறும் “செத்தவர்களை சாவோர் சுமந்து கீழே விடுகிறார்கள்” என வரும் வரி ‘செத்தாரைச் சாவார் சுமப்பர்’ எனும் நாலடியார் பாடலை நினைவூட்டுகிறது. ‘த’ என்பது மூங்கில் ஒலியாக, தனுஷ்கோடி கடலாக, ஒரு நகராக, வெவ்வேறு விதமாக நாவலில் உருமாறுகின்றது. பாரதி காக்கைக் கவிஞன் என நாவலின் ஓரிடத்தில் குறிப்பாகச் சுட்டப்படுகின்றான். தினகரன், பாஸ்கரன், எட்டைய புரம் சுப்பையா ஆகியோர் இந்நாவலின் கதை மாந்தர் களாகவும் கதை சொல்பவர்களாகவும் திகழ்கின்றனர். இந்நாவலில் மையங்கள் எதுவும் இல்லை என்றாலும், மையம் சிதறடிக்கப்பட்டுள்ளதென்றாலும் நாவலில் இறுதி இயலில் இடம்பெறும் ‘உலோகச்சேவல் பிரஜை களை விழுங்கும் அகதிப்புராணம்’ எனும் தொடருக் கேற்ப இந்நாவலின் மையமாக ‘அகதிப் புராணம்’ (உலகத் தமிழர்களின் அகதிப்பயண வரலாறு) அமைந்துள்ளது.
பழந்தமிழ்ச் சொற்களின் பயன்பாடும் பழந்தமிழ் இலக்கிய நடையும் பல்பிரதிகளின் ஊடாட்டமும் சாதாரண வாசகனுக்கு அந்நியமானவை. மட்டுமல்லாது மொழிநடை கவிதைத்தன்மையில் அமைந்து வாசகன் மனதில் வெவ்வேறு படிமக் காட்சிகளை உருவாக்கு கின்றது. ஆயின், கதையின் எடுத்துரைப்பியலில் வெவ்வேறு வகையான முரண்பட்ட படிமங்கள் அடுக்கப்படும்போது வாசகன் கதையுலகிற்குள் தொடர்ந்து பயணம் செய்ய முடியாமல் வழிமறிக்கப் படுகின்றான். நாவலாசிரியர் நாவலின் நூன்முகத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல நாவலின் பாதை குறுக்கும் மறுக்குமாக இருப்பதால் வாசகன் வெளியேற வழியின்றி இடியாப்பப் பின்னல்களுக்குள் சிக்கித்தவிக்க நேரிடு கின்றது. திறமையுள்ள சில வாசகர்கள் மட்டுமே குறுக்குமறுக்குப் பாதைகளைக் கடந்து நாவலின் இறுதிவரை பயணம் செய்ய முடியும். சாதாரண வாசகர்கள் முதல் அத்தியாயத்திலேயே நாவலைவிட்டு வெளியே திரும்பும் அபாயமும் இருக்கின்றது. இதுவே திறனாய்வாளர் முருகேசபாண்டியன், கோணங்கியின் நாவல்களைப் பற்றி ‘வாசக மறுப்புப் பிரதி’ என்று விமர்சிப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
சமூக யதார்த்தமும் பின்நவீனத்துவமும்
சமூக யதார்த்தத்தையும் பின்னை நவீனத்துவத் தையும் புதிய எடுத்துரைப்பியல் பாணிகளையும் ஒன்றிணைத்துக் கையாளக்கூடிய படைப்பாளிகளாக எஸ்.ராமகிருஷ்ணனும், சு.வேணுகோபாலும் விளங்கு கின்றனர். எஸ்.ராமகிருஷ்ணனின் உப பாண்டவம், உறுபசி, யாமம் ஆகிய நாவல்கள் புதிய எடுத்துரைப் பியல் தன்மைகளைப் பெற்றிருந்தாலும் தனிப்பட்ட வாழ்வின் சமூகத்தின் அறியப்படாத பகுதிகளை வெகு நேர்த்தியாக எடுத்துரைக்கின்றன சு.வேணுகோபாலின் அண்மையில் வெளிவந்த ஆட்டம், உயிர்நிலம் ஆகிய இருநாவல்களும் உலகமயமாக்கலும் பன்னாட்டு முதலாளித்துவமும் தமிழக விவசாயிகளின் வாழ்க்கை ஆதாரத்தை அடியோடு பெயர்த்தெறிந்ததை வாழ்வின் உக்கிரத்துடன் விவரிக்கின்றன.
விநாயக முருகனின் ‘ரா¦ஜீவ்காந்தி சாலை’ என்கிற நாவல் இதுவரை நாம் அறிந்திராத மென்பொருள் உலகின் உள்முரண்களை நாவலின் அடிப்படைப் பிரச்சினையாகக் கையாண்டுள்ளது. சென்னையின் நிலவெளியை, சமூகவெளியை, பண்பாட்டு வெளியை மென்பொருள் உலகம் எங்ஙனம் சிதைத்துள்ளது - சீரழித்துள்ளது என்பதை நாவலாசிரியர் விளக்கியுள்ளார். மென்பொருள் உலகம் மட்டுமல்லாது அதனருகே முரண்பட்டு நிற்கக்கூடிய சாமானியர்களின் சேரிப் புறங்களும் நாவலில் சித்திரிக்கப்பட்டுள்ளன. மென் பொருள் உலகத்தின் மைய அச்சாக விளங்கும் தொழில்நுட்பங்கள் ஏராளமான ஊதியத்தைப் பெற்றாலும் ஊதியத்தின் பெரும்பகுதி அவர்களது வசிப்பிட, வாகனக் கடன்களுக்குப் போய்விட அவர் களும் பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித்தவிப்பதைக் காட்டுகின்றார். சைபர் வெளிக்குள் இயங்கும் இத் தொழில்நுட்பர்கள் தங்களது மானுட உணர்ச்சிகளை இழந்து எல்லா உணர்வுகளையும் கணிப்பொறியின் மொழியிலேயே புரிந்துகொள்கின்றனர். நவீன முதலாளித் துவம் மனித உடலை பண்டமாக்கி கசக்கிப்பிழிந்தது. பின்நவீனத்துவ குழும முதலாளித்துவம் மனித உடலை மட்டுமல்லாது மனித ஆன்மாவையும் சிதைத்து வருவதை இந்நாவலில் இடம்பெறும் கதை மாந்தர்கள் உணர்த்துகின்றனர்.
தொழில்நுட்பர்கள் கொம்பு சீவிவிடப்படும் காளைகளைப்போல் ‘தன்முனைப்பு’ என்கிற அகம் சீவப்பட்டு அலைந்து திரிகிறார்கள். வாழ்வியல் தேவைகளுக்காகவும் பணியிடத்தைத் தக்க வைப்பதற்காகவும் எல்லாவிதமான சூழ்ச்சிகளும் புரிகிறார்கள். வாழ்வியல் விழுமியங்கள் எதுவுமற்ற - அறவுணர்வே இல்லாத இயந்திரங்களான இவர்களுள் சிலர் தன்னையே மாய்த்துக்கொள்கின்றனர். மென் பொருள் உலகில் பெண்களின் கற்பு குறித்த கவலை இல்லை. பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். மனித சமூகத்தின் உன்னத வளர்ச்சியாகக் கருதப்படுகின்ற ‘மென்பொருள் உலகு’ திரும்பிச்செல்ல முடியாத பாதையாகவும், வெளியேற முடியாத முட்டுச்சந்தாகவும் திகழ்வதை நாவலின் இறுதிப்பகுதி எடுத்துரைக்கின்றது. தொழில்நுட்பர்கள் உடல்உழைப்பில் ஈடுபடும் பாட்டாளிகள் இல்லை யென்றாலும் அவர்களது மூளையும் மூளையின்வழி இயங்கும் உடலும் பெரும் மூலதனத்தால் சுரண்டப் படுகின்றது. பின்நவீனத்துவ முதலாளித்துவ உலகில் வர்க்கப் போராட்டம் என்பது முதலாளிகளுக்கும் பாட்டாளிகளுக்குமான முரணாக இல்லாமல் மூலதனத் திற்கும் உழைப்பிற்குமான முரணாக விளங்குவதை இந்நாவல் வழி அறியமுடிகின்றது. ஆயினும் நாவலின் எடுத்துரைப்பின் சரிபாதி பாலியல் எழுத்தாக அமைந்து அதன் சமூகக்கூர்மையை மழுங்கடித்துவிட்டது.

No comments:

Post a Comment